ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை CDC அங்கீகரிக்கிறது: ஒரு படி முன்னோக்கி, ஆனால் பல வரம்புகளுடன்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வார இறுதியில், நோய்த்தடுப்பு நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழு (Advisory Committee on Immunization Practices - ACIP) மக்கள்தொகையில் இளையவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகளை அங்கீகரிக்க ஒருமனதாக வாக்களித்தது. இந்த ஒப்புதல்களின் அடிப்படையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் அல்லது மொடெர்னாவின் கோவிட்-19 தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை போடுமாறு பரிந்துரைக்கிறது.

நவம்பர் 4, 2021, வியாழக்கிழமை, டெக்சாஸின் மெஸ்குயிட்டில் உள்ள டல்லாஸ் மாகாண சுகாதார மற்றும் மனித தடுப்பூசி தளத்தில் ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் 7 வயது அரிஹானா மசியாஸின் கைக்கு மெதுவான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. [AP Photo/LM Otero] [AP Photo/LM Otero]

டிசம்பர் 2020 இல் தடுப்பூசிகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த வயதினரில் 19.3 மில்லியன் பேருக்கு இன்னும் கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.

கோவிட் நோயால் இறந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை இதுவரை குறைவாகவே உள்ளது, CDC இன் கூற்றுப்படி ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 442 குழந்தைகள் இறந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதே வயது வரம்பினர்களில் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். ஸ்டன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் குழந்தை தொற்றுநோய் நிபுணர் டாக்டர். இவோன் மால்டோனாடோ குறிப்பிட்டது போல், “குழந்தைகள் எந்த நோயினாலும் இறக்கக் கூடாது.”

குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலையின் (American Academy of Pediatrics - AAP) கூற்றுப்படி, அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த கோவிட் நோயாளிகளில் கிட்டத்தட்ட 19 சதவிகிதம் பேர் குழந்தைகளாவர். இருப்பினும், CDC ஆல் வெளியிடப்பட்ட இரத்த மாதிரிகளின் அடிப்படையிலான செரோபிரவலன்ஸ் தரவுகள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 75 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மொத்த மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது.

இதன் பொருள் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினராக உள்ளனர், அதாவது, வைரஸ் அழிவிலிருந்து எப்படியாவது குழந்தைகள் பாதுக்காக்கப்படும் வகையில் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி உண்டு என்று முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடையறாது கூறி வருவதற்கு முரண்படக்கூடிய ஒரு புள்ளியாகவுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 1.3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று AAP தெரிவித்துள்ளது, இது பெரியளவில் குறைத்துக்காட்டப்பட்ட எண்ணிக்கையாகும். இதில் சுமார் கால் மில்லியன் குழந்தைகள் டிசம்பர் 2021 இல் தொடங்கி பெப்ரவரி 2022 இல் முடிவடைந்த முதல் ஓமிக்ரோன் அலையின் மூன்று மாதங்களின் போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். CDC இன் கோவிட் இறப்புக்களின் தற்காலிக எண்ணிக்கையின்படி, தொற்றுநோய்களின் போது மொத்தம் 1,257 குழந்தைகள் இறந்துள்ளனர், அவர்களில் 20 சதவிகிதம் பேர் ஓமிக்ரோன் அலையின் போது இறந்துள்ளனர்.

முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் இடையேயான பயங்கரமான இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த புள்ளிவிபரங்கள் குறைவானதாகத் தோன்றலாம், ஆனால் அதே வயதினரிடையே காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இது மிக அதிகமாகும்.

2017-2018 காய்ச்சல் பருவத்தில் 42,386 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர், கோவிட் காரணமாக இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கால் மில்லியன் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இது கடந்த தசாப்தத்தில் மிக மோசமானதாகும்.

SARS-CoV-2 ஆல் இறந்த 1,200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், காய்ச்சல் பருவத்தில் இளையவர்களில் 110 பேர், மொத்தத்தில் 526 குழந்தைகள் காய்ச்சலால் இறந்துள்ளனர். தற்போதைய காய்ச்சல் பருவத்தில், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளால், 29 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 60 குழந்தைகள் கோவிட் நோயால் இறந்துள்ளனர்.

குழந்தைகளிடையேயான கோவிட் இறப்புக்களை மதிப்பாய்வு செய்து, இலண்டனின் இம்பீரியல் கல்லூரி பிரசுரத்திற்கு முன்னர் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை, “மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலத்தில் அமெரிக்காவில் 0-9 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகள் மற்றும் இளையவர்களின் (Children and young people-CYP) இறப்புக்கு கோவிட் முக்கிய காரணமாக இருந்தது, அதாவது மதிப்பீட்டின்படி, இறப்புக்கான அனைத்து காரணங்களிலும் #9 வது இடத்திலும், இறப்புக்கான நோய் தொடர்பான காரணங்களில் (விபத்துகள், தாக்குதல் மற்றும் தற்கொலை தவிர) #5 வது இடத்திலும், மற்றும் தொற்று/சுவாச நோயால் ஏற்படும் இறப்புக்களில் #1 இடத்திலும் உள்ளது” என்று கண்டறிந்தது. குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்டவர்களைப் பொறுத்தவரை, இது முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தது.

இந்த அனைத்து புள்ளிவிபரங்களும், நெடுங்கோவிட் மற்றும் வயதானவர்களை விட நீண்ட காலம் வாழ வேண்டிய மற்றும் நோயறிகுறிகளை வளர்க்கக்கூடிய குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அறியப்படாத நீண்டகால பாதிப்பை விளைவிக்கும் பரந்தளவிலான சிக்கலைக் கூட நிவர்த்தி செய்யவில்லை.

இந்த உண்மைகள் ஃபைசர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகளுக்கான ஒப்புதலை ஒரு வரவேற்கத்தக்க படியாக ஆக்குகின்றன, இருப்பினும் குறிப்பிடத்தக்க வரம்புகளுடன் அது நடைமுறைக்கு வருவதை நாம் பார்க்கப் போகிறோம்.

ஃபைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்கள் இரண்டும் ஜூன் 15 அன்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration-FDA) ஆலோசனைக் குழுவிடம் தங்கள் மருத்துவ-சோதனை தரவை வழங்கியுள்ளன, அதாவது, இந்த தடுப்பூசிகள் இரண்டும் பாதுகாப்பானவை மற்றும் வயதான குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் உள்ளதைப் போன்ற நோய் எதிர்ப்புத் திறனை குழந்தைகளுக்கும் உருவாக்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. குழு 21-0 வாக்குகள் வித்தியாசத்தில் தடுப்பூசிகளை ஒருமனதாக பரிந்துரைத்தது.

mRNA தடுப்பூசிகளின் இரண்டு குழந்தை மருத்துவ வகைகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன, அவற்றை மதிப்பாய்வு செய்வது முக்கியம்.

ஃபைசரின் சிகிச்சை முறையானது மூன்று ஊசி மருந்துகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் மூன்று மைக்ரோகிராம்கள் அல்லது வயது வந்தோருக்கான அளவில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும். முதல் அளவு தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து முதல் மூன்று வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது அளவு வழங்கப்படும், அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மூன்றாவது அளவு வழங்கப்படும், அதாவது தொடரை முடிக்க மொத்தம் மூன்று மாதங்கள் தேவை.

குழந்தை மருத்துவ பரிசோதனைகள் 1,000 க்கும் குறைவான பங்கேற்பாளர்களுடன் சிறியளவில் நடத்தப்பட்டது. உண்மையில் 10 குழந்தைகள் மட்டுமே கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஏழு பேர் தடுப்பூசி போடப்படாத குழுவிலும், மூன்று பேர் தடுப்பூசி பெற்ற குழுவிலும் உள்ளனர். ஃபைசரின் முதல் இரண்டு அளவுகளின் கிரமம் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை, அதனால், டிசம்பர் 2021 இல் நிறுவனம் தனது கிரமத்தில் மூன்றாவது தடுப்பூசி அளவைச் சேர்க்கும் என்று அறிவிப்பதற்கு வழிவகுத்தது.

ஃபைசரின் வரையறுக்கப்பட்ட செயல்திறன் தரவு குறித்து STAT செய்திகள் குறிப்பட்டதன்படி, “இது, ஃபைசர் தடுப்பூசி அங்கீகாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு அளவு தடுப்பூசி போதுமானதாக இல்லை என்ற உண்மையின் விளைவாகும். FDA உடன் கலந்தாலோசித்து, மூன்றாவது அளவை சோதிக்க நிறுவனம் முடிவு செய்தது, ஆனால் கோவிட் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக வழங்க போதுமான நேரம் இல்லை. FDA அதிகாரிகள், மற்ற வயதினருக்கு இரண்டு அளவுகள் பாதுகாப்பை வழங்குவது போல் மூன்றாவது அளவு தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.”

இது, பங்கேற்பாளர்கள் தடுப்பூசித் தொடரை முடித்ததன் பின்னர் உருவான நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளின் அளவின் அடிப்படையில் FDA இன் நம்பிக்கை இருந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 6 முதல் 23 மாத குழந்தைகளுக்கான முடிவுகளின் மதிப்பாய்வில் ஃபைசர் குறிப்பிட்டது போல, “இவ்விரு வயதினரிலும் உள்ள ஆன்டிபாடி பதில்கள், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு இரண்டு 30-µg அளவுகள் மூலம் நோய்தடுப்பு வழங்கப்பட்டு, முன் குறிப்பிடப்பட்ட வெற்றி அளவுகோல்களுடன் ஒப்பிடத்தக்கது.

மொடெர்னாவின் தடுப்பூசி இரண்டு அளவு கிரமத்தைக் கொண்டதாகும், ஒவ்வொன்றும் 25 மைக்ரோகிராம் அல்லது வயது வந்தோருக்கான அளவில் கால் பகுதியைக் கொண்டிருக்கும். இந்த இரண்டு அளவுகளும் நான்கு வார இடைவெளியில் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மொடெர்னா தடுப்பூசித் தொடரை விரைவில் முடித்தாலும், அதன் பக்க விளைவுகள் தற்காலிகமானது என்றாலும், கடுமையானதாக இருக்கலாம். ஃபைசர் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி குறைவாக இருந்தது மற்றும் சில சோர்வுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டன, அதேவேளை மொடெர்னா சோதனையில் ஒரு குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் அதிக காய்ச்சலால் தூண்டப்பட்ட வலிப்பு ஏற்பட்டது.

மிசூரியின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பள்ளியைச் சேர்ந்த குழந்தை மருத்துவ தொற்றுநோய் நிபுணரான ஒரு FDA குழு உறுப்பினர், “காய்ச்சலால் ஏற்படும் வலிப்புக்கு அப்பால், அதிக கவலையளிக்கும் விஷயம் எதுவுமில்லை, அது எனக்கு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது” என்று கூறினார்.

மொடெர்னாவின் சோதனை கிட்டத்தட்ட 5,000 பேரை உள்ளடக்கி பெரியளவினதாக இருந்தது. 265 குழந்தைகளுக்கு கோவிட் நோய் ஏற்பட்டது உட்பட, அறிகுறி தொற்றுக்கு எதிரான செயல்திறன் சுமார் 37 முதல் 51 சதவிகிதம் வரை இருந்தது, இதன் தரவு மிகவும் வலுவானதாகவும் பொருந்தக்கூடியதாகவும் இருந்தது. மேலும், மொடெர்னா சோதனையில், செயலில் உள்ள மூலப்பொருளைப் பெற்ற அதிகமான பங்கேற்பாளர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி அளவுக்குப் பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது, அதே நேரத்தில் ஃபைசர் தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்கள் மத்தியில் நிகழ்ந்த எதிர்மறையான எதிர்வினைகள் இதே போன்ற புகார்களைக் கொண்டிருந்தன.

தடுப்பூசிகளின் பிற பக்க விளைவுகளில் பசியின்மை, குமட்டல் அல்லது வாந்தி, எரிச்சல், காய்ச்சல் மற்றும் ஊசி போடப்பட்ட இடத்தில் வலி ஆகியவை அடங்கும். மொடெர்னா தடுப்பூசியைப் பொறுத்தவரை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட கையில் வீங்கிய நிணநீர் முனைகள் உருவாகலாம். இதய வீக்கத்தை மதிப்பிடுவதற்கு சோதனைகள் மிகவும் சிறியதாக இருந்தன, இது இளம் பருவ சிறுவர்களில் எப்போதாவது ஏற்படுகிறது. தடுப்பூசிகளால் உருவான நோய் எதிர்ப்புத் திறன் விரைவாக குறைந்து வரும் மற்றும் SARS-CoV-2 இன் ஓமிக்ரோன் விகாரத்தின் துணை மாறுபாடுகள் குறிப்பிடத்தக்க அளவு நோய் எதிர்ப்பு தவிர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசிகள் பற்றிய கேள்விகள் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன.

அனைத்து குழந்தைகளுக்கும் உயிர்காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிசெய்வது மிகவும் முக்கியமாகும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் மற்றும் பைடென் நிர்வாகமும் தடுப்பூசி மட்டுமே அணுகுமுறை தான் தொற்றுநோய்க்கு சாத்தியமான பதில் என்ற அவர்களின் கூற்றுக்களை வலுப்படுத்த இந்த முன்னேற்றத்தைப் பயன்படுத்தலாம். முகக்கவச ஆணைகள் நடைமுறையில் இருப்பது, அனைத்து கோவிட் நோயாளிகளின் தொடர்புகள் கண்காணிக்கப்படுவது, மேலும் பொது சுகாதாரத் துறைகள் நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புக்களை உள்ளடக்கிய வலுவான மற்றும் துல்லியமான தரவுகளைக் கொண்டிருப்பது ஆகியவற்றை உறுதிசெய்யும் ஒட்டுமொத்த பொது சுகாதார நடவடிக்கைகளையும் கைவிடுவதை அவர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனர்.

கோவிட் தடுப்பூசிகளின் சகாப்தத்தில் 18 மாதங்களுக்கும் மேலாக, தடுப்பூசி மட்டுமே மூலோபாயம் ஒரு மோசமான தோல்வியை நிரூபித்துள்ளது. ஊடுவழி நோய்தொற்றுக்கள் மிகவும் பொதுவானவையாகும், அதனால் தடுப்பூசிகள் நெடுங்கோவிட் நோயின் அபாயங்களையோ அல்லது பல்வேறு உறுப்பு அமைப்புக்களில் ஏற்படும் பாதிப்பையோ குறைக்கவில்லை. இந்நிலையில், பூஜ்ஜிய-கோவிட்டுக்கான பிரச்சாரம் மட்டுமே, உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோய்க்கான ஒரே சாத்தியமான தீர்வாக உள்ளது.