இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மன்) தேசியக் குழு உறுப்பினர் கட்ஜா ரிப்பர்ட் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) சார்பாக, சரியாக 80 ஆண்டுகளுக்கு முன்பு, மே 1945 இல் செம்படையால் விடுவிக்கப்பட்ட பேர்லின் நகரத்திலிருந்து இருந்து, மே தினத்தன்று புரட்சிகர வாழ்த்துக்களை நான் உங்களுக்குக் தெரிவித்துக்கொள்கிறேன்.
வடகிழக்கு பேர்லினில் உள்ள ஷோன்ஹோல்சர் ஹைடில் உள்ள சோவியத் நினைவுச்சின்னத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோவியத் வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பாசிஸ்டுகளுக்கு எதிரான வீரம்மிக்கப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள். சோவியத் போர்க் கைதிகளும் இங்கு நினைவுகூரப்படுகிறார்கள். இந்த இடம் ரஷ்யாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சோவியத் கல்லறையாகக் கருதப்படுகிறது.
27 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் பிரஜைகளும் 6 மில்லியன் யூதர்களும் மாபெரும் மனிதப்படுகொலை மற்றும் நாஜி அழிப்புப் போருக்கு பலியாகினர்.
இவர்கள் தொலைதூர கடந்த காலத்தில் மரணித்த நபர்கள் அல்ல.
எண்பது ஆண்டுகளின் பின்னர், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் கொள்ளையடிக்கும் விரிவாக்கக் கொள்கைகளுக்குத் திரும்புவதை நாம் காண்கிறோம். மூலப்பொருட்கள், உழைப்புச் சக்தி மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்கான அவர்களின் வேட்கை, ஜேர்மன் உயரடுக்கினரை மூன்றாவது முறையாக ரஷ்யாவிற்கு எதிரான போருக்குள் தள்ளுகிறது.
ஹிட்லருக்குப் பின்னரான பிரமாண்டமான மறுசீரமைப்பை நியாயப்படுத்த, அவர்கள் புடின் ஆட்சியின் உக்ரைன் மீதான பிற்போக்கு படையெடுப்பை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஜேர்மன் பாராளுமன்றம் (Bundestag) மற்றும் ஜேர்மன் சட்டசபையும் (Bundesrat) 1 ட்ல்லியன் யூரோக்களுகும் அதிகமான போர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
சான்சலராக நியமிக்கப்பட்ட ஃபிரீட்ரிக் மெர்ஸ், மொஸ்கோவை சென்று தாக்கக்கூடிய ஜேர்மன் டாரஸ் நெடுந்தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்க விரும்புகிறார். அது மிகவும் ஆபத்தான விரிவாக்கம் ஆகும். டாரஸ் ஏவுகனைக்கு ஜேர்மன் இலக்குகள் மீதான தாக்குதல்களுடன் கிரெம்ளின் பதிலளிக்காது என்று எவராலும் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
பாசிச ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, ஜேர்மனி தனது போர் திட்ட நிரலை, அமெரிக்க ஆதரவின்றி அல்லது தேவைப்பட்டால் அதற்கு எதிராகவும் கூட, மேலும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. ட்ரம்பின் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கைக்கு, ஜெர்மன் அரசாங்கம் 'எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி' என பதிலளித்து வருகிறது.
இந்த ஆயுதபாணியாகும் வெறிக்குப் பின்னால், ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் பழிவாங்கும் வெறி உள்ளது. அது இறுதியாக போருக்குப் பிந்தைய காலத்திலான தடங்கல்களை உடைத்தெறிந்துவிட்டு மீண்டும் உலக அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக 'ஜனநாயகத்தை' பாதுகாப்பதாக கூறும் பொய்களுக்குப் பின்னால் அதன் புவிசார் அரசியல் நலன்களை அது மூடிமறைக்கின்றது.
கருத்தியல் முன்னரங்கில், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மூடிமறைக்க வரலாறு மீண்டும் எழுதப்படுகிறது. நாஜிக்களின் நிர்மூலமாக்கல் போர் மற்றும் யூதப் படுகொலைகளை ஒப்பிட்டு பேசும் ஜேர்மன் கல்விமான்கள், சோவியத் ஒன்றியத்தை இரண்டாம் உலகப் போரின் உண்மையான ஆக்கிரமிப்பாளராகவும் குற்றவாளியாகவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
இப்போது பாராளுமன்றம் ரஷ்யா மற்றும் பெலரஸின் தூதர்களை இந்த ஆண்டு போர் முடிவு நினைவு நாளில் இருந்து விலக்கி வைத்துள்ளது. இந்த அவமதிப்பு முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரானதாகும். ரஷ்யாவிலும் பெலரஸிலும் நாஜிக்களின் பயங்கரத்திலோ அல்லது அவர்களுக்கு எதிரான போராட்டத்திலோ தங்கள் உறவினர்களை இழக்காத ஒரு குடும்பம் கூட இல்லை.
தினந்தோறும், ஜெர்மன் அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் சமூகத்தை மீண்டும் 'போருக்கு ஏற்றதாக' மாற்றுவதற்காக முரசு கொட்டி வருகின்றனர். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU), ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவற்றின் வரவிருக்கும் அரசாங்கமானது கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை இராணுவமயமாக்கவும், ஒரு பெரிய ஆயுதத் தொழிற்துறையை உருவாக்கவும், போர் பொருளாதாரத்திற்கு மாறவும், சமூக வெட்டுக்களை முன்னெடுக்கவும், அகதிகளை மேலும் தாக்கவும் திட்டமிட்டுள்ளது.
அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் போர்க் கொள்கையை ஆதரிக்கின்றன. முன்னாள் சமாதானவாதிகளும் பசுமைக் கட்சியினரும் இப்போது மிகவும் ஆக்ரோஷமான போர் வெறியர்களாகியுள்ளனர். வலதுசாரிகளின் எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டதால் 25 சதவீத இளம் வாக்காளர்களை வென்ற இடது கட்சி கூட, மீண்டும் ஆயுதமயமாக்கலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் வெட்டுக்கள், பெருமளவிலான வேலை நீக்கங்கள், விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு போன்றவை ஊடாக, போரின் செலவுகளை தொழிலாளர்களே சுமக்க வேண்டும்.
ஆனால், வேலைநிறுத்தங்கள், அதிதீவிர வலதுசாரி ஜெர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் என்ற வடிவில் எதிர்ப்பு ஏற்கனவே வெளிப்படத் தொடங்கிவிட்டது.
அரசாங்கம் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதேவேளை, போரை எதிர்ப்பவர்களும் அமைதியாகப் போராடும் மாணவர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.
1930களைப் போலவே, முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கும், சமூகப் புரட்சி பற்றிய அதன் பீதிக்கும் எதிர்வினையாற்றும் ஆளும் வர்க்கம், இப்போது வாக்கெடுப்புகளில் வலிமையான கட்சியாக இருக்கும் AfD இன் பாசிஸ்டுகளை ஊக்குவிக்கின்றது.
1933 இல், அரசியல் உயரடுக்குகளும் பெருவணிகங்களும் வலுவான தொழிலாளர் இயக்கத்தை நசுக்க ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டு வந்தன. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) ஸ்ராலினிசக் கொள்கைகள் தொழிலாளர்களைப் பிரித்து முடக்கியதால் மட்டுமே இது சாத்தியமானது.
தேசிய சோசலிசத்தில் (நாசிசம்), முதலாளித்துவம் அதன் மிகவும் அப்பட்டமான மற்றும் கொடூரமான வடிவத்தில் தன்னை வெளிப்படுத்தியது.
நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள இந்தப் பகுதியில், நாஜிக்கள் கட்டிய ஒரு கட்டாய உழைப்பு முகாமில், பல சோவியத் பிரஜைகள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மிகக் கொடூரமாக சுரண்டப்பட்டனர்.
அவர்கள், இன்று ஜெர்மனியின் பணக்கார வணிகக் குடும்பங்களில் ஒன்றான குவன்ட் (Quandt) குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்மன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகள் (Deutsche Waffen-und Munitionsfabriken AG) எனப்படும் ஆயுத நிறுவனத்துக்காக உழைத்தனர். குவன்ட்ஸ், 40 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான அவர்களின் பிரமாண்டமான செல்வத்தையும், BMW இல் பெரும்பான்மையான பங்கையும் 50,000 வரையிலான கட்டாய உழைப்பாளர்களின் வியர்வையைக் கொண்டே கட்டினார்கள்.
நீண்ட காலமாக, ஜெர்மன் முதலாளிகளின் நாஜி மரபு அமைதியாக இருந்து வந்துள்ளது. இப்போது, ரெஹின்மெடால் (Rheinmetall) போன்ற ஆயுத நிறுவனங்கள் மீண்டும் தங்கள் போர் லாபத்தில் மகிழ்ச்சியடைகின்றன.
ஆனால் அப்போதும், இப்போது போலவே, முதலாளித்துவம் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருந்தது. அதன் பைத்தியக்காரத்தனமான போர்ப் போக்கு அதன் பலவீனத்தின் வெளிப்பாடாகும். அது நீண்ட காலமாக காலாவதியாகிவிட்ட ஒரு சமூக முறைமையைப் பாதுகாத்து வருகிறது. முதலாளித்துவத்திற்கு புதை குழி தோண்டும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் கொந்தளிப்பைக் கண்டு அது பீதியடைந்துள்ளது.
1933 ஆம் ஆண்டைப் போலன்றி, இன்று அதற்கு ஒரு பாசிச வெகுஜன இயக்கம் இல்லை. தொழிலாளர்கள் தோற்கடிக்கப்படவில்லை. வெடித்துப் பரவும் போராட்டங்கள் இன்னும் வரவிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் போர் எதிர்ப்பு மனநிலை பிரமாண்டமானதாக உள்ளது. இரண்டு உலகப் போர்களும் அதன் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளன.
இளைஞர்கள் பீரங்கிக்கு இரையாக்கப்படுவதை விரும்பவில்லை. 29 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலோர் கட்டாய இராணுவ சேவையை நிராகரிக்கின்றனர். கடந்த ஆண்டு, 81 சதவீத இளைஞர்கள் ஐரோப்பாவில் போர் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தீர்க்கமான கேள்வி எதுவெனில்: காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்குவதை நிறுத்துவது எப்படி என்பேதே ஆகும்.
1933 தவிர்க்க முடியாதது அல்ல. ஹிட்லரைத் தடுக்கக்கூடிய ஒரு முன்னோக்கு இருந்தது: அது, ஒரு புரட்சிகரத் தலைமையின் கீழ் மற்றும் ஒரு சர்வதேசிய வேலைத்திட்டத்துடன் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றிணைப்பது ஆகும். புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி, இதற்காக இரண்டு தொழிலாளர் கட்சிகளின் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகத் தலைவர்களுக்கு எதிராகப் போராடினார்.
இன்று நாம் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான பலம் அணிதிரட்டப்பட்டால் போரையும் பாசிசத்தையும் நிறுத்த முடியும்.
இதற்கு, வரலாற்றின் பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு சோசலிச மூலோபாயத்தைப் பின்பற்றும் ஒரு அரசியல் தலைமை அவசியமாகும். இந்த முன்நோக்கைப் பிரதிநிதித்துவம் செய்வது, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே ஆகும்.
நான் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்: நேரத்தை இழக்க முடியாது! எங்கள் இயக்கத்தில் சேருங்கள். சோசலிச சமத்துவக் கட்சியிலும், எங்கள் இளைஞர் அமைப்பான IYSSEயிலும் ஊக்கத்துடன் செயல்படுங்கள்!