இலங்கை சோ.ச.க. சோசலிச வேலைத்திட்டத்திற்காக உள்ளுராட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறது

சோசலிச சமத்துவக் கட்சி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டம் காரைநகர் பிரதேச சபை மற்றும் கொழும்பின் புறநகரான கொலன்னாவை நகர சபைக்கும் முறையே 13 மற்றும் 21 வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகின்றது.

27 ஏப்ரல் 2025 அன்று காரைநகரில் ஊரி கிராமத்தில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய கூட்டம்

சோ.ச.க. காரைநகர் ஊரியில் ஏப்பிரல் 27, தென் இலங்கையில் உள்ள மாத்தறையில் ஏப்பிரல் 26 மற்றும் ஏப்பரில் 9 அன்று கொழும்பு மற்றும் ஏப்பிரல் 7 யாழ்ப்பாணத்திலும் தொடர் தேர்தல் கூட்டங்களை நடத்தியது. எமது இறுதிக் கூட்டம் கொலன்னாவையில் மே 3 சனிக்கிழமை இலங்கை வங்கி வளாகத்திற்கு அருகில் நடைபெற உள்ளது.

கொலன்னாவையானது கொழும்பு நகர மையத்திற்கு அருகாமையில் ஜனத்தொகை நிறைந்த உள்ளுராட்சிகளில் ஒன்று ஆகும். 2024 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி இங்கு மக்கள் தொகை 204,484 பேர் ஆகும். இது கொழும்பு மாவட்டத்தின் மொத்த சனத் தொகையான 2.46 மில்லியனில் 8 சதவீதம் ஆகும்.

இந்தப் பகுதி அரசாங்க ஊழியர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ஏனைய வறுமைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதி ஆகும். களஞ்சியங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள், கொல்கலன் நிறுத்தமிடங்கள், தேயிலை பொதிசெய்யும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான மின்சாரம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனங்கள் உட்பட பல தொழிற்சாலை மற்றும் வர்த்தக கட்டிடகங்களை கொலன்னாவ கொண்டுள்ளது.

காரைநகர், யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழும் தீவுகளில் ஒன்றாகும். இது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1983 இல் இருந்து முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரால் பாதிக்கப்ட்ட தீவாகும். அதன் விளைவாக, 1970களில் 80,000 ஆக இருந்த மக்கள் தொகை 10,500 சடுதியாக குறைந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மாணவர் அமைப்பின் உறுப்பினர்களும் ஏகாதிபத்தியப் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வதிகார ஆட்சி வடிவங்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக இலங்கை முழுவதிலும் சமீபத்திய வாரங்களில் பிரச்சாரம் செய்தனர்.

கலந்துறையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் பற்றி தொடர்ச்சியாக மக்கள் முறைப்பாடு  செய்தனர். ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றுவதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வழங்கப்பட்ட உறுதிகளை கைவிட்டுள்ளது.

20 ஏப்ரல் 2025 அன்று கொலன்னாவையில் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர் கலந்துரையாடிய போது

மீதொட்டமுல்லவில் வாழும் முச்சக்கரவண்டி ஓட்டுனர், ”எனது நாளாந்த வருமானம் சில நேரங்களில் 2,500 ரூபா சில நேரங்களில் ஒன்றும் கிடைக்காது. நிலையற்ற வருமானம் ஆகும்” எனக் கூறினார். ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் ”சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்திலேயே செல்லுகின்றது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னர் அவர்களே கூறினர்.

“ஜே.வி.பி.தே.ம.ச. ஏழைகளின் கட்சி என தன்னை முன்நிறுத்தியது, ஆனால் முதலாளித்துவ சொத்து முறையைப் பாதுகாக்க தற்போது வேலை செய்கின்றது” என அவர் தெரிவித்தார். “இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முறைமை இருக்க வேண்டும். ஒரு புதிய கட்சி வர வேண்டும்.”

மீதொட்டமுல்ல இளைஞன் ஒருவர் வேலையின்மை மீதான அவரது வெறுப்புப் பற்றி பேசினார். அவர் உணவக தொழிற்துறையுடன் தொடர்புடைய பட்டப்படிப்பை தற்போது படித்து வருவதோடு ஜேர்மனிக்கு புலம் பெயரும் நோக்கத்தில் உள்ளார். பிரச்சாரக்காரர்கள் ஜேர்மனியில் சமூகநலன் வெட்டுக்கள் மற்றும் அதி-வலது சக்திகளின் எழுச்சி, இராணுவத்திற்கு அதிகளவிலான அரச செலவு மற்றும் மூன்றாம் உலகப் போரின் வளர்ந்துவரும் ஆபத்து பற்றி விளக்கினார்கள்.

“நான் போரை எதிர்க்கிறேன். உண்மையில் இந்த நாட்டிலேயே நான் இருக்க விரும்புகின்றேன். எனது பெற்றோர்களும் உறவினர்களும் இங்கே தான் உள்ளனர். ஆனால் எமது நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாகவும் வேலைப் பிரச்சினை காரணமாகவும் இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றேன். மீதொட்டமுல்லவில் இளைஞர்களுக்கு வேலைகளும் கிடையாது கல்வியும் கிடையாது. தமது கல்விக்கு செலவிட காசும் கிடையாது. அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்கின்றன.”

18 ஏப்ரல் 2025 அன்று காரைநகரில் உள்ள கள்வந்தழ்வு கிராமத்தில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம்

சோசலிச சமத்துவக் கட்சி கொலன்னாவ நகர மையத்திற்கு அருகாமையில் உள்ள சன்கிந்த செவன மாடிக்குடியிருப்பில் பிரச்சாரம் செய்தது. சன்கிந்த செவன 42 சதுர மீற்றர் அளவு கொண்ட 240 குடியிருப்புகளைக் கொண்டு 11 மாடி கட்டிடம் ஆகும். இந்த குடியிருப்புகள் செல்வந்த முதலீட்டாளர்களை கவர கொலன்னாவ நகர அபிவிருத்திக்கு வழியமைப்பதன் பேரில் கொழும்பில் நகரில் உள்ள தமது வீடுகளில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது ஆகும்.

நகர அபிவிருத்தி அதிகார சபையே இந்த குடியிருப்புகளுக்குப் பொறுப்பு. ஆனால் அவற்றை போதுமான வகையில் பராமரிப்பது கிடையாது. கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை, சுமைதுாக்கிகள் தொடர்ந்தும் பழுதடைகின்றன, அதன் தரமற்ற வடிவமைப்பு காரணமாக சத்தம் அதிகரிக்கின்றது. தாம் சொந்த இடத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்ட பின்னர் தொழில்களை இழந்துள்ளதாக பலர் கூறினர்.

கொழும்புத் துறைமுகத் தொழிலாளரான அஸ்கர் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை விமர்சித்தார். ”ஆட்சிக்கு வர முன்னர் இது ஏழைகள் பக்கம் பேசியதோடு போராட்டங்களில் இணைந்திருந்தது. தற்போது இது ஏழை மக்களுக்கு எதிராக செயற்பட்டு பணக்காரர்கள் பக்கம் உள்ளது.”

அந்த தொழிலாளி காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போரை எதிர்த்து, ஒரு சிறப்பங்காடியில் சுவரொட்டியை ஒட்டியமைக்காக 22 வயதான முஸ்லீம் இளைஞரான முகமது ருஷ்டி என்ற இளைஞரை பொலிஸ் கைது செய்து தடுத்து வைத்தமையை எதிர்த்தார். “அமெரிக்காவால், மக்களின் உயிர்களைப் பற்றி கவலைப்படாத இஸ்ரேலின் கையில் பலஸ்தீனிய மக்கள் துன்பப்டுகின்றதாக கூறிய அவர், காசா இனப்படுகொலையில் அமெரிக்காவின் வகிபாகத்தை கண்டித்தார். போர்-எதிர்ப்பு இயக்கம் அவசியம் என்பது தெளிவானது ஆகும்”.

அஸ்கர், இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் போர் ஆபத்தின் மீதான கவலையை வெளிப்படுத்தினார். இந்தியா, அமெரிக்காவின் ஆதரவுடன் இந்தப் பிராந்தியத்தின் சக்தியாக வருவதற்கு முயற்சிக்கின்றது. சிந்து நதி தடுக்கப்படுமாயின் பாகிஸ்தானில் உள்ள பல மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீரை இழப்பர். இது பாரிய அழிவை ஏற்படுத்தும்” என அவர் கூறினார். இந்தியா, ஏப்பிரல் 22 அன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி தணணீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது.

அமெரிக்கா பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையின்ன மத்தியில் இலங்கையின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே தழுவியுள்ளது” என அவர் சேர்த்துக்கொண்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், வானளாவ உயர்ந்துள்ள விலையேற்றத்தால் தாங்கமுடியாத வாழ்க்கை நிலைமையை எதிர்கொண்டுள்ள மத்திய மலையக பகுதியில் ஹட்டன் மற்றும் மஸ்கெலியாவில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்தனர். முன்னேற்றத்திற்கான சில மாற்றத்தை எதிர்பார்த்து கடந்த பொதுத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. கட்சிக்கு வாக்களித்ததாக பல தொழிலாளர்கள் கூறினர். தற்போது நிலைமை மோசமடைந்தது மட்டுமே நடந்துள்ளது.

தொழிலாளர்கள், பாரம்பரிய கட்சிகள் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) போன்ற அரசியல் கட்சிகளாக செயற்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள் மீதும் விரோதமாக உள்ளனர்.

மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த 52 வயதான வி. அழகி, “தற்போதுள்ள விலைவாசியின் கீழ் 1,350 ரூபா நாள் கூலியுடன் வாழ்வதென்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த ஊதியத்தை பெறக் கூட ஒரு நாளுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டிய எமது இலக்கை நிறைவு செய்யேவேண்டியிருக்கிறது. சகிக்க முடியாத இந்த நிலைமைகளின் கீழ் முன்கூட்டியே ஓய்வுதியம் எடுக்க நிர்ப்பந்திக்கபட்டுள்ளேன்,” எனக் கூறினார்.

1987-1990 காலத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் எதிராளிகளை கொன்று ஜே.வி.பி.யால் முன்னெடுக்கப்பட்ட பாசிச பயங்கர பிரச்சாரத்தை மற்றொரு தொழிலாளி நினைவு கூர்ந்தார். “பல தேயிலை மற்றும் இரப்பர் தொழிற்சாலைகள் ஜே.வி.பி.யால் எரிக்கப்பட்டது” என அவர் கூறினார். “பகல் வேளையில் வீட்டில் உணவு சமைப்போம் இரவு உணவு முடிந்த பின்னர் தேயிலைப் புதர்களுக்கு மத்தியிலும் எமது பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட மறைவு கிடங்குகளிலும் நாம் மறைந்திருப்போம்,” என அவர் கூறினார். அவர் ஜே.பி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை.

காரைநகரைச் சேரந்த 76 வயதான சண்முகம் செல்லமுத்து, காரைநகரை கைப்பற்றுவதற்கு 1991 இல் அரசாங்கம் தொடங்கிய பாரிய இராணுவ நடவடிக்கையின் போது நடந்த போரால் தனது குடும்பம் பாதிக்கப்பட்தை விளக்கினார்.

“அந்த நேரத்தில் வெளியேறிய எனது குடும்பம் காரைநகர் தீவிற்கு வெளியே உள்ள மூலாய் கிராமத்தில் தங்கியிருந்தது. எனது மகன் 18 வயதான சக்திவேல் தொழிநுட்ப கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்தார். அவர் காரைநகரில் உள்ள தனது மூத்த மாமா மற்றும் அத்தையை கூட்டிவர மூலாயை விட்டு வெளியேறினார். எவ்வாறாயினும், அவர் திரும்பும் முன்பே இராணுவம் காரைநகரை கைப்பற்றியது.

சில நாட்களுக்குப் பிறகு, அவரின் மகனும் பல ஏனைய இளைஞர்களும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செஞ்சலுவைச் சங்கத்திடம் இருந்து வந்த தகவலை செல்லமுத்து குடும்பம் பெற்றது.

“அந்த நாளில் இருந்து நாம் அவரை சகல இராணுவ முகாம்கள் உட்பட பல இடங்களில் தேடிக்கொண்டுதான இருக்கின்றோம். ஆனால் எனது மகனைக் கண்டுபிடிக்கவில்லை” என அவர் கூறினார். எமது குடும்பத்தில் மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். அதில் மகன் காணாமல் போய்விட்டார்.” பல இளைஞர்கள் படையினரால் சாதாரணமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என அவர் கூறினார்.

Loading