மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
யூலை 23ல் நடந்த ஸ்பெயின் தேசியத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிய வலதுசாரி மக்கள் கட்சி (PP) மற்றும் நவ-பாசிச வோக்ஸ் (Vox) ஆகியவை ஒட்டுமொத்த பெரும்பான்மையை விட ஏழு குறைந்து 169 இடங்களை பெற்றுள்ளன. சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் சுமர் (Sumar) கூட்டுக்கு 153 இடங்கள் கிடைத்துள்ளன.
மக்கள் கட்சி 2019 இல் 5 மில்லியன் வாக்குகள் மற்றும் 89 இடங்களிலிருந்து 8 மில்லியன் (33 சதவீத வாக்குகள்) வாக்குகளுடன் 136 இடங்களுக்குச் சென்றது. இந்தக் கட்சி இப்போது வலதுசாரி வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அது 47 இடங்களை மேலும் உயர்த்தியுள்ளது. ஆனால் வோக்ஸ் கட்சி, 2019 இல் 3.6 மில்லியன் வாக்குகள் மற்றும் 52 இடங்களிலிருந்து, 2.8 மில்லியனாக (12 சதவீத வாக்குகள்) வீழ்ச்சியடைந்து 33 இடங்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், அனைத்து அத்தியாவசிய விஷயங்களிலும், வோக்ஸின் நவ-பாசிச வேலைத் திட்டம், அது உருவாகிய மக்கள் கட்சியால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அதன் வர்க்கப் போர் மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக மட்டுமே வோக்ஸின் தீவிர வாய்ச்சவடால்களில் இருந்து மக்கள் கட்சி விலகி நிற்கிறது.
1978ல் சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி மற்றும் “ஜனநாயகத்திற்கு மாறுதல்” ஆகியவற்றிற்குப் பிறகு, ஒரு பாசிச பிராங்கோவாத கட்சியான வோக்ஸ், அரசாங்கத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது இத் தேர்தலில் முக்கிய மாற்றமாகும். 2019 இல் 66 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவுகள், 4 சதவீதமாக அதிகரித்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது - இது 15 ஆண்டுகளில் மிக அதிகமான பங்கேற்பு ஆகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்-சார்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தற்போதைய பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் தலைமையிலான PSOE கட்சி, இத்தேர்தலில் முக்கிய பயனாளியாக இருக்கிறது, 2019 இல் 6.8 மில்லியன் வாக்குகள் மற்றும் 120 இடங்களிலிருந்து, தற்போது 7.7 மில்லியன் (31 சதவீத வாக்குகள்) வாக்குகளுடன் 122 இடங்களுக்கு உயர்ந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், பிரிவினைவாத கட்சிகள் மற்றும் வாக்காளர்களின் இழப்பில் கட்டலோனியா மற்றும் பாஸ்க் பிராந்தியத்தில் இருந்து PSOE க்கு மிகப்பெரிய வாக்குகள் கிடைத்துள்ளன.
தற்காலிக துணைப் பிரதம மந்திரியும் தொழிலாளர் அமைச்சருமான யோலண்டா டியாஸ் தலைமையிலான பாரிய அளவில் மதிப்பிழந்த போலி-இடது பொடெமோஸை உள்ளடக்கிய, 15 கட்சிகளின் தேர்தல் கூட்டான சுமர், 2.9 மில்லியன் வாக்குகளுடன் (12 சதவீத வாக்குகள்) 31 இடங்களில் வென்றுள்ளது. 2019 இல் Unidas-Podemos ஆக நிற்கும் போது, இந்தக் கட்சிகள் பெற்ற 38 இடங்கள் மற்றும் 3.4 மில்லியன் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது அரை மில்லியன் வாக்குகள் இழப்பாகும் - நான்கு வருட போர்-சார்பு, சிக்கன நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்சியின் கீழ்நோக்கிய வீழ்ச்சியை இது உறுதிப்படுத்துகிறது.
சுமரின் செல்வாக்கற்ற தன்மை, எஃகுத் தொழிலாளர்கள் உள்ளே நுழைந்து கேலி செய்ததை அடுத்து அதன் தலைவர் டியாஸ் காடிஸ் பேரணியை இடைநிறுத்த வேண்டியிருந்ததில் வெளிப்பட்டது.
மொத்தமாக 153 இடங்களுடன் இருக்கின்ற PSOE மற்றும் சுமருக்கு ஒட்டுமொத்த பெரும்பான்மையான 176ஐப் பெறுவதற்கு தேசியவாதிகள் மற்றும் பிராந்தியவாதக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். நாடுகடத்தப்பட்ட முன்னாள் கட்டலான் பிராந்தியப் பிரதமரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்லொஸ் புய்க்டெமாண்ட் தலைமையிலான ஒன்றுபட்ட கேட்டலோனியாவின் ஏழு இடங்களும் இதில் அடங்கும்.
கார்லொஸ் மற்றும் கேட்டலான் அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது, அக்டோபர் 30, 2017 கிளர்ச்சி மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து பின்னர் சுதந்திரத்தை அறிவித்ததாக தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. கார்லொஸ் பெல்ஜியத்திற்கு தப்பி ஓடினார். இந்த மாத தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றத்தால் அவர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து விலக்கு பெற்றார். குறைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன், ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள புதிய ஐரோப்பிய கைது வாரண்டுக்காக அவர் இப்போது காத்திருக்கிறார்.
பிரிவினைவாதக் கட்சிகள் PSOE யிடம் தங்களின் முந்தைய ஆதரவைப் புதுப்பிக்க என்ன கோரிக்கை வைக்கும் என்பது பற்றிய ஊகங்களால் ஊடகங்கள் நிரம்பியுள்ளன, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வாக்கெடுப்பு உட்பட, அவர்களின் ஆதரவு குறைந்து வருவதால் இது சாத்தியமில்லை. “ஸ்பெயினின் ஒற்றுமையை உடைப்பதன் மூலம்” மட்டுமே சான்செஸ் ஆட்சி செய்ய முடியும் என்று வலதுசாரி பத்திரிகைகள் ஒரு மூர்க்கத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன, அதே நேரத்தில் வோக்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் “கம்யூனிசத்தின் ஆதரவுடன் முதலீடு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகவும், ஆட்சிக்கவிழ்ப்பு தேடும் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு” எதிராகவும் குற்றம் சாட்டினார்.
இப்போது அரசியல் முடக்கம் மற்றும் அதிகரித்து வரும் நெருக்கடியானது நீண்ட காலத்திற்கு இருக்கலாம். 2019 இல், PSOE மற்றும் பொடமோஸ் ஸ்பெயினின் முதல் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு மூன்று தேர்தல்களை எடுத்தது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் எதனையும் இந்த தேர்தல்கள் தீர்க்கவில்லை. ஒரு PSOE-சுமர் அரசாங்கமானது, பாசிச ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் அரசியல் வாரிசுகளால் முன்னெடுக்கப்படும் வளர்ந்து வரும் ஆபத்தை நிறுத்தாது. மாறாக, வெளியேறும் அரசாங்கத்தின் போர்-சார்பு மற்றும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக வெடித்துள்ள இடதுசாரி போராட்ட இயக்கத்தை நசுக்குவதற்கும், சான்செஸின் பின்னால் ஒன்றுபடுவதற்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு இதன் விளைவுகள் பயன்படுத்தப்படும்.
தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகவும் அதன் சொந்த நலன்களுக்காகவும் தலையிடுவதைத் தடுப்பதே PSOE மற்றும் சுமரின் தேர்தல் மூலோபாயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. (குறிப்பாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஸ்பெயினின் பங்கேற்பு, குறைந்த ஊதியங்கள், விலைவாசி உயர்வு மற்றும் வாடகை மற்றும் அடமானங்களின் அதிக செலவுகள் அல்லது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களால் தூண்டப்பட்ட வாழ்க்கைச் செலவு, சீரழிந்த சமூக நிலைமைகள் போன்றவைகளாகும்) மாறாக, கடந்தகால விமர்சனங்கள் அனைத்தையும் கைவிட்டு, மக்கள் கட்சி மற்றும் வொக்சை அரசாங்கத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முறையீடுகள், பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
கடந்த திங்களன்று, PSOE இன் தலைமையகத்தில் இருந்து கொண்டாடிய சான்செஸ், “கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த அனைத்து முன்னேற்றங்களையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதை, பிற்போக்கு கூட்டின் தோல்வி தடுத்துள்ளது” என்று இழிந்த முறையில் அறிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் ஸ்பெயினின் பங்கேற்பை ஆதரிப்பது, ஓய்வூதியங்கள் மற்றும் ஊதியங்களைக் குறைப்பது, இராணுவ வரவு செலவுத் திட்டத்தைப் பெருமளவில் உயர்த்துவது மற்றும் முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பிணை எடுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கொள்கைகளுடன் PSOE-சுமர் அரசாங்கம் தொடர்வதால், “பாசிசத்திற்கு எதிரான ஒற்றுமை” தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்.
இந்த மாதம் கலீசியாவில் உலோகத் தொழிலாளர்கள் பணவீக்கத்திற்கு மேலான ஊதியங்களைக் கோரி வேலைநிறுத்தம் செய்தபோது, அவர்களின் வேலைநிறுத்தத்தை தடியடி, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் நசுக்குவதற்கு காபந்து அரசாங்கம் நூற்றுக்கணக்கான கலகத்தடுப்பு போலீசாரை அனுப்பியது. வேலைநிறுத்தம் செய்யும் விமானப் பணியாளர்களுக்கு எதிராக, அது கடுமையான வேலைநிறுத்த எதிர்ப்பு குறைந்தபட்ச சேவைகளை திணித்தது.
PSOE-பொடமோஸ் சமீபத்திய மாதங்களில் அதன் போர் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. சான்செஸ் கியேவ் சென்று உக்ரேனுக்கு “என்ன விலை கொடுத்தும்” ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை உறுதியளித்தார். நேட்டோவின் வில்னியஸ் உச்சிமாநாட்டில் இணைந்துகொண்ட அவர், ஸ்பெயின் 700 துருப்புக்களை ஸ்லோவாக்கியாவில் முதன்முறையாக நிலைநிறுத்தி, ரஷ்யாவில் நேட்டோவின் சுற்றிவளைப்பை வலுப்படுத்த 250 துருப்புக்களை ருமேனியாவில் நிலைநிறுத்த உறுதியளித்தார். “புட்டினின் சட்டவிரோதப் போருக்கு” எதிராக, உக்ரேன் “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமைக்கு” டியாஸ் அல்லது அவரது நம்பர் டூ அகஸ்டின் சாண்டோஸ், தங்கள் சொந்த ஆதரவை அறிவிக்க ஒரு நேர்காணலையும் தவற விட்டது கிடையாது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் “அகதிகள் கடலில் மூழ்கட்டும்” என்ற கொள்கையின்படி, கேனரி தீவுகளின் கடல்பகுதியில் 37 அகதிகளை மூழ்கடிக்க அவர்களது அரசாங்கம் அனுமதித்தது.
மே மாத உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒரு உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த 56 நாட்களுக்குள் காபந்து அரசாங்கம், 24 பில்லியன் யூரோ வெட்டுக்களுடன் அடுத்த ஆண்டு வரி அதிகரிப்பை உறுதி செய்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஸ்பெயினும் நேட்டோ கூட்டமைப்பும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து போரை நடத்தி, சீனாவிற்கு எதிராக தொடர்ந்து ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டு வருவதால், 1970களில் இருந்து ஐரோப்பா முழுவதும் மிகப்பெரிய வேலைநிறுத்த அலைகளுக்கு மத்தியில் எந்த PSOE-சுமார் அரசாங்கமும் அதிகாரத்தை கைப்பற்றும். அதிகரித்துவரும் பணவீக்கத்தின் வெடிப்பானது, வர்க்க பதட்டங்களை கொதிநிலைக்கு கொண்டு வருகிறது. வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தி வருகின்ற PSOE மற்றும் சுமர், மேலும் வலதிற்கு நகர்ந்து, பொலிஸ் அரச நடவடிக்கைகளுடன் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை தொடுக்கும்.
அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கான தீர்வு, ஸ்பெயின் பாராளுமன்றத்திலோ அல்லது சுமர், பொடெமோஸ், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளிலோ அல்ல. மாறாக, உலக வர்க்கப் போராட்டத்தில்தான் காணமுடியும். கடந்த சனிக்கிழமை முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல், ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது அவசியமானது. இது, சர்வதேச தொழிலாள வர்க்கம், ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதோடு, சோசலிச அரச அதிகார மாற்றத்திற்காக இந்த வளரும் இயக்கத்தில் ஐக்கிப்பட்டுப் போராடுவதே முன்னோக்கி செல்லும் வழியாகும்.