மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 தொற்றுநோய் பல நாடுகளில் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் பரவி வருகிறது, இது மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறன் கொண்ட ஓமிக்ரோனின் BA.4, BA.5 துணைமாறுபாடுகளால் தூண்டப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீபத்திய மிகப்பரந்த நோய்தொற்று எழுச்சியின் மையங்களாக மாறியுள்ளன. மே 30 அன்று நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்தது 466,297 என்ற மட்டத்தை எட்டியதன் பின்னர், நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் உலகளாவிய ஏழு நாள் சராசரி இப்போது 661,420 ஆக உச்சத்தில் உள்ளது. கோவிட்-19 அளவீடுகளின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் நடவடிக்கைகள் பரவலாக அகற்றப்பட்டுள்ள போதிலும், புதிய நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதாவது, இந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் பரிசோதனை நேர்மறை விகிதங்கள் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
பரிசோதனை நேர்மறை விகிதங்களில் நிகழும் திடீர் அதிகரிப்பு என்பது, பொது சுகாதாரத் துறைகளால் ஆவணப்படுத்தப்பட்டதை விட பதிவு செய்யப்படாத நோய்தொற்றுக்கள் வேகமாக அதிகரிக்கின்றன என்பதாகும். உதாரணமாக, அமெரிக்காவில், ஓமிக்ரோனின் BA.4, BA.5 துணைமாறுபாடுகள் வரிசைப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களில் 35 சதவிகிதத்திற்கு காரணமாகவுள்ளது, அதன்படி நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி கடந்த வாரத்தில் சுமார் 10 சதவிகிதம் உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 109,105 ஆக அதிகரித்தது. இருப்பினும், பரிசோதனை நேர்மறை விகிதம் மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தொடர்ந்து 10 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பதுடன், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜோன் ஹாப்கின்ஸ் கோவிட்-19 தரவுத் தளத்தின் கூற்றுப்படி, பல வாரங்களாக தினசரி சராசரி இறப்பு எண்ணிக்கை 300 இல் இருந்து 350 க்கு இடைப்பட்ட எண்ணிக்கைகளில் இருந்தது, இப்போது 420 ஆக மேலும் உயர்ந்துள்ளது.
BA.5 இன் காரணமாக ஜூன் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் இரண்டாவது மிகப்பெரிய அலையை சந்தித்த போர்ச்சுகல், ஜூன் 1 ஆம் தேதிக்குள் பரிசோதனை நேர்மறை விகிதம் அங்கு 50 சதவிகிதத்தை தாண்டி அதிகரிப்பதைக் கண்டது. போர்ச்சுகலின் மக்கள்தொகையில் 86 சதவிகிதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் 65 சதவிகிதத்தினர் குறைந்தது ஒரு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், இருப்பினும் தினசரி இறப்புக்கள் குளிர்காலத்தில் முதல் ஓமிக்ரோன் அலையின் போதான உச்சத்தை எட்டிவிட்டன. இது, கோவிட்-19 தடுப்பூசிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் மக்களைப் பாதித்து வரும் நோய்தொற்றுக்களின் எழுச்சியைத் தடுக்காது என்ற முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது.
பரிசோதனை நேர்மறை விகிதம் ஜூன் நடுப்பகுதியில் ஸ்பெயினில் 30 சதவிகிதத்தையும், பிரான்சில் 20 சதவிகிதத்தையும், ஜேர்மனியில் 40 சதவிகிதத்தையும் தாண்டிய நிலையில், மற்ற ஐரோப்பிய பகுதி முழுவதும் பரிசோதனை நேர்மறை விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. பிரேசில் அதன் நான்காவது நோய்தொற்று அலைக்கு மத்தியில் உள்ளது, அதே நேரத்தில் பாசிச போல்சோனாரோ அரசாங்கம் அனைத்து தொற்றுநோய் அவசரகால நடவடிக்கைகளையும் திறம்பட முடித்துவிட்டது. பரிசோதனைகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இங்கிலாந்தில், தினசரி புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி நாளொன்றுக்கு 4,754 ஆக இருந்தது அதிரடியாக நான்கு மடங்கு அதிகரித்து ஜூன் 2 அன்று 19,695 ஆக உச்சம் கண்டுள்ளது, அதே நேரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்று வாரங்களில் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கையும் மீண்டும் ஒருமுறை மேல்நோக்கி உயரத் தொடங்கியுள்ளது. பல நாடுகளில் உள்ளதைப் போலவே, வயோதிபர்கள் இந்த தாக்குதலின் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள். பெரும்பாலானவர்கள் பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசிகளை போட்டு முடித்துவிட்ட நிலையில், அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையே கொண்டுள்ளனர், மேலும் அவர்களின் வயது மற்றும் மருத்துவ நிலை காரணமாக அவர்களுக்கு கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.
இஸ்ரேலில், தடுப்பூசி மட்டும் மூலோபாயம் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது, கடந்த மூன்று வாரங்களில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கிட்டத்தட்ட ஐந்து மடங்குகள் உயர்ந்துள்ளன, அதாவது தினசரி புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது. அதே காலகட்டத்தில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஜெருசலேம் போஸ்ட் செய்தியின்படி, 255 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், 41 பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இருவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பைபாஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பரிசோதனை நேர்மறை விகிதம் 41.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
முதல் ஓமிக்ரோன் அலை தீவு நாட்டிற்குள் தாக்கியதிலிருந்து ஆஸ்திரேலியா தொடர்ச்சியான நோய்தொற்று அலைகளை எதிர்கொண்டுள்ளது, மேலும் தினசரி புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மீண்டும் மேல்நோக்கி உயர்கின்றது. நேற்றைய நிலவரப்படி, 3,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில், ஓமிக்ரோனின் BA.4, BA.5 துணைமாறுபாடுகள், தடுப்பூசிகள், அத்துடன் நவம்பர் பிற்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரோனின் BA.1, BA.2 துணைமாறுபாடுகளின் முந்தைய நோய்தொற்றுக்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் எதிர்க்கும் திறன் கொண்டவை என்பதை நிரூபிக்கும் குறைந்தது நான்கு ஆய்வுகள் விஞ்ஞான இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்தொற்றுக்கள் மூலம் கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாலும், கோடைக்கால பயணப் பருவத்தில் நோய்தொற்று கட்டுப்பாடுகள் முற்றிலும் அகற்றப்பட்ட நிலையிலும், வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் உலகளவில் பில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்பதே இதன் உட்குறிப்பாகும்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு உலக அரசாங்கமும் தங்கள் மக்களை கொடிய நோய்க்கிருமியின் மற்றொரு தாக்குதலில் இருந்து பாதுகாக்க மறுக்கும் அதேவேளையில், சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் நேற்று இரண்டு கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி வெறும் 24 ஆகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் தொற்றுநோய்களின் கடினமான அலையை தோற்கடித்த ஷாங்காய், கடந்த வாரம் ஒரு சில புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களை மட்டுமே அறிவித்தது.
சீனாவின் தீவிரமான பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கும் தொழிலாள வர்க்கம் ‘வைரஸூடன் வாழ வேண்டும்’ என்ற ஏகாதிபத்திய நாடுகளின் கோரிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இதைவிட அப்பட்டமாக இருக்க முடியாது. இறப்புக்களின் மற்றொரு எழுச்சி இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்காவில் தற்போதைய இறப்பு விகிதம் குறைந்தது வருடாந்திர இறப்பு எண்ணிக்கையான 130,000 அளவிற்கு இருக்கும், இது சராசரி காய்ச்சல் பருவத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும், மற்றும் கோவிட்-19 காரணமான சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாகும்.
மேலும், கோவிட்-19 இன் கடுமையான தாக்கத்திற்குப் பின்னர், அது நெடுங்கோவிட் அல்லது Post-Acute Coronavirus Syndrome (PACS) என்ற நோய் செயல்பாட்டில் மனித உடலின் பல்வேறு உறுப்பு அமைப்புகளுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்பதற்கான சான்றுகள் அதிகரித்துவிட்டன, இது பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 30 சதவிகிதத்தினரை பாதிக்கிறது.
அமெரிக்காவில், வயது வந்தோரில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் பெப்ரவரி மாதத்திற்குள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை அதன் பின்னர் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வயது வந்தோர் தற்போது நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்க அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டது, இது இதயம், நுரையீரல், சிறுநீரகம், நரம்பியல் மற்றும் பிற உறுப்பு அமைப்புக்களைத் தாக்கக்கூடிய பலவிதமான நோயறிகுறிகளை உள்ளடக்கியது.
பலவீனப்படுத்தும் நெடுங்கோவிட் நோய், நெடுங்கோவிட் நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரை பாதிக்கலாம், தீர்மானிக்கப்படாத காலத்திற்கு அவர்கள் வேலை செய்யும் திறனை அல்லது அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பராமரிக்கும் திறனை கடுமையாகப் பாதிக்கலாம். நெடுங்கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகக் குறைவான பாதுகாப்பை வழங்குவதாகவும், இலேசான கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட தனிநபர்கள், நோய்தொற்று பாதிப்பில்லாத மற்ற நபர்களுடன் தங்களை ஒப்பிடுகையில், அவர்களது நோய்தொற்று பாதிப்பால் ஏற்படும் சிக்கல்களால் இறக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாகவும் மற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
தொடர்ந்து பாரிய தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும், நோய்தொற்றுக்கள் மற்றும் மறுதொற்றுக்களின் விளைவாக மக்கள் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படும், மற்றும் பலர் தங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதால் வேலை சந்தைகளை கைவிட்டுவிடும் நிலைமைகளால் தொற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் ஆளும் உயரடுக்கினர் மிக மந்தமாக உள்ளனர். இடைவிடாத பணவீக்கம் இந்த செயல்முறைகளை அதிகரிக்கச் செய்கிறது.
பெருகி வரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்கையில், பெருநிறுவன ஊடகங்கள் இந்த தொற்றுநோய் குறித்த மாயையான அறிக்கைகளையே அதிகரித்தளவில் வெளியிடுகின்றன. ஞாயிற்றுக்கிழமை, ‘தொற்றுநோய் ஒரு அந்தி மண்டலத்தில் உள்ளது. அதை அனுபவியுங்கள் – ஆனால் பாதுகாப்பாக இருங்கள்’ (‘The Pandemic is in a twilight zone. Enjoy it – but stay safe’) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு அறிக்கையில் இது எடுத்துக்காட்டப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்ச்சியான அபத்தமான கூற்றுக்களுடன் தொடங்குகிறது, அதாவது, “தொற்றுநோய் ஒரு அந்தி மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது, தேசத்திற்கு பெரியளவில் இடையூறுகளை அது ஏற்படுத்தவில்லை அல்லது மறைந்துவிடவில்லை. முகக்கவசம் அணிய தேவைப்படாத அல்லது அச்சுறுத்தும் நோய்தொற்று எழுச்சியில்லாத கோடைக்காலத்தையே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவிற்குள் நுழையும் முன் சர்வதேச விமானப் பயணிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் கைவிட்டுள்ளது. எங்களிடம் தடுப்பூசிகள், வைரஸ் எதிர்ப்பிகள் மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகள் ஆகியவை உபரியாக உள்ளன. எனவே, இதுவரை மிகவும் நன்றாக உள்ளது” என்றெல்லாம் கதை விடுகிறது.
இந்த கூற்றுக்கள் ஒவ்வொன்றும் பொய்யானதே. மேலே குறிப்பிட்டுள்ளபடி, அமெரிக்கா தற்போது தொற்றுநோய்களின் பெரும் எழுச்சிக்கு மத்தியில் உள்ளது, இது ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இந்த தீவிரமடைந்து வரும் நோய்தொற்று எழுச்சியானது அனைத்து தொழில்துறைகளையும் சீர்குலைத்துள்ளது, குறிப்பாக, பணியாளர் பற்றாக்குறையால் விமானத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விமான தாமதங்கள் மற்றும் இரத்துக்களை எதிர்கொள்கிறது. தடுப்பூசிகள், வைரஸ் எதிர்ப்பிகள் மற்றும் பரிசோதனைகளுக்கான நிதி இப்போது இல்லை, மருத்துவ பொருட்களின் விநியோகம் குறைந்துவிட்டது, மேலும் தொற்றுநோய்க்கான நிதியளிப்பாக இனி ஒரு பைசா கூட ஒதுக்கப்பட மாட்டாது என்பதை காங்கிரஸ் குடியரசுக் கட்சியினர் முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தொற்றுநோய் காலத்தில் பெரும் இலாபமீட்டிய ஜெஃப் பெசோஸ் (நிகர மதிப்பு 140 பில்லியன் டாலர்) உள்ளிட்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொறுப்பற்ற தன்மையையும் முட்டாள்தனத்தையும் போஸ்ட் பத்திரிகை மிகத் தெளிவற்ற வகையில் வெளிப்படுத்துகிறது. இந்த சமூக ஒட்டுண்ணிகள் தான் கற்பனை மற்றும் சுய மாயையின் ‘அந்தி மண்டலத்தில்’ வாழ்கின்றனர்.
ஓமிக்ரோனின் BA.4, BA.5 துணைமாறுபாடுகளே இதுவரை SARS-CoV-2 இன் மிகவும் பரவக்கூடிய வகைகளாகும். உலக முதலாளித்துவம் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த முற்றிலும் மறுத்துவிட்ட நிலையில், பில்லியன் கணக்கான மக்களுக்கு வைரஸ் எளிதாக தொற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது மிகவும் ஆபத்தான மாறுபாடுகளாக தொடர்ந்து பரிணமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த பரிணாம செயல்முறை மிக வேகமாக நிகழ்கிறது, தடுப்பூசி தயாரிப்பாளர்களால் வைரஸின் மரபணு வரிசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தடுப்பூசி தயாரிப்பில் வேகத்தை பராமரிக்க முடியாது, மொடெர்னா நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியின் அடுத்த தயாரிப்பு ஏற்கனவே காலாவதியாகிவிட்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரே ஒரு சாத்தியமான தொற்றுநோய் மூலோபாயம் உலகளாவிய ஒழிப்பு மட்டுமே ஆகும், இது சில மாதங்களில் தொற்றுநோயை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும். அதாவது, வைரஸ் பரவுவதை நிரந்தரமாக தடுக்க, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் இது பயன்படுத்துகிறது. அத்தகைய பொறுப்பை நிறைவேற்ற முதலாளித்துவம் முற்றிலும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது, எனவே சர்வதேச தொழிலாள வர்க்கம் தான் இந்த வரலாற்றுப் பணியை செய்து முடிக்க பொறுப்பாளியாக உள்ளது.