இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் மிகப்பெரிய ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (KFTZ) அமைந்துள்ள நெக்ஸ்ட மெனுஃபக்சரிங் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதன் விளைவாக சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோபமான போராட்டங்களை எதிர்பார்த்த நெக்ஸ்ட் நிர்வாகம், திங்கள்கிழமை இரவு தொழிலாளர்கள் வீடு திரும்பிய பிறகு, வட்ஸ்அப் செய்திகள் மூலம் தொழிற்சாலை மூடல் குறித்து அவர்களுக்கு அறிவித்தது. 'தொழிற்சாலையை இயக்க அதிகம் செலவாவதாலேயே' அதை மூடியதாக நிர்வாகம் காரணம் கூறியுள்ளது.
1978 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் செயல்பட்டு வருகிறது. அப்போது அந்த வலயம் மலிவான தொழிலாளர் தளமாக நிறுவப்பட்டு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக பெரும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. நெக்ஸ்டின் கட்டுநாயக்க தொழிற்சாலை, பிரித்தானயாவில் உள்ள கடைகளில் அதிகம் விற்கப்படும் ஆடை வழங்குனரும், வெளிநாட்டு சந்தைகளுக்கு உயர்தரமான பின்னப்பட்ட மற்றும் நெய்த ஆடைகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான நெக்ஸ்ட் யுகேவுக்குச் சொந்தமானதாகும்.
நெக்ஸ்டுக்கு இலங்கையில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் ஒன்று கட்டுநாயக்கவில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் ஆண்டிகமவிலும் மற்றொன்று 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவகத்தேகமவிலும் உள்ளன. இவற்றில் சுமார் 1,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலைகள் இன்னமும் இயங்கி வரும் அதே வேளை, நிறுவனம் அதன் கட்டுநாயக்க தொழிற்சாலையை மூடுவதற்கு கூறிய காரணம், அந்த தொழிலாளர்களும் வேலை இழப்பை எதிர்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது.
திடீர் மூடலால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கணக்கான நெக்ஸ்ட் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைக்கு வெளியே அணிதிரண்டனர். தொழிற்சாலை நுழைவாயில் சீல் வைக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை நிர்வாக ஊழியர்கள் யாரும் இல்லை.
இந்த தொழிலாளர்களில் பலர் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) உறுப்பினர்களாக இருந்த போதிலும், அதன் செயலாளர் அன்டன் மார்கஸ் உட்பட எந்த தொழிற்சங்க அதிகாரிகளும் தொழிற்சாலைக்கு வெளியே நின்ற தொழிலாளர்களுடன் பேச வரவில்லை. சில மணி நேரம் காத்திருந்த பின்னர், தொழிலாளர்கள் அருகிலுள்ள FTZGSEU அலுவலகத்திற்குச் சென்றனர்.
தொழிற்சங்க உறுப்பினர்களிடம் பேசிய மார்கஸ், மீண்டும் வேலை பெற தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேசுவதாகவும், தொழில் ஆணையாளரிடம் புகார் அளிப்பதாகவும் கூறினார்.
தொழிலாளர்கள் மார்கஸின் வாக்குறுதிகளில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. நிறுவனம் ஏற்கனவே ஆலையை மூடுவதாக அறிக்கையை வெளியிட்டிருப்பதையும், தொழில் ஆணையாளர் இந்த வெளிநாட்டு முதலீட்டாளருக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை என்பதையும் நன்கு அறிந்திருந்த அவரது கருத்துக்கள், கோபமடைந்த தொழிலாளர்களை ஏமாற்றி திருப்பி அனுப்ப கூறப்பட்டவை மட்டுமே ஆகும்.
நிறுவனத்தில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்யும் ஒரு நெக்ஸ்ட் தொழிலாளி, மற்றவர்களுடன் தொழிற்சாலை வாயிலுக்கும், பின்னர் தொழிற்சங்க அலுவலகத்திற்கும் சென்றிருந்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசினார்.
'வட்ஸ்அப் செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், என் கண்களையே நம்ப முடியவில்லை. நான் மாத அடிப்படை சம்பளம் 45,000 (US$300) ரூபாவுடன் மொத்தம் 60,000 ரூபா சம்பாதித்தேன்,' என்று அவர் கூறினார்.
தனது இரண்டு வயது மகளின் பகல்நேர பராமரிப்புக்கு மாதத்திற்கு 8,000 ரூபாயும், வீட்டு வாடகைக்கு மாதத்திற்கு 10,000 ரூபாயும் தேவைப்படுவதாக அந்த தொழிலாளி விளக்கினார். வேலை நீக்கத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டாலும், அதிகபட்சமாக அவருக்கு கிடைக்கக் கூடிய ஒரு மில்லியன் ரூபாய் முற்றிலும் போதாது என்று அவர் கூறினார்.
“நான் இன்று வேலை தேடிச் சென்று ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பெற்றேன். வேலை முடிய எனக்கு 1,700 ரூபாய் மட்டுமே ஊதியம் கொடுத்தார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
நெக்ஸட் மெனுஃபக்சரிங் நிர்வாகம் திங்கள்கிழமை இரவு ஊழியர்களுக்கு இரண்டு செய்திகளை அனுப்பியது. முதலாவது ஆட்குறைப்பு பற்றியும், இரண்டாவது அதன் இழப்பீட்டுத் திட்டம் பற்றியுமாகும். நெக்ஸ்ட் ஊழியர்களுக்கு தொழிற்சங்க அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், சிறந்த இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்ப்பதாகவும் அந்த தொழிலாளி எமது நிருபர்களிடம் கூறினார்.
மூடலை அறிவித்த நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் இயக்குனர் டேவிட் ரே, இந்த முடிவு குறித்து 'கவலையடைந்து' இருப்பதாக முதலைக் கண்ணீர் வடித்தார். 'கட்டுநாயக்க தொழிற்சாலையின் இயக்கச் செலவு அதிகரித்து வருவதோடு' அது 'சில ஆண்டுகளாக' இலாபமில்லாமல் இயங்கியதன் விளைவே இந்த மூடல் என்றும் அவர் கூறினார்.
யுகேவுக்குச் சொந்தமான நெக்ஸ்ட் சில்லறை விற்பனையாளர் கடந்த ஆண்டு சாதனை லாபம் ஈட்டினார் என்ற உண்மை, ரேயின் கூற்றுக்களை பொய்யாக்குகிறது. இந்த ஆண்டு மார்ச் 27 அன்று நிறுவனம் 2024/25 ஆம் ஆண்டில் அதன் லாபத்தை 10.1 சதவீதம் அதிகரித்துக்கொண்டதாகவும், '25 ஜனவரி 2025 உடன் முடிவடைந்த ஆண்டில் 1.011 பில்லியன் பவுண்டுகள் (1.31 பில்லியன் டொலர்கள்) வரிக்கு முந்தைய லாபத்தை ஈட்டியதாகவும்' ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. சிறப்பங்காடி ராட்சத நிறுவனமான டெஸ்கோ மற்றும் மார்க்ஸ் & ஸ்பென்சர் ஆடை மற்றும் உணவு குழுமத்துடன் சேர்ந்து, நெக்ஸ்ட் ஒரு 'குறிப்பிடத்தக்க லாபத் தொகையை' அடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க நெக்ஸ்ட் தொழிற்சாலை தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைப்பதில் பேர் போனதாகும். 2020 டிசம்பரில், தொழிலாளர்களின் போனஸ் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிராக வெடித்த வேலைநிறுத்தத்தை அடக்குவதற்கு, தொழிற்சாலை நிர்வாகம் பொலிசை அழைத்தது. கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளால் நிறுவனம் இலாபத்தை இழந்ததால் இந்த வெட்டுக்கள் அவசியம் என்று நிர்வாகம் அறிவித்த போதிலும், தொழிலாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் இந்தக் கூற்றுக்களை பொய்யானவை என்று நிராகரித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இறக்குமதிகள் மீதான வரி உயர்வைத் தொடர்ந்து, இலங்கை ஆடைத் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாகும். இந்தத் துறை நாட்டின் மொத்த தொழில்துறை படையில் 15 சதவீதத்தினரை, அதாவது 350,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் சுமார் 600,000 பேர் மறைமுகமாக இந்த துறைக்கு ஆதரவளிக்கின்றனர்.
ஏப்ரல் 8 அன்று, சுமார் 2,000 தொழிலாளர்கள் வேலை செய்யும் வோக் டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலைகள், அமெரிக்க வரி உயர்வைக் காரணம் காட்டி சிங்கள-தமிழ் புத்தாண்டு போனஸை வழங்க மறுத்துவிட்டன. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக தொழிலாளர்கள் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஒரு சக்திவாய்ந்த உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். விரைவான பிரதிபலிப்பால் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தாலும், நிலுவையில் உள்ள போனஸில் பாதியை மட்டுமே செலுத்த ஒப்புக்கொண்டது.
FTZGSEU மற்றும் அதன் பொதுச் செயலாளர் அன்டன் மார்கசுக்கும், வேலைகள், போனஸ் மற்றும் வேலை நிலைமைகள் மீதான நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட ஆடைத் தொழிலாளர்களை அணிதிரட்டும் எண்ணம் இல்லை. தொழிற்சங்க அதிகாரத்துவமானது தொழிலாளர்களுக்கு எதிராக கம்பனி நிர்வாகங்களுடன் சேர்ந்து வேலைசெய்ய உறுதிபூண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் இலங்கையைத் தாக்கியபோது மார்கசும் அவரது தொழிற்சங்கமும் இதேபோன்ற பாத்திரத்தையே ஆற்றின. FTZGSEU மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் பெருமளவிலான ஆட்குறைப்புகளையும் ஊதியக் குறைப்புகளையும் முன்னெடுக்க, ராஜபக்ஷ அரசாங்கத்தின் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக ஒத்துழைத்தன. 150,000 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழந்த அதே நேரம், மீதமுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இந்த வாரம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலத்தில் உள்ள நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் மூடப்பட்டது குறித்து கேட்டபோது, திசாநாயக்க அரசாங்கத்தின் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, தான் நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலீட்டுச் சபையுடன் கலந்துரையாடுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
'உத்தேச இழப்பீட்டு சூத்திரம்' குறித்து கலந்துரையாடுவதாக ஜெயசிங்க கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சாலை மூடப்படுவதை உறுதிசெய்யவே அவர்கள் ஒத்துழைப்பார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் இலங்கை தொழிற்சங்கங்களும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வரி குறைப்புகள் மற்றும் சலுகைகள் வழங்குவது உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.
கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமை, ஆடைத் துறை தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, இலங்கை முழுவதும் உள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.
நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் மூடப்படுவதை நிறுத்தி தங்கள் வேலைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், ஆடைத் தொழிலாளர்கள் FTZGSEU மற்றும் ஏனைய ஆடைத் தொழில்துறை தொழிற்சங்கங்களிலிருந்து பிரிந்து சுயாதீனமாக அணிரள வேண்டும். இதன் அர்த்தம் ஏனைய நெக்ஸ்ட் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுடன் போராட்டத்தில் ஒன்றுபடுவதும், அனைத்து கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய மற்றும் ஏனைய ஆடைத் தொழிலாளர்களினதும் ஆதரவைக் கோருவதும் ஆகும். இது பிரித்தானியாவில் உள்ள நெக்ஸ்டின் தாய் நிறுவனத்தில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை அணுகுவதையும் குறிக்கிறது.
நிறுவனங்களின் கருவிகளாக செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை ஓரங்கட்டிவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதன் மூலமே இதுபோன்ற போராட்டத்தை மேற்கொள்ள முடியும். நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் தொழிலாளர்கள் ஒன்றுகூடி இந்த முன்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஆடைத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (GWAC) இந்த முயற்சியில் உங்களுக்கு உதவ முழுமையாகத் தயாராக உள்ளது. கீழே உள்ள தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது எங்கள் மின்னஞ்சல் முகவரி வழியாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த மாத தொடக்கத்தில், ஆடைத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவானது 'இலங்கை ஆடைத் தொழிலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தொழில் மற்றும் ஊதியங்கள் மீதான சுங்கவரி போர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஆடைத் தொழிலாளர்கள் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது: ' இந்த தொழிலாள வர்க்கக் குழுக்கள், முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் உட்பட, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடி முடிவுசெய்ய முடியும். தனியார் தொழில்துறை மற்றும் அரசுத் துறை முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.'
அந்த அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:
தொழில் வெட்டு, ஊதிய வெட்டு வேண்டாம். வேலை நிலைமைகளை குறைக்க வேண்டாம்! வேலைச் சுமைகளை அதிகரிக் வேண்டாம்!
அனைத்து தொழிற்சாலை மூடல்களையும் எதிர்த்திடுங்கள். தொழிற்சாலை ஆக்கிரமிப்பு உட்பட தொழில்துறை போராட்டத்துக்குத் தயாராகுங்கள். முதலாளிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் அற்ப இழப்பீட்டை நிராகரிக்க வேண்டும்! புதிய தொழில்கள் வழங்கப்படும் வரை முழு ஊதியத்தில் இழப்பீடு கோர வேண்டும்.
உண்மையான ஊதியங்களின் இழப்பை ஈடுசெய்யுமளவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊதியங்களும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.
முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுமுறை வேண்டும். ஒழுக்கமான வீட்டுவசதி மற்றும் சுகாதார வசதிகள் வேண்டும்.
அந்த அறிக்கை பின்வரும் வேண்டுகோளுடன் முடிந்தது: “இலங்கை ஆடைத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்முயற்சியின் அடிப்படையில் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஜனநாயக அமைப்பான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைந்து, அதைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்.”
எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி/வட்ஸ்அப்: +94773562327
மின்னஞ்சல்: action.committeees.sl@gmail.com