மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர்கள் தொற்றுநோய்கள், உலகளாவிய உணவு விநியோகத்தில் உக்ரேனில் நடக்கும் போரின் தாக்கம், மற்றும் பரந்தளவிலான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியின் அபாயம் உட்பட மனிதகுலம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஒன்றுசேர்வது குறித்து மிக கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
WHO இன் பொது இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அமைப்பின் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் ஆரம்பத்தில் பேசுகையில், ஜூன் 20 இல் தொடங்கிய வாரத்தில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்கள் உருவானது உட்பட, அதாவது முந்தைய வாரத்தில் இருந்து 21 சதவிகித அதிகரிப்புடன், கடந்த நான்கு வாரங்களாக நோய்தொற்றுக்கள் சீராக அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார். சமீபத்திய நோய்தொற்று அலையானது மிகவும் தொற்றும் தன்மையுள்ள மற்றும் நோயெதிர்ப்பு தவிர்க்கும் திறன் கொண்ட ஓமிக்ரோனின் BA.4, BA.5 துணைமாறுபாடுகளால் உருவெடுத்து வருகிறது.
உலகளாவிய கோவிட் இறப்புக்களும் இந்த வாரம் உச்சத்தைத் தொட்டுள்ளன, அதாவது 9,000 க்கும் அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, இது வாராந்திர உயர்வை 7.4 சதவிகிதமாக்கியுள்ளது. இறப்புக்கள் உயர்ந்து வரும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு பசிபிக் போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று WHO பிராந்தியங்களில் நடைமுறையிலுள்ள உத்தியோகபூர்வ கொள்கை SARS-CoV-2 வைரஸ் நோய்தொற்றை நிரந்தர நோயாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது. மேலும் அவர், “அறிக்கை செய்வதும் மரபணு வரிசைகளும் குறைந்து வருவதால் வைரஸைக் கண்காணிக்கும் எங்கள் திறன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது, அதாவது ஓமிக்ரோனை கண்காணிப்பதும் எதிர்காலத்தில் உருவெடுக்கக்கூடிய விகாரங்களை பகுப்பாய்வு செய்வதும் கடினம்” என்று எச்சரிக்கிறார்.
WHO பொது இயக்குநர், இன்னும் முயற்சிகளை பாதித்து வரும் தடுப்பூசி சமத்துவமின்மையின் நிலைத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டினார். பின்னர் அவரது சக ஊழியரான, WHO இன் சுகாதார அவசரநிலைகள் திட்டத்திற்கான நிறைவேற்று இயக்குநர் டாக்டர் மைக் ரியான் பேசுகையில், “நாங்கள் புதுமைக்கு ‘A’ குறியீட்டை பெறுகிறோம், அதேவேளை நேர்மைக்கு ‘F’ குறியீட்டை பெறுகிறோம்” என்று நக்கலாக குறிப்பிட்டார்.
குறிப்பிடத்தக்க வகையில், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஒவ்வொரு நாடும் அதன் மக்கள்தொகையில் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க WHO இன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளவில், 75 சதவிகித சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், குறைந்த வருமான நாடுகளில் உள்ள வயோதிபர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், எதிர்காலத்தில் புதிய தொற்று அலைகள் உருவெடுப்பதற்கான வாய்ப்பை உலகம் எதிர்கொள்கிறது. 58 நாடுகள் மட்டுமே WHO இலக்கை எட்டியுள்ளன, அதே நேரத்தில் குறைந்த வருமான நாடுகளில் சராசரி தடுப்பூசி விகிதம் அச்சுறுத்தும் வகையில் வெறும் 13 சதவிகிதமாக உள்ளது.
பொது இயக்குநர் கெப்ரேயஸ் ஜேர்மனியில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார், அப்போது அவசரப் பிரச்சினைகளின் வரிசையை தலைவர்களுக்கு அவர் சுருக்கமாக விவரித்தது, குறிப்பாக குரங்கம்மை தொற்றுக்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருவது, ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியில் உள்ள 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை மிக மோசமாக தாக்கிய உலகளாவிய உணவு நெருக்கடி, மற்றும் கருக்கலைப்பு உள்ளிட்ட பெண்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் உலகளாவிய தாக்கங்களுக்கு சமிக்ஞை செய்ததான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் Roe v. Wade இன் இரத்து ஆகியவை பற்றிய அவரது கவலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பொது இயக்குநர் இந்த விவாதங்களின் விளைவுகளைப் பற்றி விரிவாகக் கூறவில்லை, அல்லது உச்சிமாநாடு பற்றி, மற்றும் தொற்றுநோய் மற்றும் உலக மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தி வரும் சமூக நெருக்கடிகளின் ஒருங்கிணைப்பு குறித்து ஜி7 மேற்கொண்ட உறுதிமொழிகள் (அப்படி எந்த பொருளும் இல்லை) பற்றி எந்த தொடர் கேள்விகளையும் பத்திரிகைகள் எழுப்பவில்லை.
உலகளவில், 67 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 5,309 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்திற்கிடமான குரங்கம்மை நோய்தொற்றுக்கள் பரவியிருப்பது புதிய உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. ஏழு நாள் போக்கு சராசரி சீராக உயர்ந்து வருகிறது, அதாவது நாளாந்தம் 300 புதிய நோய்தொற்றுக்கள் வரை பரவி வருகின்றன. விஞ்ஞானிகள் இடையேயான சமூக ஊடக விவாதங்கள், எளிய மாதிரிகளின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் உலகம் 100,000 குரங்கம்மை நோய்தொற்றுக்களை எதிர்கொள்ளும் என்றும், பரவல் தொடர்ந்து தணிக்கப்படாமல் இருந்தால் செப்டம்பர் மாதத்திற்குள் அது ஒரு மில்லியனை எட்டக்கூடும் என்றும் எச்சரித்துள்ளன.
தரவு விஞ்ஞானி ஜே. வெய்லாண்ட், “இந்த நோய்தொற்று வெடிப்பின் தணிக்கப்படாத பரவல் கட்டத்தில் நாம் நிச்சயமாக இருக்கிறோம், இது சில காலத்திற்கு நிலையான அதிவேக பரவலைக் கொண்டிருக்கும். இனப்பெருக்க காரணி [Reproduction factor-Rt] அதிக ஆபத்துள்ள மக்கள்தொகைக்கு அப்பால் பரவியவுடன் அது குறைகிறதா என்பதைப் பார்ப்பது சுவராஸ்யமாக இருக்கும்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய உலகளாவிய நோய்தொற்று வெடிப்பின் மையங்களாக ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் உள்ளன. இங்கிலாந்தில் 1,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து ஜேர்மனியில் 969, ஸ்பெயினில் 800 நோய்தொற்றுக்கள் பதிவாகின. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 351 ஐ எட்டியுள்ளது.
டாக்டர். கெப்ரேயஸ், ஜூன் 23 அன்று சமீபத்தில் நடந்த IHR அவசரக் குழுக் கூட்டத்தில் இந்த விளக்கக் கருத்துக்களை வழங்கினார், “குரங்கம்மை நோயின் தற்போதைய வெடிப்பு குறித்து அவசரநிலைக் குழு, சர்வதேச அக்கறைக்கான பொது சுகாதார அவசரநிலையை [Public Health Emergency of International Concern-PHEIC] அறிவிக்க அறிவுறுத்தவில்லை என்றாலும், நிகழ்வின் அவசரத் தன்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதுடன், மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த தீவிர தணிப்பு நடவடிக்கைகள் தேவை என்கிறார்கள். உருவாகி வரும் சூழ்நிலையின் அடிப்படையில் அவர்களை விரைவில் மீண்டும் கூட்ட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர், நான் அதைச் செய்வேன்.”
மேலும் அவர், “தொடர்ச்சியான பரவுதல் குறித்து நான் கவலைப்படுகிறேன், ஏனென்றால் அதனால் வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது, மேலும் குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட அதிக ஆபத்துள்ள குழுவினரிடையே அது பரவுக்கூடும் என்பதை அது அறிவுறுத்துகிறது. ஏற்கனவே பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கத் தொடங்கியுள்ளோம்” என்று கூறினார். குரங்கம்மை நோயை உடனடியாக PHEIC ஆக அறிவிக்கும் திட்டம் 11-3 என்ற வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது என்று WHO இயக்குநர் பின்னர் தெளிவுபடுத்தினார், அதாவது அதிகமான தரவு தேவை என பெரும்பான்மையினர் கருதுகின்றனர், அதேவேளை நோய்தொற்று பரவலால் எழுப்பப்பட்ட அவசர கவலைகளை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்கிறார்.
பைடென் நிர்வாகம் இந்த வாரம் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை பெரியம்மை நோய்க்கு எதிரான 56,000 தடுப்பூசி அளவுகளுக்கு உடனடியாகவும், தொடர்ந்து வரும் வாரங்களில் மேலும் 300,000 தடுப்பூசி அளவுகளுக்கும் ஏற்பாடு செய்யும் என்று கூறியது. இந்த எண்ணிக்கை நான்கு வார இடைவெளியில் இரண்டு அளவுகளாக பிரித்து வழங்கப்பட்டு மொத்தம் 1.6 மில்லியன் தடுப்பூசி அளவுகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது இருப்பதாகக் கருதப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்குவதே திட்டமாகும்.
அவசரநிலைக் குழுவை எப்போது அவர் மீண்டும் கூட்டுவார் என்பதை பொது இயக்குநர் தெரிவிக்கவில்லை, ஆனால் பின்வரும் சில நிபந்தனைகள் மறுமதிப்பீட்டைத் தூண்டும்: அடுத்த மூன்று வாரங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது, பாலியல் தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடிய குழுவினரிடையே (நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள், எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள்) நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டது, நோயின் தீவிரத்தன்மை அல்லது இறப்புக்கள் அதிகரிப்பது, விலங்குகளுக்கு மீண்டும் பரவுவதற்கான சான்றுகள், மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு வெளியே கண்டறியப்பட்ட அதிக வீரியம் கொண்ட வெவ்வேறு வகைகளின் (பரம்பரைகளின்) தொற்றுக்கான சான்றுகள் போன்றவையாகும்.
WHO செய்தியாளர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்று, விநியோகச் சங்கிலிகளின் சீர்குலைவால் உருவாகியுள்ள சர்வதேச நெருக்கடியும், உணவு விலைகளையும் உணவு பற்றாக்குறையையும் தூண்டும் பணவீக்க அழுத்தங்களும் உலகின் பெரும்பாலான பகுதிகள் முழுவதும் விரைந்து பாரிய பசி பட்டினி நிலைக்கு வழிவகுக்கும். மேலும், பல பகுதிகளில் வரலாறு காணாத வறட்சியை ஏற்படுத்தியுள்ள உலகளாவிய காலநிலையால் இவை அதிகரித்து வருகின்றன.
டாக்டர். கெப்ரேயஸ் இவ்வாறு எச்சரித்தார், “உலகளாவிய உணவு நெருக்கடியானது… மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்காமல் அவர்கள் பட்டினியில் வாடும் நிலையை உருவாக்கும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது… உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடானது மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், அவர்களை மிகுந்த நோய் அபாயத்தில் ஆழ்த்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் தட்டம்மை ஆகியவற்றால் இறக்கும் அபாயம் அதிகம்.”
ஆக்ஸ்பாமின் சமத்துவமின்மைக் கொள்கையின் தலைவரான மேக்ஸ் லாசன் (Max Lawson), பசி நெருக்கடியைத் தீர்ப்பதில் ஜி7 தோல்வியடைந்தது பற்றி கூறினார், “தற்போதைய நெருக்கடியின் [ரஷ்யா உடனான அமெரிக்க-நேட்டோ தலைமையிலான போர்] காரணமாக 323 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக ஜி7 கூறுகிறது, இது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாகும். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள், அதாவது 950 மில்லியன் மக்கள், 2022 ஆம் ஆண்டில் பசி பட்டினிக்கு ஆளாவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பசியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மற்றும் ஐ.நா. மனிதாபிமான முறையீடுகளில் உள்ள பெரும் இடைவெளியை நிரப்புவதற்கும் எங்களுக்கு உணவு மற்றும் விவசாய முதலீடுகளுக்கு நிதியளிப்பதற்கு ஜி7 இல் இருந்து குறைந்தது 28.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது. [G7 ஆல்] 4.5 பில்லியன் டாலர் நிதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, தேவைப்படுவதில் ஒரு சிறு பகுதி மட்டுமேயாகும்.” மேலும், உலகளாவிய மனிதாபிமான மேல்முறையீட்டு நிதியும் 37 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது.
மேலும் அவர், “கோவிட்-19 முடிந்துவிட்டதாகவும், தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடி எதுவுமில்லை எனவும் நாம் நினைக்க வேண்டும் என்று ஜி7 விரும்புகிறது. இன்னும் ஒரு தடுப்பூசி கூட பெறாத பல மில்லியன் மக்களுக்கும், மேலும் இன்னும் இந்த கொடிய நோயினால் இறந்து கொண்டிருக்கும் பலருக்கும் இதைச் சொல்லுங்கள்” என்று கூறினார்.
இரண்டு ஆண்டுகளாக மழையில்லாத ஆபத்தான காலங்களை எதிர்கொண்டுள்ள எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் தற்போது 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடனடி உதவி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களாக உள்ளனர். இந்நாடுகளில் உள்ள மக்களுக்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தான் முக்கியமான பொருளாதார வழிவகையாக இருக்கும் நிலையில், மில்லியன் கணக்கான கால்நடைகளை அவர்கள் இழந்துள்ளதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.
ஆபிரிக்காவின் கொம்பு பகுதிக்கான, அக்கறைக்கான உலகளாவிய பிராந்திய இயக்குநரும் சமூக மேம்பாட்டு நிபுணருமான ஆமினா அப்துல்லா, 1.6 மில்லியன் மக்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பது உட்பட இப்பகுதியில் 5 மில்லியன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர், “அவசர நடவடிக்கை எடுக்காமல் மற்றும் மனிதாபிமான ஆதரவை அதிகரிக்காமல் இருந்தால், இந்த குழந்தைகளில் 350,000 பேர் இறக்கும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.
எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நிதி அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான பீட்டர் சாண்ட்ஸ், Agence France-Presse (AFP) இடம் இவ்வாறு கூறினார், “நமது அடுத்த சுகாதார நெருக்கடியை நாம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். இது ஒரு புதிய நோய்க்கிருமி அல்ல, ஆனால் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் ஏற்கனவே இருக்கும் நோய்களால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தொற்றுநோய்கள் மற்றும் உணவு பற்றாக்குறை மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால்…. மில்லியன் கணக்கான கூடுதல் இறப்புக்கள் நிகழக்கூடும் என்பது பற்றி நாம் பேசலாம் என்று நான் நினைக்கிறேன்.” உண்மையில் தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த தசாப்தத்தில் முதன்முறையாக, காசநோய் தொடர்புடைய இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை வழங்கிய Roe v. Wade தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்த விவகாரம் குறித்த தனது தொடக்கக் கருத்துக்களை பொது இயக்குநர் இவ்வாறு முடித்தார். அவர், “WHO இன் நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். அனைத்து பெண்களுக்கும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் என்று வரும்போது அதை தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும், அவ்வளவு தான்! பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது சுகாதாரமே. அது உயிர்களைக் காப்பாற்றுகிறது. அதைக் கட்டுப்படுத்துவது என்பது, பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை நோக்கித் தள்ளுகிறது, அதனால் ஏற்படும் சிக்கல்களால் மரணம் கூட ஏற்படலாம். அதற்கான ஆதாரம் மறுக்க முடியாததாகும்” என்று கூறினார்.
இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் அமெரிக்காவில் உள்ள ஏழை தொழிலாள வர்க்கப் பெண்களுக்கு அருகில், ஆபத்தான நடைமுறைகளை வழங்க இரகசிய முறைசாரா முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்கள் விரைவாக வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை, இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் —தொற்று, மலட்டுத்தன்மை, மரணம், குற்றவியல் வழக்கு— மற்றும் இந்த வலதுசாரி தடையானது உலகம் முழுவதும் பாசிச மற்றும் மதவெறிக் கூறுகளை தைரியப்படுத்தும்.