இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரேக்கத் தேர்தல்களில் சிரிசாவின் தோல்வியை அடுத்து, முன்னாள் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அவமானகரமாக கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். “தீவிர இடது கூட்டணி” எனப்படுவது “ஒரு புதிய இலட்சியத்திற்கு அழைப்பு விடுக்கும், கடினமான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க” போகிறது என்று அவர் அறிவித்தார்.
சிப்ராஸின் இராஜினாமா, அவரது தலைமையின் கீழ் கட்சிக்கான ஆதரவு சரிந்துள்ளதை ஆமோதிப்பதாக இருந்தது, ஆனால் எந்தவொரு “புதிய இலட்சியமும்” வங்கிகள் மற்றும் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் ஒரு முக்கிய கருவியாக சிரிசா தொடர்ந்து சேவையாற்ற அனுமதிக்கும் ஒரு புதிய முகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இதற்கிடையே, சர்வதேச அளவில் போலி-இடது குழுக்கள், சிரிசாவின் காட்டிக்கொடுப்புகளில் அவை வகித்த குற்றகரமான பாத்திரத்தை மூடிமறைத்து, எதிர்காலத்தில் புதிய காட்டிக்கொடுப்புகளுக்குத் தயாரிப்பு செய்வதே நல்லதென ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்குச் சரியான முன்னுதாரணமாக, பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியோர்கோஸ் கௌசோலிஸ் (Giorgos Gouzoulis) எழுதிய 'கிரேக்க இடதுசாரிகள் தீவிர பிரச்சனையில் உள்ளனர்' என்ற கட்டுரை ஜாகோபின் இதழில் வெளியானது. ஜாகோபின் இதழ், ஜனநாயகக் கட்சியின் ஓர் அணியாக செயல்படும் அமெரிக்க ஜனநாயகக் சோசலிஸ்டுகள் அமைப்புடன் (DSA) இணைந்ததாகும்.
'ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு முற்போக்கு கொள்கை திட்டநிரலை வழங்கவும்' மற்றும் 'இடதுசாரிகள் மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புவதற்கும்' 'எப்படி நாம் இங்கே வந்தடைந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள' முயல்வதாக ஜாகோபின் எழுதுகிறது. ஆனால் அது, வரலாற்று பொய்மைப்படுத்தலின் நடைமுறையை முன்வைக்கி
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் இந்த வரலாற்றைச் சமகாலத்தில் எவ்வாறு பகுப்பாய்வு செய்தன என்பதையும், இந்த வரலாற்றையும் மீளாய்வு செய்வது அவசியமாகும். சிரிசா செய்த அனைத்தும், முன்கணிக்கக் கூடியவையாக இருந்தன மற்றும் முன்கணிக்கப்பட்டன. (“கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கம்: அதிகாரத்தில் போலி-இடது” என்ற WSWS கட்டுரையைப் பாருங்கள்)
ஏதோ விதத்தில் சிரிசாவின் அரசாங்கம் “இடதுகளின் அதிகாரத்தை” பிரதிநிதித்துவம் செய்தது என்பது முதல் பொய்யாகும். மற்ற அனைத்தும் இந்த பொய்யின் அடித்தளத்தில் இருந்தன. ஜனவரி 2015 இல் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஜாகோபினும், அமெரிக்க ஜனநாயகக் சோசலிஸ்டுகள் அமைப்பும் மற்றும் உலகெங்கிலுமான அவர்களின் சக-சிந்தனையாளர்களும் அது ஐரோப்பிய மற்றும் உலக அரசியலில் கடல் அளவிலான ஒரு மிகப் பெரிய மாற்றம் என்பதாக சித்தரித்தார்கள். “சிரிசாவின் தேர்தல் வெற்றி, ஐரோப்பிய தீவிர இடதுக்கும் மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்கும் நம்பிக்கை அளிக்கிறது, ஒரு மகத்தான வாய்ப்பை வழங்குகிறது,' என்று ஜாகோபின் ஜனவரி 26, 2015 இல், அதாவது சிரிசா தேர்வானதற்கு அடுத்த நாள், எழுதியது.
ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த வர்க்க நலன்கள் மற்றும் அரசியல் போக்குகளைப் பற்றிய ஒரு மார்க்சிச பகுப்பாய்வின் அடிப்படையில், அல்லது சிப்ராஸ் என்ன கூறுகிறார், சிரிசா என்ன செய்தது மற்றும் என்ன செய்ய இருக்கிறது என்பதைப் படித்து மதிப்பீடு செய்யும் எவரொருவருக்கும் அது முற்றிலும் தெளிவாக இருந்தது. அதன் “தீவிர இடது” வாய்சவுடால் என்னவாக இருந்தாலும், அது தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளைச் சார்ந்துள்ள, வங்கிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும், ஒரு முதலாளித்துவ வர்க்க கட்சியாகும்.
அந்தத் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், ஜனவரி 5, 2015 இல், சிரிசாவின் தேர்தல் வேலைத்திட்டத்தை ஆய்வு செய்து WSWS எழுதிய ஒரு கட்டுரையில், 'யாருடன் தொடர்பு வைத்திருக்கிறோம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரியும், ஆகவே சிரிசாவைப் பார்த்து அவர்கள் பயப்பட எதுவுமில்லை,” என்று குறிப்பிட்டது.
தேர்தலுக்கு அடுத்த நாள், ஜனவரி 26, 2015 இல், ஜாகோபின் 'தீவிர இடது' மீது 'நம்பிக்கையை' அறிவித்த போது, WSWS பின்வருமாறு எழுதியது: 'கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆட்சிக் கட்சிகளான பாசோக் (PASOK) மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி (ND) ஆகியவை தேர்தலில் நிராகரிக்கப்பட்டிருப்பது, வங்கிகள் கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைகள் மீதான பாரிய சீற்றத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், சிரிசா ஒரு முதலாளித்துவக் கட்சியாகும். அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், யூரோ மற்றும் முதலாளித்துவத்தின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுள்ளது.”
கௌசோலிஸ் வாய்வீச்சின்படி, “ஜனவரி 2015 இல் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்த பின்னர், சிரிசா தலைமையிலான நிர்வாகம் ஒரு முற்போக்கான மாற்றீட்டு திட்டக் கொள்கை சாத்தியம் என்பதில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளையும், சக்தி வாய்ந்த மத்தியஸ்தர்களையும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்களையும் சமாதானப்படுத்த முயற்சித்தது. ஆனால் ஆறு மாத கால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த வேட்கைகள் தோற்றுப் போயின.”
உண்மையில், சிரிசாவும், அதன் பிரதம மந்திரி, சிப்ராஸூம் அவரது சான்சோ பான்சாவும், நிதியமைச்சர் யானிஸ் வாரௌஃபாகிஸூம் முதல் நாளில் இருந்தே அதன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் கைவிடத் தொடங்கி இருந்தார்கள். இது, அரசாங்கத்தை அமைக்கப்பட்டதில் இருந்தே தொடங்கியது. ஜாகோபின் ஒரு 'கூட்டணி அரசாங்கத்தை' குறித்து குறிப்பிடுகிறது, ஆனால் யாருடன் கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதைப் பெயரிட்டுக் குறிப்பிட பணிவோடு மறுக்கிறது: புதிய ஜனநாயகக் கட்சியில் (ND) இருந்து உடைந்து வந்த வெளிநாட்டவர் விரோத வலதுசாரி கட்சியான சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் (Anel) சிரிசா கூட்டணி அமைத்தது.
உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல, சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதென்ற முடிவு முற்றிலும் சிரிசாவின் விருப்பத்திற்கு உட்பட்டிருந்த நிலையில், அது “அதன் கொள்கையை வலதுக்கு மாற்றுவதற்கான சிறந்த நிலைமைகளை” உருவாக்க நோக்கம் கொண்டிருந்தது, “அதேவேளையில் அதன் புதிய அரசாங்கம், கிரேக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நலன்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதையும் சமிக்ஞை செய்தது.”
கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முற்படுவதற்குப் பதிலாக, சிரிசா அதற்கு ஒரு சில விட்டுக்கொடுப்புகளை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மன்றாடும் ஒரு திவாலான கொள்கையை முன்னெடுத்தது. ஒவ்வொரு ஐரோப்பிய தலைநகரிலும் சென்று நிதியமைச்சர்களின் வாலைப் பிடித்துத் தொங்குவதில் வாரௌஃபாகிஸ் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.
பதவியேற்று ஒரு மாதத்திற்குள், சிரிசா ஐரோப்பிய குழுமத்துடன் (Eurogroup) ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் நடப்பில் உள்ள வெறுப்புக்குரிய “புரிந்துணர்வின்” கீழ் உள்ள சிக்கன நடவடிக்கைகளில் இருந்து அது “பின்வாங்குவதைக் கைவிட்டு,” “கிரேக்கத்திற்குக் கடன் வழங்கியவர்கள் அனைவருக்குமான [கிரேக்கத்தின்] நிதிய கடமைப்பாடுகளை உரிய முறையில் முழுமையான மதிக்கும்” என்று அது உறுதியளித்தது. அதாவது, ஐரோப்பிய வங்கிகளின் கோரிக்கைகளை அது விசுவாசத்துடன் நிறைவேற்றும் என்று சிரிசா உறுதியளித்தது, இதைத் தான் அது எதிர்ப்பதாக கூறி இருந்தது.
ஜாகோபின் அந்த நேரத்தில், 'சிரிசா அதன் நிலைப்பாட்டில் இருப்பதாக' பொய் உரைத்த அதேவேளையில், WSWS பின்வருமாறு எழுதியது, ''இடது' குட்டி முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் கூட, பிரதம மந்திரி சிப்ராஸிற்கு முற்றிலுமாக பொருந்துகின்ற, வஞ்சகம், வெறுப்புணர்வு (cynicism) மற்றும் உண்மையிலேயே அருவருப்பூட்டும் கோழைத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காண்பது சிரமம்,” என்று குறிப்பிட்டது.
பின்னர், சிரிசாவும் சிப்ராஸும், ஐரோப்பிய நிதி மூலதனத்துடனான அவர்களின் உடன்படிக்கையை ஏற்குமாறு தொழிலாளர்களை நிர்பந்திக்கவும், அவசியமானால் படைகளைப் பயன்படுத்தவும் கூட, முயன்றனர். இது ஏப்ரலில் மாணவர் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸ் அனுப்பப்பட்டதில் வெளிப்படையாக இருந்தது.
இது 2015 ஜூலையில் புதிய சிக்கன நடவடிக்கைகள் மீதான மோசடி வாக்கெடுப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதை ஜாகோபின் இப்போது, 'யூரோ மண்டலத்திற்குள் பொருளாதார கொள்கைகளின் திசையை மாற்றுவதற்கான சிரிசாவின் கடைசி முயற்சி,” என்று விவரிக்கிறது. அந்த நேரத்தில், அது வாக்கெடுப்பை அறிவித்த சிப்ராஸின் பொய் உரையை முழுமையாக பிரசுரித்தது.
தொழிலாளர்களை நிலைகுலைய செய்யவும் மற்றும் எதிர்ப்பை நசுக்குவதற்குமான அதன் முயற்சி, 'சரி' என்ற வாக்குகளைக் கொண்டு வரும், அது வங்கிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மூடிமறைப்பை வழங்கும் அல்லது சிப்ராஸ் இராஜினாமா செய்து புதிய ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரத்தைக் கைமாற்றவும் கூட அனுமதிக்கும் என்று முழுமையாக நம்பிய பின்னரே சிரிசா அந்த வெகுஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்தது. “வேண்டாம்”என்ற வாக்குகள் வந்தால், சிக்கன நடவடிக்கைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சிப்ராஸ் முன்கூட்டியே தெளிவுபடுத்தினார். அந்த வாக்கெடுப்புக்கு முன்னரே WSWS இவ்வாறு விவரித்தது, “அந்த வெகுஜன கருத்து வாக்கெடுப்பின் உள்ளடக்கத்தை சிப்ராஸ் உழைக்கும் மக்களுக்கு சுருக்கமாக விளக்கினால்,” “அவர் இவ்வாறு கூறுவார்: தலை விழுந்தால் ஐரோப்பிய ஒன்றியம் ஜெயிக்கும், பூ விழுந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.”
மக்கள் பெருமளவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வாக்களித்த போது, சிரிசா வெளிப்படையாகவே நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு பாரிய புதிய சிக்கனப் பிணையெடுப்பைப் பாராளுமன்றம் மூலமாக முன்நகர்த்த செயல்பட்டார். அந்த நேரத்தில் தான், பரிபூரண சந்தர்ப்பவாதியான வாரௌஃபாகிஸ், தன்னை சிப்ராஸிடம் இருந்து தூர நிறுத்திக் கொள்வதன் மூலம் தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முன்னேறுவதற்கு அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்ந்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.
செப்டம்பர் 2015 மறுதேர்தலில், மிகக் குறைந்த வாக்குப்பதிவுக்கு மத்தியில், சிரிசா சிறிய வித்தியாசத்தில் புதிய ஜனநாயகக் கட்சிக்கு எதிராக ஜெயித்தது. அதற்கடுத்த நான்காண்டுகள், 2019 இல் தோற்கடிக்கப்படும் வரையில், சிரிசாவும் சிப்ராஸூம் பதவியில் இருந்தனர்.
2015 இக்குப் பின்னர் சிரிசா அரசாங்கத்தின் தலைமையில் இருந்த காலத்தை, ஜாகோபின் முடிந்தவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கௌசோலிஸ் கருத்துப்படி, இந்தக் காலகட்டம் 'ஏழை குடும்பங்களைப் பாதுகாத்த மட்டுப்படுத்தப்பட்ட சமூகக் கொள்கைகளால்' குணாம்சப்பட்டிருந்தது, ஆனால் ஒரு 'பொருளாதாரக் கொள்கையின்” ஒட்டுமொத்த கட்டமைப்பிற்குள் ... அது “வரவுசெலவுத் திட்டக்கணக்கில் உபரிகளைத் தக்க வைப்பதிலும் மற்றும் அரசுக் கடன்களைத் திருப்பி செலுத்தும் சேவையிலும் முக்கியமாக ஒருமுனைப்பட்டிருந்தது,” அது “குறிப்பாக கிரேக்க சமூகத்தின் வறிய பிரிவுகளைப் பாதித்தது.”
உண்மையில், 2015 இல் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை ஒடுக்கி நசுக்கிய சிரிசா அரசாங்கம், ஐரோப்பிய நிதி மூலதனம் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளை குரூரமாகவும் முறையாகவும் செயல்படுத்தியது. அனேகமாக மிகவும் இழிவாகவும், அது அகதிகளுக்கு எதிரான இன்னும் கொடூரமான ஐரோப்பிய ஒன்றியத்தின் “ஐரோப்பிய கோட்டையின்” முன்முகப்பில் இருந்து சேவையாற்றியது. கிரேக்க பொலிஸ் கண்காணிப்பில், வதை முகாம்களுக்கு நிகரான அகதிகள் முகாம்களை நிறுவியதும் அதில் உள்ளடங்கும். அதேநேரத்தில், அது நேட்டோவையும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளையும் முழுமையாக ஆதரித்தது.
சிரிசா அரசாங்கம், அதீத சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பையும், பேரழிவுகரமான விளைவுகளுடன் பெருந்திரளான கிரேக்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வறுமையையும் அது மேற்பார்வையிட்டது. கடந்த புதிய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தின் இறுதி மாதங்களில் 57 பேர் கொல்லப்பட்ட இரயில் விபத்தை, “பொது உள்கட்டமைப்பில் முதலீடு செய்யாததாலும் மற்றும் இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கியதாலும்” ஏற்பட்ட விளைவு என்று ஜாகோபின் மேற்கோளிடுகிறது. இதில் பெரும்பாலானவை சிரிசாவின் கீழ் நடந்தது என்பதை அது உதறி விடுகிறது. கிரேக்க அரசு இரயில் சேவை TrainOSE விற்கப்பட்டதும் அதில் உள்ளடங்கும்.
உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தவாறு, இந்த ஒட்டுமொத்த நிகழ்வுபோக்கின் விளைவும் வலதுசாரி அரசியலை பலப்படுத்தி உள்ளது. சிரிசாவை ஊக்குவித்து மூடிமறைத்த அனைத்து எல்லா அமைப்புகளும், சில அமைப்புகள் முட்டாள்தனத்தால் அந்த பாத்திரம் வகித்தன என்றாலும், பொதுவாக நனவுப்பூர்வ புரிதலோடு மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான விரோதத்துடனும் அவற்றின் பாத்திரத்தை வகித்தன.
'போலி-இடது' என்ற சொல்லை WSWS பயன்படுத்தும் போது, 'போலி' என்பதில் வலியுறுத்தல் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய அமைப்புகளில் 'இடது' என்று எதுவும் இல்லை. அவர்கள் 'சோசலிஸ்ட்' என்ற சொல்லை ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்: அதாவது, தொழிலாள வர்க்கம் உண்மையான சோசலிச அரசியலை நோக்கி திரும்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களைப் பொறுத்த வரையில், செல்வ வளமும் தொலைநோக்கு பார்வையும், ஏகாதிபத்தியம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டுடன் பிணைந்துள்ள தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
கிரேக்கத்தில் சிரிசாவின் நிஜமான வரலாறையும் மற்றும் படிப்பினைகளையும் பொய்மைப்படுத்தியதன் மூலம், ஜாகோபின் புதிய காட்டிக்கொடுப்புகளை ஒழுங்கமைக்க தன்னால் ஆனமட்டும் அது அனைத்தையும் செய்ய உத்தேசிக்கிறது என்பதை அது தெளிவுபடுத்துகிறது. “அடுத்த நான்காண்டுகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராடுவதும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதும் மிகவும் சிக்கலான வேலையாக இருக்கும்,” என்று கௌசோலிஸ் அவர் கட்டுரையை நிறைவு செய்கிறார். “புதிய உண்மையான தீவிர அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் விதத்தில் … இடதுசாரி சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்பை … மீண்டும் கட்டியெழுப்புவது” அவசியம் என்று அவர் எழுதுகிறார்.
சிரிசாவில் இருந்து பிரிந்த அணிகளும் மற்றும் பல்வேறு எச்சசொச்சங்களும் என எந்த அமைப்பை ஒன்றுசேர்த்து ஒட்டுப் போட்டாலும், அது சிரிசாவை விட அதிக “தீவிரமாக” இருக்காது. சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கு ஒரு வழி காண விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு புதிய பொறியை உருவாக்குவதே அதன் நோக்கமாக இருக்கும்.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பும் ஜாகோபினும் சிரிசாவை மூடிமறைத்து ஆதரிப்பது ஏனென்றால், எதுவாக இருந்தாலும், 2015 முதல் 2019 வரை சிரிசா ஆட்சியில் இருந்த அதன் கொள்கைகள் என்னவாக இருந்ததோ அவர்களின் கொள்கைகளும் வலதை நோக்கியதாகவே இருக்கும். இது ஊகம் இல்லை. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் கடந்தாண்டு ஓர் இரயில்வே துறை வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்க வாக்களித்தனர், மற்றும் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை DSA முழு மனதோடு ஆதரிக்கிறது.
இங்கிலாந்தில் கோர்பின், அமெரிக்காவில் சாண்டர்ஸ், ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்சில் மெலென்சோன் மற்றும் உலகெங்கிலுமான எண்ணற்ற வகையறாக்கள், இந்த அரசியல் ஸ்தாபகத்தின் கன்னைகளாக உள்ளனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை அல்ல, மாறாக தனிச்சலுகை கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளால் ஊக்குவிக்கப்படுகின்றனர் மற்றும் ஆதரிக்கப்படுகின்றனர். அவர்களின் முதலாளித்துவ-சார்பு கொள்கைகள் பிழையாக ஏற்பட்டதில்லை, மாறாக அவை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக சக்திகளின் விளைபொருளாகும். சிரிசாவைப் போலவே, அவை அரசியல் வலதைப் பலப்படுத்த மட்டுமே சேவையாற்றுகின்றனர்.
உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய இயக்கம் வளர்ந்து வருகிறது. இது, அதீத மட்டத்திலான சமூக சமத்துவமின்மை, தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்திய போர்களின் விளைவுகள், பாசிசவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் வளர்ச்சி, பெருந்தொற்றின் பாதிப்பு, முதலாளித்துவ நெருக்கடியின் அனைத்து விதமான வெளிப்பாடுகள் ஆகியவற்றின் விளைபொருளாகும்.
ஆனால் தொழிலாள வர்க்கத்தில் ஓர் உண்மையான சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியானது, ஒரு தன்னியல்பான நிகழ்முறையாக நடப்பதில்லை. அதற்கு, வரலாற்று படிப்பினைகளின் அடிப்படையில் கல்வியூட்டப்பட்ட காரியாளர்களைக் கொண்ட ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். போலி-இடதுகளைச் சமரசமின்றி சளைக்காது எதிர்க்கவும் அம்பலப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பது இந்தக் கல்வியூட்டலின் மத்திய கூறுபாடாகும். இது தான் கிரேக்கத்தில் சிரிசா அனுபவத்தில் இருந்து கிடைக்கும் நிஜமான படிப்பினையாகும்.