ஈரானிய மாலுமிகள் மீட்கப்பட்டமை பற்றிய இலங்கையின் “மனிதாபிமான” பாசாங்கை அமெரிக்க குறிப்பாணை அம்பலப்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மார்ச் 4 அன்று, இலங்கை கடல் பகுதிக்கு அருகே ஈரானிய போர்க் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டோர்பிடோவால் தாக்கி மூழ்கடித்ததில் கப்பலில் இருந்த 108 மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் இருந்து கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​சர்வதேச கடல் பகுதியில் முன்னறிவிப்பின்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்த மாபெரும் படுகொலைச் செயல், ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும். இது ஒரு தெளிவான செய்தியை அனுப்பியது: சர்வதேச சட்டம் அல்லது மரபுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல், அமெரிக்கா விரும்பும் இடத்தில் இந்த மோதல் நடத்தப்படும்.

[AP Photo/Eranga Jayawardena]

அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கும் இடையில், மூழ்கிக்கொண்டிருந்த ஈரானியக் கப்பலில் இருந்து வந்த இரண்டு ஆபத்து அழைப்புகளுக்கு பிரதிபலித்த இலங்கைக் கடற்படை, 32 பேரை மீட்டது. அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மூழ்கிய கப்பலில் இருந்து டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை கடற்படை மீட்டது.

மார்ச் 4 அன்று, 208 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. ஆரம்பத்தில் கோரிக்கையை நிராகரித்த பின்னர், பதற்றமடைந்த இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக மார்ச் 5 அன்று கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தது. அதன் பணியாளர்கள் கப்பலிலிருந்து இறக்கப்பட்டதோடு, கப்பல் நாட்டின் மறுபுறத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்றிரவு, ஒரு விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, தனது அரசாங்கம் 'நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாக்கும்' விதத்தில் செயல்பட்டதாகக் கூறினார். 'இது ஒரு போரில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்புக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல் சம்பந்தப்பட்டது' என்பதாலும், 'நாங்கள் ஒரு நடுநிலை அரசு' என்பதாலும், அது ஒரு 'அவசரமான முடிவை' எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

'சம்பந்தப்பட்ட தூதரகங்களுடன்' பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை திசாநாயக ஒப்புக்கொண்ட போதிலும், அவற்றை அவர் அடையாளம் காட்டவில்லை. 'தரப்பினரிடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்களுக்கு உட்பட்டு', பணியாளர்களையும் கப்பலையும் பொறுப்பேற்க இலங்கை ஒப்புக்கொண்டதாக அவர் அறிவித்த போதிலும், அந்தத் தரப்பினரையோ அல்லது ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையோ அவர் அடையாளம் காட்டவில்லை.

வேறுவிதமாகக் கூறினால், திசாநாயக அந்த நிகழ்வை ஒரு நடுநிலை அரசால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மனிதாபிமான நடவடிக்கையாக சித்தரித்ததோடு, நிதானத்தைக் கடைப்பிடித்ததற்காக ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பாராட்டப்பட்டார்.

இப்போது அந்தப் புனைகதையை மார்ச் 7 அன்று வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தியறிக்கை தகர்த்துள்ளது. இரண்டாவது கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டியது எது என்பது குறித்து அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மார்ச் 6 திகதியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உள்ளக தகவல் பரிமாற்றம் ஒன்றின்படி, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தற்காலிக பொறுப்புத் தூதரான ஜெயின் ஹோவல், ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர் கப்பலின் குழுவினரையோ அல்லது ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளையோ ஈரானுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

புது தில்லியில் உள்ள, இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதரும் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் அந்த தகவல் பரிமாற்றம் காட்டுகிறது. அதன்படி, மாலுமிகளை ஈரானுக்குத் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று ஹோவல் இஸ்ரேலியத் தூதரிடம் கூறியுள்ளார்—இது ஜனாதிபதி திசாநாயக ஒப்புக்கொண்டதைக் குறிக்கிறது.

'கைதிகளைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தும் ஈரானிய முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் குறைக்க வேண்டும்' என்பதும் அந்த ஒப்பந்தங்களில் அடங்கும். வேறுவிதமாகக் கூறினால், ஈரானிய மாலுமிகளின் குரல்வளை நெரிக்கப்படும், அதாவது அவர்கள் தடுப்புக்காவலில் அல்லது தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர், 'மோதல் முடியும் வரை இலங்கையின் பாதுகாப்பிலேயே இருக்கும்' என்று அந்த தகவல் பரிமாற்றம் கூறியது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போருக்கு மாலுமிகளைப் பிரச்சாரக் கருவிகளாக மாற்றுவதற்காக அவர்கள் 'பிரிந்து செல்வதை' ஊக்குவிப்பதற்காக, கப்பல் ஊழியர்களுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடந்ததா என்றும் இஸ்ரேலியத் தூதர் ஹோவலிடம் கேட்டார். ராய்ட்டர்ஸ் செய்தியாளர், தான் இஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் 'நடுநிலைமை' மற்றும் 'மனிதாபிமானப் பணி' குறித்த திசாநாயகவின் பாசாங்குத்தனம் அடியோடு பொய்யானது. கொழும்பில் நடந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய அவர், மற்ற நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, ​​இலங்கை 'மனிதாபிமானத்தின் கொடியை முன்னோக்கி ஏந்திச் செல்கிறது' என்று தற்பெருமை பேசினார்.

உண்மையில், திசாநாயக அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதர்களால் கட்டளையிடப்பட்ட இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக ஒரு இணக்கமான இடைத்தரகராகவே செயல்பட்டது. டெனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைச் சூழ இடம்பெற்றுள்ள சம்பவங்கள், ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் ஏகாதிபத்தியப் போரில் கொழும்பு மற்றும் புது தில்லியின் உடந்தையை அம்பலப்படுத்துகின்றன.

ஐ.ஆர்.ஐ.எஸ். லவான், ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா, ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேர் ஆகிய மூன்று ஈரானியக் கப்பல்கள், வங்காள விரிகுடாவில் இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் சமீபத்தில் பங்கேற்றிருந்தன. பயிற்சிகளுக்குப் பிறகு, பிப்ரவரி 27 அன்று, இந்தக் கப்பல்கள் கொழும்பில் மரியாதை நிமித்தமாக துறைமுக வருகை மேற்கொள்ள அனுமதி கோரின. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

புது தில்லியோ கொழும்போ, டெனா கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலையோ, அதன் மாலுமிகள் கொல்லப்பட்டதையோ, அல்லது சட்டவிரோதப் போரையோ கண்டிக்கவில்லை. அவர்களின் மௌனம் தற்செயலானது அல்ல. இரு அரசாங்கங்களும் அரசியல் ரீதியாக வாஷிங்டனுடன் இணைந்துள்ளதோடு, சீனாவுடன் போருக்குத் தயாராகும்வேளையில், இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் மூலோபாயக் கட்டமைப்பில் அவை மேலும் மேலும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இந்தியா அமெரிக்காவின் ஒரு பிரதான 'மூலோபாயப் பங்காளியாக' மாறியுள்ளது. இலங்கையில் உள்ள திசாநாயக அரசாங்கமும் இதே பாதையைப் பின்பற்றுகிறது; வாஷிங்டனுடனான தனது இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதோடு, புது தில்லியுடனான பாதுகாப்பு உறவுகளையும் வலுப்படுத்துகிறது.

ஈரான் போரில் கொழும்பின் பங்கு, அந்த அரசாங்கத்தின் மற்றும் அதை வழிநடத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குணாம்சத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாவோவாதம், காஸ்ட்றோவாதம் மற்றும் ஆயுதப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தலைதூக்கிய, ஏகாதிபத்திய-விரோதம் மற்றும் சோசலிச வாய்சவடால்களை விடுப்பதை வழமையாகக் கொண்டிருந்த ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பான ஜே.வி.பி., இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஒரு கைப்பாவையாக உருவெடுத்துள்ளது.

வெளிநாட்டில் “மனிதநேயத்தைப்” பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் திசாநாயக நிர்வாகம், உள்நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை ஈவிரக்கமின்றித் திணித்து, இலட்சக்கணக்கான மக்களை மேலும் வறுமையில் தள்ளுகிறது. இந்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக, திசாநாயக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரங்களை விரிவுபடுத்துவதோடு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பை அடக்குவதற்கு, கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகால விதிமுறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தையும் பயன்படுத்துகிறார்.

ஈரான் மீதான பேரழிவுகரமான போரின் ஒரு பகுதியாக ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா மூழ்கடிக்கப்பட்டமை, பூகோள ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் ஈவிரக்கமற்ற முயற்சியில் ஈடுபடும் அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகைப் பேரழிவை நோக்கித் தள்ளுகிறது என்பதற்கான மற்றொரு எச்சரிக்கையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், இந்த நவகாலனித்துவ திட்ட நிரலுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான வீழ்ச்சியைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மட்டுமே.

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில் இருந்து கற்றுக்கொள்வதோடு அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் மற்றும் புத்திஜீவிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading