மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கிரேக்க நகரமான பைலோஸிலிருந்து தென்மேற்கே 50 மைல் தொலைவில் அகதிகள் நிரம்பிய மீன்பிடி படகு மூழ்கியிருப்பது, நாட்டில் புலம்பெயர்ந்தோர் உயிர்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான இழப்பாகும்.
ஜூன் 2016 இல், கிரேக்கத்தின் மிகப்பெரிய தீவான கிரீட் (Crete) அருகே படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 320 பேர் இறந்ததாக அல்லது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்திய சோகத்திலிருந்து அதிகாரிகள் இதுவரை 78 உடல்களை மட்டுமே மீட்டுள்ளனர், ஆனால் படகில் 500 முதல் 750 பேர் வரையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக 104 உயிர் பிழைத்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலை மத்தியதரைக் கடலின் ஆழமான பகுதியில் மூழ்கிய படகிலிருந்து, உயிருடன் இருக்கும் வேறு யாரையும் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை இல்லை. ஓய்வுபெற்ற கிரேக்க கடலோர காவல்படை அட்மிரல் நிகோஸ் ஸ்பானோஸ் கிரேக்க பொது ஒலிபரப்பு நிறுவனமான ERT இடம் கூறுகையில், ''இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு,'' கடலை கடப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த பழைய மீன்பிடி படகு ''எந்த வகையிலும் கடலுக்குத் தகுதியற்றது, எளிமையாகச் சொன்னால், இந்தப் படகுகள் மிதக்கும் சவப்பெட்டிகள்'’ என்று அவர் விவரித்தார்.
படகு மூழ்கிய போது, பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் படகின் கீழ் தளத்தில் இருந்ததாக படகில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 100 குழந்தைகள் படகில் இருந்ததாக மருத்துவரிடம் ஒருவர் கூறினார். குறைந்தபட்சம் 40 குழந்தைகள் படகில் இருந்ததாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. இவர்களில் எட்டு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளதோடு, அவர்களில் சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். நிமோனியா மற்றும் சோர்வினால் பாதிக்கப்பட்ட முப்பது பேர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். UN அகதிகளின் தலைவர் எராஸ்மியா ரூமானா ERT வானொலியிடம், மக்கள் இப்போது இறந்துவிட்ட அல்லது காணாமல் போன குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்ததால் மிகவும் ''அதிர்ச்சியில் உள்ளனர்'' என்று குறிப்பிட்டார்.
''நாங்கள் இளைஞர்களைப் பற்றி பேசுகிறோம், பெரும்பாலும், பெரும் உளவியல் அதிர்ச்சி மற்றும் சோர்வு நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்களை கரைக்கு கொண்டு வந்த கப்பல்களில் இருந்து, தரையை நோக்கி நடக்கும் பாதைகளில் நடக்கும்போது சிலர் மயக்கமடைந்தனர்’’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
''இந்த மக்கள் பல நாட்கள் சாப்பிடவில்லை, பல நாட்கள் தண்ணீர் குடிக்கவில்லை, சூரிய வெப்பத்தால் கருகிப் போயிருந்தனர்'’ என்று ஒரு கிரேக்க மீட்பு பணியாளர் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
உயிர் தப்பிப்பிழைத்த பலர் இப்போது நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். கிரேக்க இடம்பெயர்வு மந்திரி டேனியல் எஸ்ட்ராஸ், புகலிட கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக அகதிகள் ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், 'செல்லுபடியாகும்' கோரிக்கை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.
ஐரோப்பா கோட்டையின் எல்லைகளை இரக்கமின்றி காவல் செய்யும் கிரேக்க கடலோர காவல்படை மற்றும் எல்லை அதிகாரிகள் (கொலைகார 'திருப்பி அனுப்பும்' தந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் துன்பத்தில் இருக்கும் மக்களைக் கடலுக்குக் கைவிடுதல்) புலம்பெயர்ந்தோர் மீது அல்லது அவர்களை அழைத்து செல்வோர் மீது இதற்கான பழிகளை சுமத்த முற்படுகின்றனர்.
''அந்த மீன்பிடிப் படகு நிறைய நிரம்பியிருந்த மக்கள் இத்தாலிக்கு செல்ல விரும்பியதால் எங்களது உதவியை அவர்கள் ஏற்க மறுத்தனர். எங்களது உதவிகளை மறுத்துவிட்ட அவர்களுக்கு உதவிகள் தேவைப்படும் என்பதால், நாங்கள் அவர்களின் படகிற்கு அருகிலேயே இருந்தோம்'’ என்று கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் நிகோஸ் அலெக்ஸியோ Skai TVயிடம் கூறினார்.
கிரேக்க அரசாங்கத்தின் பதிவைக் கருத்தில் கொண்டு, உதவிக்கான சலுகைகள் தீவிரமாக வழங்கப்பட்டன மற்றும் படகிலிருந்தவர்கள் அதனை மறுத்துவிட்டனர் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. செவ்வாய் கிழமை பகலில் வானத்தில் இருந்து கிரேக்க அதிகாரிகளால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், படகின் மேற்தளத்தில் இருந்தவர்கள் விமானத்தை நோக்கி கைகளை நீட்டுவதைக் காட்டுகின்றன.
ஆனால், உத்தியோகபூர்வ விபரிப்பு உண்மையாக இருந்தால், அது கிரேக்க அரசாங்கத்தின் பயங்கரமான புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மிருகத்தனத்திற்கு சாட்சியமாகும். அதாவது நூற்றுக்கணக்கான மக்கள் இத்தாலியின் கரையை அடைவதற்கு கடலில் அதிக ஆபத்தான மணிநேரங்களை அது ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தாலி, பாசிச வாய்வீச்சாளர் ஜோர்ஜியா மெலோனியின் சகோதரர்கள் கட்சியால் (Brothers party) ஆளப்படும் ஒரு நாடாகும். அங்கு குடியேறியவர்களுக்கு எதிராக சித்திரவதை மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எது எப்படியிருந்தாலும், இதற்கு பொறுப்பான கடத்தல்காரர்களின் அறிக்கைகள் அல்லது அவநம்பிக்கையான சூழ்நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் எடுத்த முடிவுகள் மற்றும் கிரேக்க அதிகாரிகளுக்கு பயந்து படகு கடுமையான ஆபத்தில் இருந்தது என்ற உண்மையை மாற்றவில்லை. அகதிகளுக்கான உதவி தன்னார்வ தொண்டு நிறுவனமான அலாரம் ஃபோன் (Alarm Phone), அதிக நெரிசல் மற்றும் கடல்வழி படகுப் பயனத்தை பற்றி நன்கு அறிந்திருந்தும், செயல்படத் தவறியதற்காக கிரேக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளைக் கண்டனம் செய்தது.
''இந்தப் படகு பயணிக்கத் தகுதியற்றது, கப்பலில் இருந்த சிலர் என்ன சொன்னாலும், துயரத்தைப் பற்றி விவாதிக்க முடியாது'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி வின்சென்ட் கோச்செடெல் கருத்துத் தெரிவித்தார்.
ஆயினும்கூட, விரைவான மீட்பு நடவடிக்கைக்கு தேவையான விமானங்கள், கப்பல்கள், குழுக்கள் மற்றும் உபகரணங்களை செயல்படுத்துவதன் மூலம் பேரழிவை முன்னரே தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆறு கடலோர காவல்படை கப்பல்கள், கடற்படை போர் கப்பல்கள், இராணுவ போக்குவரத்து விமானம், விமானப்படை ஹெலிகாப்டர், பல தனியார் கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படகு இத்தாலியின் பகுதிக்குள் செல்லும் என்று அதிகாரிகள் தெளிவாக நம்பினர். படகில் இருக்கும் மனிதர்கள் மீதான அக்கறை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படும் எந்த ஒரு சோகத்தில் இருந்தும் தமது பொறுப்பை அதிகாரிகள் கை கழுவிக் கொண்டனர்.
மாறாக, 93-மீட்டர் சொகுசு கப்பலான மாயன் குயின் IV மற்றும் இதர இரண்டு கப்பல்கள் மீட்புப் பணியில் இறுதியில் முக்கிய பங்கு வகித்தன. வெள்ளி சுரங்க உற்பத்தி மூலம் பில்லியன்களை ஈட்டியுள்ள ஒரு மெக்சிகன் குடும்பத்திற்கு சொந்தமான இந்தக் கப்பல், கற்பனை செய்ய முடியாத சமூக சமத்துவமின்மையின் மிகவும் கொடூரமான சில காட்சிகளை கொடுக்கிறது. 175 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய இந்தக் கப்பலுக்கான ஆண்டு செலவு 15-20 மில்லியன் டொலர்கள் ஆகும்.
''இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க மத்திய மத்தியதரைக் கடலில் வலுவான மற்றும் யூகிக்கக்கூடிய [தேடல் மற்றும் மீட்பு] ஆட்சி தேவை' என்று ஐ.நா அதிகாரி கோச்செட்டல் வலியுறுத்தினார். கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு நேர்மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை ரோந்து படையான புரென்டெக்ஸ் மற்றும் துருக்கி மற்றும் வட ஆபிரிக்க ஆட்சிகளுடன் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி 'குற்றவாளிகள்' மற்றும் 'கடத்தல்காரர்கள்' மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போர்வையில் கடலைக் கடப்பதற்கு முடிந்தவரை கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாற்றுகின்றன.
உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் யில்வா ஜோஹன்சன், இந்த சமீபத்திய சோகத்தையும், அதற்கு பங்களித்த நிகழ்ச்சி நிரலையும் அபத்தமான முறையில் பயன்படுத்திக் கொண்டார். 'குற்றவியல் கடத்தல் வலைப்பின்னல்களை அகற்றுவதற்கு நமக்கு தார்மீகக் கடமை உள்ளது... உறுப்பு நாடுகள் மற்றும் மூன்றாம் நாடுகளுடன், இந்த ஒழுக்க ரீதியாக திவாலான கடத்தல்காரர்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் லக்சம்பேர்க்கில் நடந்த கூட்டத்தில், புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை மறுப்பது, ஐரோப்பாவின் எல்லைகளில் உள்ள முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்படுவதை உறுதி செய்வது மற்றும் 'பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்' என்று அழைக்கப்படும் நாடுகளுக்கு அவர்கள் நாடு கடத்தப்படுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய பொதுவான குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டது. அவற்றில் முதன்மையானது, லிபியா மற்றும் துனிசியா ஆகும், இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் டச்சு பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் இந்த நாடுகளுக்கு வருகை தந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர், லிபிய அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீது பாரிய ஒடுக்குமுறையைத் தொடங்கியது, ஆயிரக்கணக்கான மக்களை - பெரும்பாலும் எகிப்தியர்கள், சிரியர்கள், சூடானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் - நாடுகடத்துவதற்காக சுற்றி வளைத்தது.
இந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட லிபியாவுக்கான உண்மையைக் கண்டறியும் ஐ.நா குழு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக, லிபியாவின் சட்டவிரோத புலம்பெயர்வை எதிர்த்துப் போராடுவதற்கான இயக்குநரகம், லிபிய கடலோர காவல்படை மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அரச எந்திரம் ஆகிய அமைப்புக்களின் உண்மையான அல்லது பெயரளவிலான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தடுப்புக்காவல் இடங்களில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து தொழில்நுட்ப, தளவாட மற்றும் பண ஆதரவைப் பெற்றதுடன், புலம்பெயர்ந்தோரை இடைமறித்து, அவர்களை திருப்பி அனுப்புவதை மேற்கொண்டன' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
லிபிய அரசாங்கம் சமீபத்தில் துறைமுக நகரங்களான ஜாவியா மற்றும் ஜுவாராவில் 'மனித கடத்தல்காரர்களை' குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதுடன், ஏழு புலம்பெயர்ந்தவர்கள் சென்ற கடத்தல் படகுகளை 'அழித்தது' என்று அந்த அறிக்கை மேலும் அறிவித்தது.
முகமூடி அணிந்த துனிசியப் படைகள் புலம்பெயர்ந்தோரை கடலில் இடைமறித்து வன்முறை தாக்குதலை மேற்கொள்ளும் தகவல் கிடைத்ததாக அலாரம் போன் தன்னார்வலர் அமைப்பு அறிவித்தது. தடிகள் மற்றும் மின்சார அதிர்ச்சியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளுவதால், மக்கள் உதவி கேட்டு அலறுகின்றனர் என்று சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய சக்திகளால் உருவாக்கப்பட்ட அகதிகளுக்கான நரக பூமியில் இன்னும் அவர்களின் அவநம்பிக்கையான பயணங்கள் தூண்டப்படுகின்றன. இந்த ஆண்டு ஏற்கனவே மத்தியதரைக் கடலில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 2017 க்குப் பிறகு மிக மோசமான காலாண்டைத் தொடர்ந்து, இந்த சம்பவம் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பாகும்.