மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மே 3 அன்று, பாலஸ்தீனிய பிராந்தியங்களில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ், இஸ்ரேலால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக, முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அல்பனீஸின் தொடர்ச்சியான நேர்காணல்கள் மற்றும் அறிக்கைகளில், குறிப்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி காஜா கல்லா ஆகியோரை குற்றம் சாட்டினார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதன் மூலம், அது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதற்கு உதவுவதாகவும், உடந்தையாக இருப்பதாகவும் அல்பனீஸ் அவர்களை கண்டித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு உயர்மட்ட பிரமுகர்கள் இஸ்ரேலுடன் வழமையான வர்த்தக ஈடுபாடுகளைத் தொடர்கிறார்கள் என்ற உண்மை வருந்தத்தக்கது” என்று அல்பானீஸ் தெரிவித்தார். “தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதை நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஒப்பிட முடியாது. வரலாறு தீர்ப்பளிப்பதற்கு முன்பு அவர்களுக்கு தீர்ப்புகளை அளிக்க வேண்டும்” என்று அல்பனீஸ் குறிப்பிட்டார்.
தி இன்டர்செப்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “வரலாறு அவர்களுக்கு தீர்ப்பளிக்கும்” என்று நான் கூறவில்லை – அதற்கு முன்னர் அவர்களுக்கு தீர்ப்பளிக்க வேண்டும்” என்று அல்பானீஸ் மீண்டும் குறிப்பிட்டார்.
போர்க் குற்றங்களில் வொன் டெர் லேயென் உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) ஏற்கனவே ஒரு உத்தியோகபூர்வ புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், டெல் அவிவ் விஜயத்தின் போது கல்லாஸ் தெரிவித்த கருத்துக்களுக்காக அல்பானீஸ் அவரை விமர்சித்தார். பாலஸ்தீனியர்களின் துயரங்களைக் குறைத்துக் காட்டிய கல்லாஸ், டெல் அவிவ்வின் பாசிச ஆட்சியின் கொலைகாரத் தாக்குதலை மூடிமறைத்து, காஸாவின் நிலைமையை “இரு தரப்புக்குமான ஒரு இழப்பு” என்று விவரித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், காஸாவில் புதுப்பிக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதை விமர்சிக்க மறுத்ததற்காக சர்வதேச பொது மன்னிப்பு சபையும் ஐரோப்பிய ஒன்றியத்தை கண்டித்தது. ஐரோப்பிய கவுன்சிலின் அறிக்கைக்கு விடையிறுக்கையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐரோப்பிய பகுதி அலுவலகத்தின் இயக்குனர் ஈவ் கெடி, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடுப்பது குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலை சுட்டிக்காட்டத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை, அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸை வலியுறுத்திய அதே நேரத்தில் குற்றச்சாட்டுக்கள் அல்லது விசாரணைகள் இல்லாமல் இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள 4,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் விடையிறுப்பை “பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான மற்றொரு வெட்கக்கேடான முயற்சி” என்று சர்வதேச மன்னிப்புச் சபை தொகுத்தளித்தது.
உலக சோசலிச வலைத் தளம் அறிவித்துள்ளபடி, இஸ்ரேலிய அரசாங்கம் இப்போது காஸாவில் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான அதன் திட்டத்தின் இறுதிக் கட்டத்தை தொடங்கியுள்ளது. காஸா பகுதிக்குள் செல்லும் உணவு, குடிநீர், மின்சாரம் என அனைத்தின் மீதும் மார்ச் 2 அன்று முழு முற்றுகை திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரிய பட்டினி மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் அதன் இராணுவ நடவடிக்கைகளை ஐ.நா.வின் தங்குமிடங்கள், உணவு விநியோக மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்கு வைத்து அன்றாடம் குண்டுவீச்சுக்களை நடத்தி வருகிறது. காஸாவில் நம்பிக்கையற்ற மற்றும் பாதுகாப்பற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கடைசிப் புகலிடமாக இஸ்ரேலின் இரக்கமற்ற போர் முனை ஆகியுள்ளது.
இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் சர்வதேச அதிகாரிகள் இடைவிடாத துன்புறுத்தல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று அடையாளம் கண்ட மார்ச் 2024 இல் ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டதிலிருந்து, இனப்படுகொலையில் நிதி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்கை அம்பலப்படுத்துவதற்கான அறிக்கையை தயாரிப்பதில் பணிபுரியும் அல்பனீஸ், ஐ.நா.வில் தனது நியமனத்தை புதுப்பிப்பதைத் தடுக்க அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவிலிருந்து தொடர்ச்சியான மரண அச்சுறுத்தல்களையும் தீவிர அழுத்தத்துக்கும் முகம் கொடுத்து வருகிறார். ஜேர்மனிக்கு தனது விஜயத்தின் போது திடீரென ரத்து செய்யப்பட்ட விரிவுரைகள், போலீஸ் துன்புறுத்தல்கள் மற்றும் கைது அச்சுறுத்தல்களை அல்பானீஸ் எதிர்கொண்டார். பிப்ரவரியில் ஜேர்மனியில் இருந்தபோது அல்பானீஸ், “நான் இங்கு உணரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உணர்வை, நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை” என்று கூறினார்.
உர்சுலா வான் டெர் லேயன், ஜேர்மனியின் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) உறுப்பினராக உள்ளார். இவர், இஸ்ரேலின் போர்க்குற்றங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்குகளை வகித்துள்ளார். அக்டோபர் 2024 இல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைவராக இருந்தபோது, ஜேர்மன் அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மெர்ஸ் வாதிட்டார். இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பங்கேற்றால் அவர்களின் ஜேர்மன் குடியுரிமையை பறிக்க முன்மொழிந்ததிலும் மெர்ஸ் சாதனை படைத்துள்ளார்.
பிப்ரவரி 2025 இல், ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட போர்க் குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜேர்மனிக்கு அழைக்கும் தனது நோக்கத்தை CDU இன் சான்சிலர் வேட்பாளர் மெர்ஸ் அறிவித்தார்.
மே 6 அன்று, ஜேர்மனியின் புதிய சான்ஸ்லர் பிரெட்ரிக் மெர்ஸ் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்) பதவியேற்றதை தொடர்ந்து, ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் தனது முதல் தொலைபேசி உரையாடலை நெத்தன்யாகுவுடன் நடத்தினார். அந்த தொலைபேசி உரையாடலில், இரண்டாம் உலகப் போர் இடம்பெற்று 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேர்மனிய அரசின் முக்கியக் கொள்கையாக இஸ்ரேலின் இருப்பு மற்றும் அதன் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி, மெர்ஸ் ஜேர்மனிய அரசின் மந்திரத்தை மீண்டும் கூறினார்.
கடந்த ஞாயிறன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஜோஹன் வடேபுல்லுக்கு மெர்ஸ் அனுமதி கொடுத்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஜோக் திங்களன்று ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரின் அழைப்பின் பேரில் பேர்லினுக்கு பயணிக்க உள்ளார். இதற்குப் பின்னர் ஜனாதிபதி ஸ்ரைன்மையர் ஜெருசலேமிற்கு பரஸ்பர விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய அரசிற்கு கொடுக்கப்படும் ஆதரவு என்பது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் நின்றுவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மெர்ஸ் சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கிறார். சமூக ஜனநாயகக் கட்சி, அதன் முன்னாள் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கீழ், டெல் அவிவ் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் ஆயுத விநியோகத்தையும் அதன் கூட்டணி பங்காளிகளான பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து வழங்கியது.
ஜேர்மனியில் எதிர்க்கட்சியாக இருக்கும் இடது கட்சி, இஸ்ரேலை ஆதரிக்கும் கூட்டணியின் ஒருங்கிணைந்த உறுப்பினராக இருந்து வருவதை குறிப்பிட்டே ஆக வேண்டும். மெர்ஸ் நெதன்யாகுவுக்கு தனது அன்பான அழைப்பை விடுத்த அதே நாளில், இடது கட்சி, “இஸ்ரேல் அரசின் இருப்பு உரிமை எங்களுக்குப் பேரம் பேச முடியாதது” என்ற தலைப்பில் கட்சியின் நிர்வாகக் குழு, ஒரு தீர்மான அறிக்கையை வெளியிட்டது. இடது கட்சியின் ஆதரவு மூலம் மட்டுமே, மெர்ஸ் கடந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாக்கெடுப்பை அமல்படுத்தி, சான்ஸ்லராக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய முடிந்தது.
ஜேர்மன் மற்றும் இஸ்ரேலிய உயரடுக்குகளின் பாசாங்குத்தனம் மூச்சடைக்க வைக்கிறது. ஹெர்ஸோக் பேர்லினுக்கு விஜயம் செய்கையில், பேர்லினில் உள்ள குருன்வால்ட் இரயில் நிலையத்தில் உள்ள டிராக் 17 நினைவிடத்திற்கு ஸ்ரைன்மையர் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடமானது, இனப்படுகொலையின் போது ஆயிரக்கணக்கான யூதர்கள் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்ட இடங்களில் ஒன்றாகும். கடந்த வாரம் ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் முடிவையும், தேசிய சோசலிஸ்டுகள் (நாஜிக்கள்) ஐரோப்பிய யூதர்களை இனப்படுகொலை செய்த வதை முகாம்களின் விடுதலையையும் பாராட்டி தொடர்ச்சியான விழாக்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளின் போக்கில், இஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தற்போதைய இனப்படுகொலை மற்றும் இறுதித் தீர்வு பற்றி ஒரு கடுமையான மௌனம் நிலவுகிறது.
ஜனவரி 20, 1942 அன்று நடைபெற்ற வான்சீ மாநாட்டில், பங்கெடுத்த நாஜி உயரடுக்கு ஐரோப்பாவில் யூதர்களை ஒழித்துக்கட்டுவதற்கான அவர்களின் திட்டங்களின் துல்லியமான தன்மை பகிரங்கப்படுத்தப்படக்கூடாது என்பதில் உடன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் உத்தியோகபூர்வ குறிப்புக்களான வான்சி நெறிமுறை, மாநாட்டை கூட்டி தலைமை தாங்கிய நாஜிக்களின் கொலைப் படையான வாஃபென் SSன் ஜெனரல் ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் உடன் கலந்தாலோசித்து அடோல்ப் ஐஷ்மேனால் எழுதப்பட்டது.
மாநாட்டின் முடிவில் ஹெய்ட்ரிச் கூட்டக் குறிப்பு வார்த்தை ஜாலமாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். ஐரோப்பாவில் யூத இன அழிப்பு என்பது யூதர்களை “வெளியேற்றம்” என்று அந்தக் குறிப்புகளில் இடக்கரடக்கலாக குறிப்பிடப்பட்டது. 1961 இல் ஜெருசலேமில் நடந்த விசாரணையின் போது ஐஷ்மன் பின்வருமாறு கூறினார்: “நான் அதை எப்படிச் சொல்வது – சில வெளிப்படையான பேச்சுக்கள் மற்றும் வார்த்தை ஜாலங்களை என்னால் அலுவலக மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.”
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அக்டோபர் 4, 1943 இல், ஹென்ரிச் ஹிம்லர் போஸ்னானில் மூத்த வாஃபென் SS அதிகாரிகளிடம் உரையாற்றும்போது, “நான் இங்கே உங்களுடன், முற்றிலும் வெளிப்படையாக, உண்மையிலேயே தீவிரமான அத்தியாயம் குறித்து பேச விரும்புகிறேன். எங்களுக்குள்ளேயே இதை வெளிப்படையாகச் சொல்லலாம், ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் பகிரங்கமாகப் பேச மாட்டோம். …. நான் இங்கே யூதர்களை வெளியேற்றுவதையும், யூத மக்களை அழிப்பதையும் குறிப்பிடுகிறேன். இது நமது வரலாற்றில் எழுதப்படாத மற்றும் என்றென்றும் பொறிக்கப்பட்ட பெருமையின் ஒரு பக்கம்” என்று அறிவித்தார்.
தங்கள் குற்றங்களை மூடிமறைக்க முற்பட்ட நாஜிக்கள் போன்று இல்லாமல், இஸ்ரேலிய அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலை வெளிப்படையாக அப்பட்டமாக நடக்கிறது. நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு இலக்கில் வைக்கப்பட்டு அழிக்கப்பட்ட போதிலும், காஸாவில் சிக்கியுள்ளவர்கள், சுற்றி வளைக்கப்பட்டு சித்திரவதை முகாம்களுக்குள் பலவந்தமாக அடைக்கப்பட்டு வருபவர்களின் திகைப்பூட்டும் நிலைமை குறித்த விபரங்கள் சமூக ஊடகங்களில் சுதந்திரமாக கிடைக்கின்றன.
உண்மையில், வான் டெர் லேயன் மற்றும் காஜா கல்லாவுடன், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் புதிய அரசாங்கத் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியமான உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கூண்டில் ஏற்றப்பட்டு போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர்.