கோவிட்-19 தோல்விக்குப் பின்னர் அமைப்பை மறுசீரமைப்பது குறித்து CDC இயக்குனர் அறிவித்தார்

ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே முன்மொழியப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களால் (CDC), கோவிட்-19 நோயை கையாள்வது குறித்த உள் மதிப்பாய்வு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அதன் இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி, பொறுப்பை ‘அரைகுறையாக செய்ததற்கு’ CDC தான் பொறுப்பு என்றும், அமைப்பை முற்றிலும் சரிசெய்ய வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டார். நான்கு மாதங்களுக்குப் பின்னர், CDC இன் இப்போதைய பதிவில் அமெரிக்காவில் குரங்கம்மை நோய் வெடிப்பு குறித்து CDC மந்தமாக நடவடிக்கை எடுத்ததும் அடங்கும்.

இந்த மதிப்பாய்வானது இடையேற்பு முதன்மை துணை இயக்குனர் டாக்டர். டெப் ஹவுரி, தலைமை இயக்க அதிகாரி ராபின் பெய்லி, மற்றும் பணியாளர்களின் தலைவர் ஷெர்ரி பெர்கர் ஆகிய மூன்று மூத்த CDC அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் சுகாதார வளங்கள் மற்றும் சேவை நிர்வாகத்தின் முன்னாள் இடையேற்பு நிர்வாகி ஜிம் மக்ரேவால் (Jim Macrae) தொடங்கப்பட்டது என்பதுடன், டெல்டா மற்றும் ஓமிக்ரோன் மாறுபாடுகளின் நோய்தொற்று அலைகளின்போது தொற்றுநோயை அமைப்பு கையாண்ட விதம் பற்றிய இடைவிடாத மற்றும் கூட்டு விமர்சனத்தின் பின்னணியில் வெளிவந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், தொற்றுநோயின் முதல் ஆண்டில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் செயல்பாடு பற்றி மதிப்பாய்வு எதுவும் குறிப்பிடவில்லை, அந்த நேரத்தில் சில CDC அதிகாரிகள் கோவிட்-19 நோயால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க முயன்றதால் வெள்ளை மாளிகை அவர்களை அடக்கி வைத்திருந்தது. அப்போதைய CDC இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பிற போலி தீர்வுகள் பற்றிய ட்ரம்பின் வஞ்சகத்தை முழுமையாக ஆதரித்ததுடன், ‘சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குதல்’ போன்ற விஞ்ஞான விரோதக் கொள்கைகளை ஊக்குவித்த டாக்டர். ஸ்காட் அட்லாஸ் போன்ற வெள்ளை மாளிகை உதவியாளர்களையும் ஆதரித்தார்.

மதிப்பாய்வு ஆணையிடப்பட்டபோது, வாலென்ஸ்கி இவ்வாறு குறிப்பிட்டார், “கடந்த ஆண்டில் அமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் நான் பெற்ற கருத்துக்களுடன் கோவிட்-19 நோயிலிருந்து எனக்கு கிடைத்த பாடங்களானது, பொது சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கு உதவ ஒரு படி பின்வாங்கி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களை மூலோபாய ரீதியாக நிலைப்படுத்துவதற்கான நேரம் இதுவே என்பதைக் குறிக்கின்றன.”

வாலென்ஸ்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11,000 CDC ஊழியர்களுக்கு பகிரப்பட்ட வீடியோவில், “வெளிப்படையாகச் சொல்வதானால், பரிசோதனைகள், தரவு சேகரித்தல் மற்றும் தகவல்தொடர்புகள் தொடர்பான நடவடிக்கைகளில் நிகழ்ந்த சில அழகான வியத்தகு பொது தவறுகளுக்கு நாம் தான் பொறுப்பு” என்று கூறியுள்ளார். பொது சுகாதார அமைப்பின் எதிர்கால பிழைப்பிற்காக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களானது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்று குவித்த ஒரு தொற்றுநோய் குறித்து நடவடிக்கை எடுப்பதில் அதன் திறனைப் பற்றி பொதுமக்கள் அவநம்பிக்கை கொள்ள வழிவகுத்ததான இந்த பாடங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ‘இது நமக்கான முக்கிய தருணமாகும், நாம் முன்நிற்க வேண்டும்,’ என்றும் அவர் கூறினார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் டாக்டர். ரோசெல் வாலென்ஸ்கி, CDC அட்லாண்டாவின் தலைமையகத்தில் கோவிட்-19 மாநாட்டிற்கான அறைக்குள் ஜனாதிபதி ஜோ பைடெனை அழைத்துச் செல்கிறார். (AP Photo/Patrick Semansky)

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் அதன் பொறுப்பில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, மேலும் தடுக்கக்கூடிய பாரிய நோய்தொற்று மற்றும் இறப்புக்கான குற்றத்தை அது பகிர்ந்து கொள்கிறது, எவ்வாறாயினும், வாலென்ஸ்கியின் மியா கல்பா, ‘என்றென்றும்’ கோவிட் தொற்றுநோய்க்கான பைடென் நிர்வாகத்தின் அறிவிப்பிற்கு ஏற்ப தொற்று மற்றும் மறுதொற்றுக்கு எதிராக மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முக்கியமாக இரத்து செய்துள்ள அதன் தொற்றுநோய் கொள்கையின் தொடர்ச்சியுடன் ஒத்துப்போகவில்லை.

தொற்றுநோயின் ஓமிக்ரோன் காலகட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 210,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். முழு வீச்சில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்ற, நாட்டில் முகக்கவசப் பயன்பாடு முற்றிலும் நீக்கப்படுகின்ற மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்ற சூழலில், இந்த இலையுதிர் மற்றும் குளிர் காலத்தில் பாரியளவில் நோய்தொற்றுக்களும், மருத்துவமனை அனுமதிப்புக்களும் மற்றும் இறப்புக்களும் வெடிக்க வாய்ப்புள்ளது, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பைடென் நிர்வாகம் கூட இந்த அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான இறப்பு எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், 375,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்தனர். 2021 ஆம் ஆண்டில், விஞ்ஞானத்தைப் பின்பற்றுவதாகவும், உலகின் முதன்மையான தடுப்பூசிகளுக்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் பைடெனின் வாக்குறுதி இருந்தபோதிலும், அந்த எண்ணிக்கை கணிசமாக 475,000 ஆக மேலும் உயர்ந்தது. CDC இல் வாலென்ஸ்கியின் பதவிக் காலத்தில், 18 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 700,000 அமெரிக்கர்கள் அழிந்துள்ளனர்.

2021 கோடையில் வைரஸிலிருந்து ‘சுதந்திரம் அடைந்ததாக’ பைடெனின் பிரகடனமும் மற்றும் பள்ளிகளை மீளத்திறப்பதற்கான அவரது அழைப்பும், டெல்டா மற்றும் ஓமிக்ரோனின் பல மாறுபாடுகளின் தோற்றத்திற்கு நெருக்கமாக நிகழ்ந்தது. இவை கோவிட்-19 நோயின் காரணமான குழந்தைகளின் உச்சபட்ச இறப்பு விகிதங்களுடன் இணைந்து நிகழ்ந்தன. இருப்பினும், தொற்றுநோய்களின் ஒவ்வொரு உச்சக்கட்டத்திற்குப் பின்னரும், எந்தவொரு அர்த்தமுள்ள தணிப்பு நடவடிக்கைகளையும் மேலும் நீக்க விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இதன் பொருள், தடையற்ற பொருளாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில், தொற்றுநோய் பற்றிய திட்டமிடப்பட்ட செய்தியிடலுக்கு CDC ‘முன்நின்றது’ என்பதாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் எழுத்தாளரும், கோவிட்-19 தொற்றுநோய்க்கான தொழிலாளர் விசாரணையின் ஒருங்கிணைப்பாளருமான இவான் பிளேக் பெப்ரவரியில் மீண்டும் அவதானித்ததன் படி, “உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அரசியல் ஸ்தாபகத்துடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டது. இரண்டு முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும் போலவே, இதுவும் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகளின் நலன்களுக்கு சேவை செய்கிறது.”

தொற்றுநோய்க்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நீக்கப்படுவதை உறுதிசெய்வது குறித்து அரசின் முகவராக செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் மிகத் தெளிவான முயற்சிகளை மட்டுமே பின்வரும் காலவரிசை குறிப்பிடுகிறது.

CDC ஆல் விளம்பரப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள், திரிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஆறு அடிகள் இடைவெளியைப் போல மூன்று அடிகள் இடைவெளியும் பாதுகாப்பானது என்ற நிலைப்பாட்டை அந்த நேரத்தில் அங்கீகரித்தது. ஆயினும்கூட, மே 7, 2021 அன்று, SARS-CoV-2 காற்றில் பரவி ஆறு அடிக்கு அப்பால் கூட பரவக்கூடும் என்பதை அவர்கள் அமைதியாக ஒப்புக்கொண்டனர். இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கான இந்த ஒப்புகைகளின் தாக்கங்கள் குறித்து அந்த நேரத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எந்தவொரு பொது அறிக்கையும் வெளியிடவில்லை.

வைரஸின் காற்றில் பரவும் தன்மை குறித்து தொகுக்கப்பட்ட சான்றுகள் உள்ளபோதிலும், பைடென் நிர்வாகம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆதரவுடன், பேருந்துகள், இரயில்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் முகக்கவசப் பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை இரத்து செய்தது. இத்தகைய போக்குவரத்தை தொழிலாள வர்க்கம் தான் அதிகம் சார்ந்துள்ளது என்ற நிலையில், இந்த நடவடிக்கை தொற்று மற்றும் மறுதொற்றின் உடனடி தாக்குதலுக்கு அவர்களை ஆளாக்கியது.

ஒரு வாரத்திற்குப் பின்னர், மே 13, 2021 அன்று, CDC இயக்குனர் இவ்வாறு கூறினார், “முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவரும் முகக்கவசம் அணியாமல் அல்லது உடல் ரீதியான இடைவெளி இல்லாமல் பெரிய அல்லது சிறிய, உட்புற அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்” என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில், வாஷிங்டன் போஸ்ட், தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையேயான கோவிட்-19 இன் பாரிய சமூக பரவல் பற்றி CDC இல் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து கிடைத்த ஒரு உள் ஆவணத்தை கசியவிட்டது.

தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் கூட முகக்கவசமும் அணிய வேண்டாம் என்று ஊக்கப்படுத்திய ஜூலை 2021 இல் வெளியிடப்பட்ட CDC வழிகாட்டுதல்களின் துணை விளைவாகவே அமெரிக்க குழந்தைகளின் முன்னோடியில்லாத நோய்தொற்று இருந்தது.

GA, அட்லாண்டாவில் உள்ள CDC இன் ராய்பல் வளாகம். (James Gathany/Public Domain) [Photo: James Gathany]

ஜூலை 2021 இல், காலப்போக்கில் தடுப்பூசியின் செயல்திறன் குறைந்து வருவதால், பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்படும் என்று காட்டிய இஸ்ரேலில் இருந்து வழங்கப்பட்ட முக்கியமான தரவை CDC நிறுத்தி வைத்தது. அதற்கு பதிலாக, CDC அதிகாரிகள், தொற்றுநோயின் நிலை குறித்த உற்சாகமான மதிப்பீட்டை முன்வைக்க செர்ரி பழம் பறிப்பது போல முக்கியமான தகவல்களை சேகரித்தனர்.

2021-2022 குளிர்காலத்தில் கொடிய ஓமிக்ரோன் அலைக்கு மத்தியில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சமூக அபாயத்தை மதிப்பிடுவதற்கான வழிகாட்டுதல்களை மாற்றியது, நோய்தொற்றுக்களை அல்லாமல், மருத்துவமனை அனுமதிப்புகளையும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளையும் அது ஆய்வு செய்தது, மேலும் இதன் மூலம் பொது சுகாதார வழிகாட்டுதலுக்கு அடிப்படையான அளவீடுகளையும் மாற்றியது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் விரைவாக முகக்கவசத் தேவைகளைத் தளர்த்தியது, அத்துடன் வாலென்ஸ்கி, “முகக்கவசம் அணிதல் போன்ற விஷயங்களில் இருந்து மக்களுக்கு இடைவெளி கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்.

டிசம்பர் 2021 இல், டெல்டா ஏர்லைன்ஸ் தலைமை நிறைவேற்று அதிகாரி எட் பாஸ்டியனின் உத்தரவின் பேரில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 10 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைத்தது. வழிகாட்டுதல்களில் செய்யப்பட்ட மாற்றம் ‘சமூகத்தின் முக்கியமான செயல்பாடுகள் திறந்து இயக்கப்பட வேண்டும்’ என்பதாகும் என்று அந்த நேரத்தில் வாலென்ஸ்கி கூறினார்.

ஜனவரி 2022 இல், முக்கியமாக ‘ஆரம்பத்திலேயே உடல்நிலை சரியில்லாதவர்களைத்தான்’ கோவிட்-19 நோய் கொல்கிறது என்பதை ‘ஊக்கப்படுத்தும்’ இழிவான யூஜெனிஸ்ட் கருத்துக்களை வாலென்ஸ்கி உருவாக்கினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் முக்கியத்துவம் இல்லாதவையாகும், மாறாக பெருநிறுவன தொழில்துறையின் இலாபங்கள் தொடர்ந்து மீறமுடியாததாக இருக்க வேண்டும் என்பதே.

ஓமிக்ரோன் அலை தொடர்ந்து நிலைத்திருக்கையில் கூட, பைடென் நிர்வாகமும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் ‘Test to Stay’ திட்டத்தை ஒருங்கிணைத்தன, இது தடுப்பூசி போடப்படாத மற்றும் நோய்க்கு ஆளான குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் வேலையில் இருக்கும் நேரத்தில் பள்ளிகளில் தங்க அனுமதித்தது. இந்த கொள்கைகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர், இந்த கோடையில் மட்டும் 200 பேர் இறந்துள்ளனர். சமீபத்திய வழிகாட்டுதல்கள் இந்த அற்ப கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது.

மோசமானது என்னவென்றால், நெடுங்கோவிட் பற்றிய CDC இன் பகுப்பாய்வு 65 வயதிற்குட்பட்டவர்களில் ஐந்தில் ஒருவரால் பயங்கரமான சிக்கலை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தது, மேலும் இது ஒரு வெகுஜன செயலிழப்பு நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தில் கோவிட்-19 நோயின் காரணமான தாக்கம் குறித்து பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டின.

குறிப்பாக, நுரையீரல் அடைப்பு (pulmonary embolism), சுவாசப் பற்றாக்குறை, நீரிழிவு, இதய செயலிழப்பு, மனநோய் மற்றும் வலிப்பு தொந்திரவுகள், இரத்த ஓட்ட பிரச்சினை போன்ற நிலைமைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படலாம். ஆயினும்கூட, வாலென்ஸ்கி தொற்றுநோய் தொடர்பான CDC இன் பரிந்துரைகள் குறித்த அவரது எந்த கருத்துக்கள் மற்றும் முடிவுகளில் தற்போதுள்ள விஞ்ஞான ஆதாரங்களை ஒருமுறை கூட கருத்தில் கொள்ளவில்லை.

பல ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள பொது சுகாதார ஊழியர்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு விஞ்ஞான அணுகுமுறையையும் கண்டிக்கும், மற்றும் பள்ளிகளும் வணிகங்களும் ஒருபோதும் மூடப்படக்கூடாது எனவும், முகக்கவசம் அணிதல் மற்றும் பூட்டுதல் போன்ற எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக்கூடாது எனவும் கோரும் இரக்கமற்ற வலதுசாரி தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். தனிநபர் ‘சுதந்திரம்’ என்ற மொழியைப் பயன்படுத்தினாலும், பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான அரசின் செலவினங்களைக் குறைக்கும் அதே வேளையில், இராட்சத நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதே உண்மையான நோக்கமாக உள்ளது.

CDC இன் சோசலிச இடதுசாரிகளின் விமர்சனம் முதலாளித்துவ தீவிர வலதுசாரிகளின் விமர்சனத்திற்கு முற்றிலும் எதிரானது. CDC விஞ்ஞானிகளும் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும் மௌனமாக்கப்பட்டு அவர்களின் பணி நசுக்கப்படுவதற்கு எதிராக நாம் தொடர்ந்து பேணுகிறோம். ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் கொள்கைகளுக்கு விஞ்ஞான ரீதியாக வழிகாட்டுவதற்குப் பதிலாக, அது இலாபத்தைக் குறிக்கோளாக வைக்கிறது. வாலென்ஸ்கி தரப்பினரின் துர்நாற்றம் மிக்கக் கருத்துக்களில் அத்தகைய விமர்சனத்தின் குறிப்பு எதுவும் இல்லை.

பெருநிறுவன ஊடகங்கள், CDC இல் தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிர வைக்கும் நிகழ்வுகளுக்கு பொதுவாக சாதகமான பதிலைக் கொடுத்துள்ளன. ஆயினும்கூட, எந்தவொரு அறிக்கையும், பைடென் நிர்வாகத்தையோ, அல்லது அவர்களின் மோசமான பதிவுகளின் அடிப்படையில் டாக்டர். வாலென்ஸ்கி செயல்பட்டதையோ, அல்லது அவர்களின் தொடர்ச்சியான ஆனால் வேண்டுமென்ற தவறாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டதையோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

உண்மையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் மறுசீரமைப்பு என்பது, அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைப்பை மிகவும் திறமையாக மறுசீரமைப்பதையும், மற்றும் பைடென் நிர்வாகம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் வர்க்க கொள்கைகளை அம்பலப்படுத்துவதிலிருந்து அதிகாரத்துவ சோம்பேறித்தனம் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் நோக்கம் கொண்டது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தோல்வி என்பது வெறுமனே ஒரு அமெரிக்க நிகழ்வு அல்ல, மாறாக சீனாவைத் தவிர, ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் உள்ள பொது சுகாதார நிறுவனங்களின் குணாம்சங்களை குறிக்கிறது. 2021 உலகளாவிய சுகாதார பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை முக்கியமான கண்டுபிடிப்புக்களை வழங்குகிறது. பெரும்பாலான நாடுகள் “எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆபத்தான முறையில் தயாராக இல்லை … மேலும் அதிக வருமானம் கொண்ட நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் தொற்றுநோய் அல்லது தொற்றுநோய்க்கான தயார்நிலையை வலுப்படுத்துவதில் அர்ப்பணிப்புள்ள நிதி முதலீடுகளைச் செய்யவில்லை. மேலும் பெரும்பாலான நாடுகள், நோய்தொற்று வெடிப்பை கண்டறிந்து பதில் நடவடிக்கை எடுப்பதற்கு வலுவான, திறமையான மற்றும் அணுகக்கூடிய சுகாதார அமைப்பை பராமரிப்பதில் சிறிய அளவிலான அல்லது எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகள் உச்சபட்ச ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், தயார்நிலையில் இருப்பதில் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டுள்ளன.”

இத்தகைய உலகளாவிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் பார்த்தால், இறுதிப் பொறுப்பாளிகளாக குறிப்பிட்ட அரசாங்கங்களோ, ஜனாதிபதிகளோ அல்லது பிரதம மந்திரிகளோ இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. இது, முதலாளித்துவ அமைப்பு, மற்றும் பொது சுகாதாரத்தை கீழ்ப்படுத்துதல் மற்றும் இலாப நலன்களுக்காக கோடிக்கணக்கான மக்கள் உயிர்வாழவது ஆகியவற்றின் மூலம் தொற்றுநோய்கள் மற்றும் துன்பம் மற்றும் மரணத்தின் முடிவில்லாத அலைகளுக்கு வழிவகுத்துள்ளது.