மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டின் அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் செய்யும் இடைவிடாத பிரச்சாரத்திற்கு முற்றிலும் மாறாக, கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மேலும் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடையும்.
அதிக தொற்றும்தன்மை, தடுப்பூசி-எதிர்ப்புத் திறன் மற்றும் நோய் உருவாக்கும் தன்மை கொண்ட ஓமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகள் விரைந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகைகளாக மாறி வருவதுடன், கோவிட்-19 நோய்தொற்று மற்றும் இறப்புக்களின் அடுத்த எழுச்சிக்கு அச்சுறுத்துகின்றன. அதே நேரத்தில், சீனாவிற்கு வெளியே உள்ள ஒவ்வொரு உலக அரசாங்கமும் வைரஸ் பரவலைக் கண்காணிப்பதற்கும் தணிப்பதற்குமான உள்கட்டமைப்பை அகற்றியுள்ள நிலைமைகளின் கீழ் இது நடைபெறுகிறது.
ஒரு மூழ்கும் கப்பலின் கேப்டன் அனைத்து உயிர்காக்கும் கவசங்களையும் கப்பலில் இருந்து வெளியே எறியுமாறு கோருவதற்கு ஒப்பான ஒரு செயல்பாடாக, தொற்றுநோய் விவகாரத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முகக்கவசக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, பரிசோதனைகள் கடுமையாக குறைக்கப்பட்டன, தொடர்புத் தடமறிதல் திட்டங்கள் அகற்றப்பட்டன, மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தனிமைப்படுத்துதல் மற்றும் பயணங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் பெரிய நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆளும் உயரடுக்கின் குறிக்கோள் “கோவிட் நோயைப் பற்றி கேட்காதே, கோவிட் நோயைப் பார்க்காதே, எதுவும் செய்யாதே” என்பதாக மாறிவிட்டது.
கோவிட்-19 மறைந்துவிட்டதாகக் கூறப்படும் இந்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான உலகத்திற்கும், ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கான மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உலகளவில் ஆயிரக்கணக்கானோர் இறக்கும் மற்றும் ஏராளமானோர் நெடுங்கோவிட்டால் பலவீனமடையும் நிஜ உலகத்திற்கும் இடையே ஒரு நம்பமுடியாத இடைவெளி உள்ளது. உலக அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் இந்த சதியானது, கோவிட்-19 தரவுகளை கையாண்டதுடன், அது பற்றிய அறிக்கைகளை நிறுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சிகளில் ஈடுபட்டது உட்பட ஒரு பாரிய மூடிமறைப்பு செயலைச் செய்து சீரழித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பிரச்சாரம் வைரஸை சர்வசாதாரணமாக பரவ விட்டுவிடும் வகையில், மில்லியன் கணக்கான மக்கள் இப்போது முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிய தவறாக வழிநடத்துகிறது.
கடந்த ஏழு மாதங்களாக முதலாளித்துவ அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட குற்றவியல் கொள்கைகள், கோவிட்-19 உலக சமூகத்தின் நிரந்தர அம்சமாக மாறுவதற்கு களம் அமைத்துள்ளன, அதாவது மீண்டும் மீண்டும் உருவாகும் தொற்றுநோய் அலைகள், இறப்புக்கள், மற்றும் நெடுங்கோவிட் நோயினால் ஏற்படும் வெகுஜன பலவீனம் ஆகியவை 'புதிய இயல்பு' என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொற்றுநோயைத் தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்டது, மேலும் எங்கள் வாசகர்களில் பலர் கோவிட்-19 நோயால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள அல்லது இறந்துவிட்ட பல நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக பணியாளர்கள் அல்லது அயலவர்களைப் பற்றி அறிந்திருப்பார்கள்.
தொற்றுநோயை முன்னோக்காக பார்த்தால், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய சீற்றத்தைத் தூண்டிய பள்ளி துப்பாக்கிச் சூடுகளை விட இது மிகவும் பயங்கரமானதாகும். இது ஊடகங்களில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை விட அதிகமான இளைஞர்கள் கோவிட்-19 நோயால் இறக்கின்றனர்.
டெக்சாஸின் உவால்டேயில் நடந்த கொடூரமான படுகொலை குறித்து சீற்றம் உணரப்பட்டது, அங்கு பொலிசார் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதே அடிப்படைக் கொள்கை உலக அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் பெரிதும் பின்பற்றப்படுகிறது, அதாவது உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய் தொற்றுவதற்கும், அமெரிக்காவில் 1,500 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் கொன்று குவிக்கப்படுவதற்கும் காரணமான பள்ளிகளை மீளத் திறக்கும் கொள்கைகளை அவர்கள் நனவுடன் செயல்படுத்தியுள்ளனர்.
இந்த ஆழமடைந்துவரும் பேரழிவை நிறுத்துவதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கம் தொற்றுநோயின் அரசியல் படிப்பினைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும், மற்றும் தற்போது அவர்களுக்கு முன்னால் உள்ள ஆபத்துக்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழில்துறையிலும் தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட வெகுஜன இயக்கம் வளர்ச்சியடைவதன் மூலம் மட்டுமே, உலகளவில் SARS-CoV-2 ஐ ஒழிப்பது, தொற்றுநோயை நிறுத்துவது மற்றும் பொது சுகாதாரத்தின் பரந்த விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைப்பது ஆகியவை சாத்தியமாகும்.
ஓமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகளின் ஆபத்துக்கள்
கடந்த நவம்பரில் இருந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஓமிக்ரோன் துணைமாறுபாடுகள் உள்ளன. டிசம்பர் பிற்பகுதியில் இருந்து, BA.1 மற்றும் BA.2 துணைமாறுபாடுகளால் உலகளவில் 3.6 மில்லியன் அதிகப்படியான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக எக்னாமிஸ்ட் செய்தியிதழ் தெரிவித்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில், ஓமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகள் தென்னாபிரிக்காவில் விரைந்து ஆதிக்க வகை விகாரங்களாக மாறின, மக்கள்தொகையில் 98 சதவிகிதம் பேருக்கு தொற்று அல்லது தடுப்பூசியினால் நோயெதிர்ப்பிகள் இருந்தாலும், நோய்தொற்று மற்றும் இறப்புக்களின் மற்றொரு அலையை அவை உருவாக்கியது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த எழுச்சியின் போது வயதானவர்களை விட அதிகமாக குழந்தைகள் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா, அத்துடன் தென் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் பல நாடுகள் உட்பட, மாறுபாடுகளின் பரவலைக் கண்காணிக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் அவை ஆதிக்கம் செலத்துகின்றன, அல்லது ஆதிக்க வகையாக மாறி வருகின்றன. உலகளாவிய தடுப்பூசி விகிதங்கள் மிகக் குறைந்து, உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியனருக்கு நோயெதிர்ப்பிகள் குறைந்துவிட்ட நிலைமைகளின் கீழ் இது நடைபெறுகிறது.
உலகின் தலைசிறந்த வைராலஜி ஆய்வகங்களில் ஒன்றான ஜப்பானில் உள்ள சாடோ ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வு, ஓமிக்ரோனின் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகள் அதன் BA.1 மற்றும் BA.2 துணைமாறுபாடுகளை விட அதிகளவு நோய் உருவாக்கும் தன்மையை கொண்டிருப்பதையும், மற்றும் தடுப்பூசிகள் அல்லது BA.1 மற்றும் BA.2 ஆல் ஏற்பட்ட முந்தைய நோய்தொற்றுக்கள், BA.4 மற்றும் BA.5 ஆல் ஏற்படும் நோய்தொற்றுக்கு எதிராக மிகக் குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன என்பதைக் கண்டறிந்தது. இதன் உட்குறிப்பு என்னவென்றால், BA.1 மற்றும் BA.2 ஆல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பில்லியன் கணக்கான மக்கள் இப்போது BA.4 மற்றும் BA.5 ஆல் மீண்டும் நோய்தொற்றுக்கு ஆளாவதுடன், இந்த மறுதொற்று மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதாகும்.
உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக போர்ச்சுகல் இருந்தபோதிலும், கடந்த மாதம் BA.5 போர்ச்சுக்கலில் ஆதிக்கம் செலுத்தியது, மற்றும் குளிர்காலத்தில் BA.1 ஆல் ஏற்பட்ட பாதிப்புக்கு கிட்டத்தட்ட நெருக்கமான அளவிற்கு நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களின் பெரிய அலையை அது உருவாக்கியது. பரிசோதனை நேர்மறை விகிதங்கள் இப்போது 50 சதவிகிதத்திற்கு மேல் உள்ளன, இது உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட தற்போது நிகழ்ந்து வரும் பரந்தளவிலான பரவலைக் குறிக்கிறது.
இந்த குறிப்பிட்ட மாறுபாட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் அல்லது இறப்பார்கள் என்பதை எவரும் துல்லியமாக கணிக்க முடியாது, ஆனால் BA.4 மற்றும் BA.5 துணைமாறுபாடுகள் வரவிருக்கும் மாதங்களில் உலகின் பெரும்பகுதிகள் எங்கிலும் கணிசமான நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களை ஏற்படுத்தும். மிகவும் மரபணு ரீதியாக வேறுபட்ட மற்றும் ஆபத்தான மாறுபாடுகள் உருவாகின்றன, மேலும் ஒரு புதிய மாறுபாடு உருவாகும் சாத்தியம் எப்போதும் உள்ளது, அது ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளின் பரவும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு தவிர்ப்பு திறன்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அதேவேளையில் மிகுந்த நோய் உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் மற்றும் ஆபத்தானதாக இருக்கும்.
ஒரு ‘வெகுஜன முடக்க நிகழ்வாக’ உள்ள நெடுங்கோவிட்டும் தொற்றுநோயும்
பாரிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் பயங்கரமான உடனடி தாக்கத்திற்கு அப்பால், ‘நிரந்தர’ மூலோபாயத்தின் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் கிட்டத்தட்ட கணக்கிட முடியாதவையாகும். நெடுங்கோவிட் நோயின் நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோயாளிகளால் அடையாளம் காணப்பட்டது, ஆனால் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளால் அது கிட்டத்தட்ட முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. தொற்றுநோய் பற்றிய பரந்த விஞ்ஞான அறிவைப் போலவே, நெடுங்கோவிட் ஏற்படுத்திய ஆழமான சமூக அபாயங்களைப் பற்றி பொது மக்களிடையே இன்னும் மிகக் குறைவான புரிதலே உள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல், நெடுங்கோவிட் நோய் ஆலோசகர்கள் அதனை ஒரு 'வெகுஜன முடக்கும் நிகழ்வு' என்று பொருத்தமாக வகைப்படுத்தியுள்ளனர். சமீபத்திய மாதங்களில் நெடுங்கோவிட் பற்றிய ஆராய்ச்சி விரிவடைந்து வருகிறது, இது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் சேதம் ஏற்படுத்தும் அபாயத்துடன் கோவிட்19 நோய்தொற்றை உறுதியாக இணைக்கிறது, அத்துடன் நீரிழிவு நோய், பல வகையான நரம்பியல் கோளாறுகள், பலவகை இருதய நோய்கள் மற்றும் பல நோய்களின் அபாயங்களை அது விளைவிக்கிறது.
நெடுங்கோவிட் நோயை உருவாக்கும் அபாயங்கள் ஒவ்வொரு மறுதொற்றுடனும் சேர்ந்தே உருவாகிறது, மேலும் தடுப்பூசி மூலம் சிறிதளவு தான் குறைக்கப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில் இதை விரிவுபடுத்திக் கூறுகையில், Fractal Therapeutics விஞ்ஞானியான அர்ஜித் சக்கரவர்த்தி, “உலகம் முழுவதும் நாளை தடுப்பூசி போடப்பட்டாலும், மற்றும் தற்போதைய மூலோபாயத்தின் கீழ் ‘கோவிட் உடன் வாழக் கற்றுக்கொள்வதற்கு’ வெறும் மூன்று வருடங்களை நாம் செலவிட்டுள்ள நிலையில், நம்மிடையே ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நெடுங்கோவிட் நோயுடன் வாழக்கூடும்” என்று குறிப்பிட்டார்.
இந்த ‘வெகுஜன முடக்க நிகழ்வின்’ ஆரம்பகட்ட சமூக தாக்கங்களை Solve Long COVID Initiative இன் ஆய்வில் காணலாம், இது, ஜனவரி 31, 2022 ஆம் தேதி வரை சுமார் 43 மில்லியன் வயது வந்த அமெரிக்கர்கள் அல்லது வயது வந்தோரில் 13.4 சதவிகிதம் பேர் நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடுகிறது. அவர்களில் சுமார் 14 மில்லியன் பேர் கடுமையாக பலவீடமடையக்கூடிய நெடுங்கோவிட் பாதிப்பைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இழந்த ஊதியங்கள், இழந்த சேமிப்புகள் மற்றும் மருத்துவச் செலவுகள் உட்பட ஏற்பட்ட மொத்த நிதிச் சுமை தோராயமாக 511 பில்லியன் டாலர் என அவர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடுகளில், ஓமிக்ரோன் காலத்தில் உருவான நெடுங்கோவிட் நோய்கள் உட்படுத்தப்படவில்லை.
நோயாளிகள் வேலை செய்யும் திறன் மற்றும் ஓய்வு நேரத்தை அனுபவிக்கும் திறன் உட்பட, இந்த சூழ்நிலையின் தரமான தாக்கங்கள் அளவிட முடியாதவையாகும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் பிற தேசிய சுகாதார நிறுவனங்களும் நெடுங்கோவிட் மற்றும் அதனால் ஏற்படும் பெரும் ஆபத்துகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளன. ஆயினும்கூட, அவர்கள் பாரிய நோய்தொற்று மூலோபாயங்களைத் தொடர நனவாகத் தேர்ந்தெடுத்தனர்.
சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையும் உலகளாவிய தொற்றுநோய் ஒழிப்பு மூலோபாயமும்
கோவிட்-19 நோய்தொற்றை விரைந்து பரவவிடாமல் தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து பராமரித்து வரும் உலகின் ஒரே நாடாக சீனா மட்டுமே உள்ளது, அங்கு பின்பற்றப்படும் பூஜ்ஜிய கோவிட் கொள்கை ஜனவரி 2020 முதல் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. மிக சமீபத்தில், சீன சமூகம் ஓமிக்ரோனின் BA.2 துணைமாறுபாட்டை தோற்கடித்தது, இது மார்ச் மாத தொடக்கத்தில் ஷாங்காய் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெடித்துப் பரவியது.
பூஜ்ஜிய கோவிட் ஒழிப்பு மூலோபாயத்தின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:
- நோய்தொற்று வெடிப்புகள் நிகழும் இடங்களில் எல்லாம் பாரிய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
- நோய்தொற்று பரிமாற்றத்தின் அனைத்து சங்கிலிகளையும் அடையாளம் காண கடுமையான தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
- அனைத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் மருத்துவ வசதிகளில் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தல்;
- பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்துதல்;
- நோய்தொற்று வெடிப்பை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் தற்காலிகமாக மூடுதல் மற்றும் அனைத்து பள்ளிகளையும் தொலைதூர பயிற்றுவிப்புக்கு மாற்றுதல்;
- அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை வழங்குதல் மற்றும் அதை அணியக் கட்டாயப்படுத்துதல்;
- பாரிய தடுப்பூசித் திட்டங்களைச் செயல்படுத்துதல்; மற்றும்
- புதிய நோய்தொற்றுக்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்க பயணம் மற்றும் எல்லை மேலாண்மை மீது கடுமையான கட்டுப்பாடுகள்;
இந்த அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைப் பயன்படுத்தி மிகுந்த தொற்றும்தன்மை கொண்ட ஓமிக்ரோனின் BA.2 துணைமாறுபாட்டை சீனா அடக்கியது என்பது, நடைமுறையில் நோய்தொற்றை நீக்குவது சாத்தியமானது மற்றும் அவசியமானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பதே உண்மை. அனைத்து உட்புற இடங்களிலும் வடிகட்டுதல் மற்றும் காற்றோட்ட அமைப்புக்களை மேம்படுத்துவது உட்பட, மேற்கூறிய நடவடிக்கைகள் உலகளவில் செயல்படுத்தப்பட்டால், SARS-CoV-2 ஐ சில மாதங்களில் உலகளவில் அகற்ற முடியும்.
கோவிட்-19 தொற்றுநோயை முழுமையாகத் தடுப்பதற்கான கிருமி நீக்கம் செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய இன்ட்ராநேசல் தடுப்பூசிகளானது (Intranasal vaccines), தொற்றுநோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் மற்றொரு ஆயுதமாக மாறக்கூடும். இவற்றில் மூன்று தடுப்பூசிகள் இப்போது 3 ஆம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளன. ஆனால் அவை வெற்றி பெற்றால், mRNA மற்றும் ஏற்கனவே உள்ள பிற தடுப்பூசிகளின் உலகளாவிய விநியோகத்தைத் தடுத்த அதே இலாப நலன்களுக்கு அவை கீழ்ப்படுத்தப்படும்.
உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,600 க்கும் அதிகமான மக்களை வேகமாகப் பாதித்துள்ள குரங்கம்மை நோயின் முன்னோடியில்லாத உலகளாவிய வெடிப்பைத் தடுக்கும், அத்துடன் எதிர்கால நோய்தொற்றுக்களை அகற்றும் ஒழிப்பு மூலோபாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஒரு பிரதான ஆய்வு, காலநிலை மாற்றம், SARS-CoV-2 மற்றும் பிற வைரஸ் நோய்தொற்று விவகாரங்களில் நடந்தது போல, விலங்குகளில் ஏற்கனவே இருக்கும் வைரஸ்கள் மனிதர்களிடையே பரவுவதற்கான திறனை பெரியளவில் அதிகரிக்கும் எனக் கண்டறிந்துள்ளது.
உலகளவில் SARS-CoV-2 வைரஸை அகற்றுவதற்கான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக மற்றும் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. அடிப்படையில் தொற்றுநோய்க்கு எதிரான மற்றும் பொது சுகாதாரத்திற்கான போராட்டம் என்பது வெறும் மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல, முதன்மையாக அரசியல், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகும். சக்திவாய்ந்த நிதி நலன்கள், ஊதியத்துடன் கூடிய பூட்டுதல்களையும், மற்றும் வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதைத் தடுப்பதில் உறுதியாக உள்ளன, ஏனென்றால் அது அவர்களின் உச்சபட்ச இலாபமீட்டுதலுக்குத் தடையாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் தொற்றுநோயால் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில், ஒரு ஆழமான தீவிரப்படுதல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்டு, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலால் மேலும் மோசமடைந்துள்ளதான கடுமையாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிட்-19 ஆல் ஏற்படும் நோய்தொற்று, பலவீனம் மற்றும் இறப்புக்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் வறுமை மற்றும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர், அதே நேரத்தில் எப்போதும் நிலவும் அணுசக்தி பேரழிவின் ஆபத்து மனிதகுலத்தை இக்கட்டில் ஆழ்த்தியுள்ளது.
முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டமானது, ஒரு ஆழமான போர் எதிர்ப்பு உணர்வுடனும், தொற்றுநோயைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் பற்றிய புரிதலுடனும் தீவிரமாக ஊக்கப்படுத்தப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளின் அனுபவம், அதிலும் குறிப்பாக ஓமிக்ரோன் மாறுபாடுகள் வெடித்துப் பரவிய கடந்த ஏழு மாதங்களின் மற்றும் உக்ரேனில் போர் வெடித்ததன் அனுபவங்களானது, தொற்றுநோய், போர் மற்றும் முதலாளித்துவ அமைப்பின் அராஜகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ அமைப்புமுறை புரட்சிகரமாக தூக்கியெறியப்பட்டு, திட்டமிடப்பட்ட உலக சோசலிச சமுதாயத்தைக் கொண்டு அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை உறுதியாக நிரூபிக்கிறது.
மேலும் படிக்க
- அமெரிக்காவில், வருகின்ற இலையுதிர்கால மற்றும் குளிர்கால நோய்தொற்று எழுச்சியின்போது நூறு மில்லியன் கொரோனாவைரஸ் நோய்தொற்றுக்கள் உருவாகும் என முன்கணிக்கப்பட்டுள்ளது
- மே தினம் 2022: கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம்
- அமெரிக்காவில் ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாட்டின் எழுச்சி தீவிரமடைந்து வருகையில், பைடென் நிர்வாகம் கோவிட்-19 பற்றிய நிலைமைகளை பெரிதும் மூடிமறைக்கிறது