முன்னோக்கு

பைடெனின் நோய்தொற்றும், “என்றென்றும் கோவிட்டின்" கொடூர யதார்த்தமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்குக் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டிருப்பது, இந்தப் பெருந்தொற்றுக்கு அமெரிக்கா காட்டும் விடையிறுப்பில் ஒரு முக்கியத் திருப்புமுனையைக் குறிக்கிறது. பைடென் நிர்வாகத்தில் ஆழ்ந்த கவலையையும் சுய-நடவடிக்கைகளையும் தூண்டியிருக்க வேண்டிய இந்தச் சம்பவம், அதற்குப் பதிலாக, என்றென்றைக்கும், ஆண்டுதோறும், மீண்டும் மீண்டும், ஒவ்வொருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படும் என்று இந்தப் பெருந்தொற்றை நோக்கிய வெள்ளை மாளிகையின் கொடூரமான புதியக் கொள்கையைப் பகிரங்கமாக அறிவிக்கப் பயன்படுத்தப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம்குறிப்பிட்டுள்ளவாறு, அதிகளவில் பரவக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையே மீறும் ஓமிக்ரோன் BA.1 துணை வகைக் கடந்த குளிர்காலத்தில் அதிகரித்த போது, அது கோவிட்-19 பரவலை மெதுவாக்க இருந்த எல்லாத் தணிப்பு நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய வகைகளைப் போலவே, BA.1 வகையும் நீடித்த நோயெதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும் என்றும், இந்த வைரஸை 'அவ்வப்போதைய தொற்றுநோய் தன்மைக்கு' (endemicity) கொண்டு செல்லும் என்றும் பல உலக அரசாங்கங்களின் அதிகாரிகள் விஞ்ஞானபூர்வமற்ற கூற்றுக்களைக் கூறினார்கள்.

இப்போது, அடுத்தடுத்துக் கூடுதலாக மூன்று ஓமிக்ரோன் துணை வகைகளின் அலைகளுக்குப் பின்னர், இந்த இற்றுப் போன பொய்யும் கூட கைவிடப்பட்டு, பைடென் நிர்வாகம் பகிரங்கமாகவே நிரந்தர வெகுஜன நோய்தொற்றுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. முக்கியமாக இது டொனால்ட் ட்ரம்ப் நடைமுறைப்படுத்திய 'சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும்' மூலோபாயத்தின் மீளத் தொகுக்கப்பட்ட இன்னும் கூடுதல் அபாயகரமான பதிப்பாகும், ஏனென்றால் இந்த வைரஸ் இப்போதைய தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறனை வேகமாக அழிக்க அச்சுறுத்துகிறது. SARS-CoV-2 கட்டுப்பாடின்றி நிரந்தரமாகப் பரவ அனுமதிப்பது என்ற அவர்களின் உத்தேசத்தை வெள்ளை மாளிகை பகிரங்கமாக அறிவிக்கின்ற அதேவேளையில், அமெரிக்க மற்றும் உலக சமூகம் மீது இது ஏற்படுத்தும் பயங்கரமான தாக்கங்களைக் குறித்துத் தொடர்ந்து மூடிமறைக்கிறது.

கோவிட்-19 நோய்தொற்றில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கணிசமாகக் குறைக்க ஜூன் மாத வாக்கில் முடிவு எடுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக உள்ளது. சமீபத்திய வாரங்களில், பைடென் முகக் கவசம் அணியாமலேயே சர்வதேச கூட்டங்களிலும் மிகப்பெரும் உள்அரங்கு நிகழ்ச்சிகளிலும் பல புகைப்படங்களுக்கும் காணொளிகளிலும் தோன்றி இருந்தார். நடைமுறையில், அவர்களின் 'என்றென்றும் கோவிட்' கொள்கையை அமெரிக்க சமூகம் ஏற்குமாறு கட்டாயப்படுத்தும் ஓர் ஆழ்ந்தப் பிரச்சார நடவடிக்கையின் பாகமாக, வெள்ளை மாளிகை நனவுபூர்வமாக பைடெனுக்கு நோய்தொற்று ஏற்பட அனுமதித்தது.

ஜூலை 18 இல், பைடெனின் நோய்தொற்றுப் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அவரின் 81 வயதான தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி ஃபாசி Politico பத்திரிகைக்கு இவ்வாறு கூறினார், “இப்போது நாம் ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளோம். 'இனி நமக்குக் கோவிட் ஏற்படாது எனும் போது, நீங்கள் வெளியில் போகலாம்' என்று யாரும் கூறும் போது, எனக்கு 105 வயது ஆகி இருக்கும். இதனுடன் தான் நாம் வாழப் போகிறோம் என்று நினைக்கிறேன்.” வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தப் பெருந்தொற்றுக் குறைந்தது அடுத்த கால் நூற்றாண்டுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் என்று டாக்டர் ஃபாசி தெரிவித்தார்.

பைடென் நோய்வாய்ப்பட்டிருந்த போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் கூட்டம் ஒவ்வொன்றிலும் வெள்ளை மாளிகையின் கோவிட் விடையிறுப்புக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜாவும் மற்றும் பத்திரிகையாளர் துறைச் செயலர் காத்ரீன் ஜோன்-பியரும் இந்த வைரஸிடம் சரணடையும் இதே அறிக்கையை மீளவலியுறுத்தினர், அதேவேளையில் எல்லா அமெரிக்கர்களும் தவிர்க்கவியலாமல் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாவார்கள் என்று குறிப்பிட்டனர்.

ஜூலை 21 இல், ஜோன்-பியர் கூறினார், 'இதோ, இது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும். டாக்டர் ஜா கூறியதைப் போல … ஒரு கட்டத்தில், அனைவருக்கும் கோவிட் ஏற்படப் போகிறது.” அடுத்த நாள், டாக்டர் ஜா அப்பட்டமாகக் கூறினார், 'இந்த வைரஸ் என்றென்றும் நம்முடன் இருக்கப் போகிறது.' திங்கட்கிழமை, ஜூலை 25 இல், ஜோன்-பியர் மீண்டும் கூறினார், 'நாங்கள் கூறியது போல, கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் கோவிட்டைப் பெறப் போகிறார்கள்.' முதலாளித்துவப் பத்திரிக்கைகளின் எண்ணற்ற கட்டுரைகளும் செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் பல நிகழ்ச்சிகளிலும் இதே புள்ளிகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டன.

இறுதியாக, புதன்கிழமை பைடெனுக்குக் கோவிட்-19 இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்தது, அவர் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டார். பார்க்கையில் உடல்நலமின்றி இருந்ததுடன், மீண்டும் மீண்டும் இருமிக் கொண்டிருந்த அவர் குரல் அப்போதும் நோய்தொற்றால் உள்வாங்கி இருந்தது, வழக்கத்தை விட வார்த்தைகளில் தடுமாறிய பைடென், ரோஸ் கார்டனில் முகக்கவசம் அணியாத உற்சாகக் குரல் எழுப்பிய பணியாளர்களின் ஒரு குழுவினருக்கு ஒரு பொய்யான மற்றும் எரிச்சலூட்டும் 10 நிமிட உரை வழங்கினார், அதில் அவர் தடுப்பூசிகளையும் ஃபைசர் நிறுவனத்தின் வைரஸ் தடுப்பு Paxlovid மருந்தையும் மாயஜாலக் 'கருவிகளாக' சித்தரித்ததுடன், அவை வெகுஜனங்களிடையே நிரந்தர வைரஸ் பரவல் அபாயங்களை நீக்குவதாகக் கூறினார்.

President Joe Biden removes his face mask as he arrives to speak in the Rose Garden of the White House in Washington, Wednesday, July 27, 2022. Biden ended his COVID-19 isolation after testing negative for the virus on Tuesday night and again on Wednesday. (AP Photo/Susan Walsh) [AP Photo/Susan Walsh]

அவர் உரையின் போது, பைடென் மூன்று முறைக் கடவுளையும், ஒரு முறை 'பிரார்த்தனைகளையும்' குறிப்பிட்டார். கோவிட்-19 ஆல் அதிகரித்து வரும் நாளாந்த இறப்பு எண்ணிக்கையைக் குறித்தோ, நீண்ட காலக் கோவிட் பாதிப்புகள், வைரஸின் பரிணமிப்பு, முகக்கவசம் அணிவதற்கான உத்தரவுகள், காற்றுவழிப் பரவல் குறித்தோ, அல்லது முன்னணி விஞ்ஞானிகள் எழுப்பிய இந்தப் பெருந்தொற்றின் மற்ற முக்கிய கவலைகளைக் குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை. பைடென் உரை நிகழ்த்திய அதே நாளில், உத்தியோகப்பூர்வமாக 801 அமெரிக்கர்கள் இறந்திருந்தனர், ஏழு நாட்களுக்கான தினசரி சராசரி புதிய இறப்புகள் ஜூன் 21 இல் இருந்த எண்ணிக்கையை விட 67 சதவீதம் உயர்ந்து, 440 ஆக அதிகரித்திருந்தது, அதேவேளையில் மருத்துவமனை அனுமதிப்புகள் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மடங்கு அதிகரித்து 44,000 ஐ எட்டியது.

பைடென் அவர் உரையின் ஆரம்பத்தில் கூறினார், “உண்மை என்னவென்றால், BA.5 என்றால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் நம்மில் பலருக்கு இன்னும் கோவிட் ஏற்படப் போகிறது என்று அர்த்தம். நாம் தவறானதைச் செய்து கொண்டிருந்தோம், தவறானதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. துரதிருஷ்டவசமாக, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போலவே, இந்த கோவிட் இன்னமும் நம்முடன் இருக்கிறது.”

பின்னர் அவர் பொய்யாக வாதிட்டார்: “கடந்த 18 மாதங்களில், என் நிர்வாகம் இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எதை ஒன்றையும் செய்யாமல் விடவில்லை. எதையுமே விடவில்லை. ரோஸ் கார்டனில் இருப்பவர்கள் அனைவரின் உதவியோடு, நான் பதவி ஏற்றதில் இருந்து, நாங்கள் அண்மித்து 90 சதவீத மரணங்களைக் குறைத்துள்ளோம். வணிகங்களும் பள்ளிகளும் ஒத்துழைத்தன. தாத்தா-பாட்டிமார் அவர்களின் மழலைகளை, பேரன்-பேத்திகளை மீண்டும் ஆரத் தழுவி மகிழ்கின்றனர்.”

யதார்த்தத்தில், ஓமிக்ரோன் BA.1 கடந்த குளிர்காலத்தில் அதிகரித்த போது தணிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதால், ஏழு நாட்களுக்கான சராசரி நாளாந்த புதிய இறப்புகளின் எண்ணிக்கை பெப்ரவரி 1, 2022 இல் நாளொன்றுக்கு 2,654 ஐ எட்டியது, இது பைடென் பதவி ஏற்ற போது இருந்த நாளாந்த இறப்பு எண்ணிக்கையை விட வெறும் 13 சதவீதம் மட்டுமே குறைவாகும். உயிர் காக்கும் தடுப்பூசிகள் வெளிவந்த பின்னரும், பைடென் பதவியேற்றதில் இருந்து 610,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், இது ட்ரம்பின் கீழ் நடந்த இறப்புகளை விட 39 சதவீதம் அதிக இறப்புகளாகும். அமெரிக்காவில் 200,000 க்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டிமார் கவனிப்பாளர்கள் கோவிட்-19 ஆல் கொல்லப்பட்டுள்ளனர், இதில் பெரும்பான்மையினர் பைடென் ஆட்சியில் இறந்துள்ளனர், பொறுப்பின்றி இவர் பள்ளிகளை மீண்டும் திறந்துவிட்டதால் அது குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்குள் இந்தப் பாரிய வைரஸ் பரவலுக்கு வழிவகுத்தது.

பைடென் அறிவித்தார், “இப்போது நீங்கள் பெரும்பாலான கோவிட் இறப்புகளைத் தடுக்க முடியும். இதற்குக் காரணம், கடந்த ஆண்டு என் நிர்வாகம் முதலீடு செய்து விநியோகித்த மூன்று இலவசக் கருவிகளாகும்: பூஸ்டர் தடுப்பூசிகள்; வீட்டிலேயே நோய்தொற்றுப் பரிசோதனைகள்; பயன்படுத்த எளிதான, பயனுள்ள சிகிச்சைகள்.' அவர் இதை மீண்டும் வலியுறுத்தினார், 'நான் செய்ததைச் செய்வதன் மூலம், அதாவது, பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளுங்கள், பரிசோதனைச் செய்து கொள்ளுங்கள், சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் பயமின்றி வாழலாம்,” என்றார்.

இந்தப் பெருந்தொற்றைக் குறித்த பைடெனின் அனைத்துக் கூற்றுகளும் பொய்யாக விஞ்ஞானபூர்வமற்று உள்ளன, இது வரவிருக்கும் அதிகரித்து வரும் ஆபத்துகளை முகங்கொடுத்துள்ள பொதுமக்களை நிராயுதபாணியாக்க மழுங்கடிக்கும் மருந்தாகச் சேவையாற்றுகிறது. அவர்கள் வைரஸ் பரவலைத் தடுக்க மறுப்பதுடன் சேர்ந்து, தடுப்பூசி மற்றும் பாக்ஸ்லோவிட் (Paxlovid) மட்டும் போதும் என்ற மூலோபாயத்தை அவர் நிர்வாகம் நடைமுறையில் பின்பற்றுவது, அமெரிக்க சமூகத்தை ஒரு பேரழிவை நோக்கிய பாதையில் தள்ளி உள்ளது.

வியாழக்கிழமை நியூ யோர்க் இதழில் வெளியிடப்பட்ட விஞ்ஞானி டாக்டர். எரிக் டோபோல் உடனான ஒரு பேட்டி, பைடென் முன்வைக்கும் மூளைக் குழப்பமான கற்பனையை முழுமையாக உடைக்கிறார், தொடர்ந்து பரவி வரும் பாரிய நோய்தொற்றானது அதிகரித்தளவில் பரவக்கூடிய, இன்னும் வீரியமான, தடுப்பூசிகளையே மீறும், பாக்ஸ்லோவிட் (Paxlovid) போன்ற சிகிச்சைகளையே எதிர்க்கும் ஆற்றல் வாய்ந்த மிகவும் அபாயகரமான வைரஸ் வகைகள் பரிணமிக்க SARS-CoV-2 ஐ அனுமதிக்கும் என்று பல விஞ்ஞானிகள் விடுத்த — மற்றும் WSWS மட்டுமே தொடர்ந்து விடாது அறிவித்து வரும் — எச்சரிக்கைகளை அவர் பேட்டி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பாக்ஸ்லோவிட் எதிர்ப்புத் திறன் குறித்து டாக்டர் டோபோல் கூறுகையில்: “இதைத் தவிர்க்கவியலாது. இந்த மருந்தின் எதிர்ப்புத் திறனை நாம் பார்க்க இருக்கிறோம், தடுப்பூசிகளுக்குப் பின்னர், இந்த மருந்து இந்த வைரஸிற்கு எதிராக நாம் எடுத்திருக்கும் இரண்டாவது மிக முக்கிய முன்னேற்றம் ஆகும். ஆனால் இது குறுகிய காலத்திற்காக இருக்கலாம், இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ, பாக்ஸ்லோவிட் நம்மிடம் ஒரு தீர்வாகவோ அல்லது சிகிச்சைக்காகவோ இருக்காது,” என்றார்.

தற்போதுள்ள தடுப்பூசிகளுடன் சேர்ந்து பூஸ்டர் மருந்துகளைப் பற்றி டாக்டர் டோபோல் கருத்துரைக்கையில், ஒவ்வொரு புதிய ஓமிக்ரோன் துணை வகையும் மருத்துவமனை அனுமதிப்புகளை தடுக்கும் திறன் வாய்ந்த இப்போதிருக்கும் தடுப்பூசிகளையே படிப்படியாக ஆற்றல் இழக்கச் செய்துள்ளதைக் காட்டும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சமீபத்திய புள்ளிவிபரங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அவர் குறிப்பிடுகிறார்: “வெறும் இரண்டு ஊசிகளை வைத்துப் பார்த்தால் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு எதிரான செயல்திறனில் ஏறக்குறைய40 புள்ளிகள் குறைந்துள்ளன, இது நம் தடுப்பூசிப் பாதுகாப்பு முறைகளில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் இது குறித்து யாரும் கவலைகளை எழுப்புவதாக தெரியவில்லை. மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் மரணங்களில் இருந்து நமக்குப் பெரும் பாதுகாப்பு கிடைக்கிறது என்று மகிழ்ச்சியாக பேசுவதையே நாம் பார்க்கிறோம். அது பற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்த தரவுகள் அவற்றை ஆதரிப்பதாக இல்லை,” என்றார்.

டாக்டர். டோபோல் கூறுகையில், 'அறிந்ததையே அறியாமல் இருப்பது, அதாவது இந்த வைரஸ் இன்னும் பல வழிகளில் நம் நோயெதிர்ப்பு சக்திக்கு மிகவும் எதிர்ப்புத் திறனோடு விடையிறுக்கும் விதத்தில் மாற உள்ளது — நாம் அதற்கேற்ப திட்டமிட வேண்டும். நாம் ஏதோவொரு வரம்பை எட்டியுள்ளோம் என்று யோசிக்க வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்த வரை, BA.5 மிகவும் மோசமானது என்பதே மிக முக்கிய படிப்பினை … இப்போதைக்கு BA.5 பயங்கரமானதாக தெரியவில்லை என்பதற்கு ஒரே காரணம், BA.1 வகை நோயெதிர்ப்புச் சுவரை உருவாக்கி இருப்பதால் ஆகும். பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் BA.1 அல்லது BA.2 ஆல் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்போது நாம் BA.5 இல் மிகவும் புதியதை, அதன் மிகவும் சாதகமான வளர்ச்சியை, வைரஸின் பெரும் உறுதித்தன்மையை நாம் பார்த்து வருகிறோம் இருந்தாலும் — நாம் அதைக் கையாள எதுவும் செய்யாமல் இருக்கிறோம்,” என்றார்.

'நீங்கள் வெறும் சிரமமானவற்றை மட்டும் எடுத்துப் பார்த்தால், வெவ்வேறு பாதைகள் உள்ளன மற்றும் உலகெங்கிலும் நோயெதிர்ப்புத் திறன் குறைந்த பத்து மில்லியன் கணக்கானவர்கள் இருக்கிறார்கள், நம்மிடையே இன்று இருப்பதை விட மிகவும் சவாலான ஒன்றாக பரிணமித்து வரும் வைரஸிற்கு எதிராக அவர்களை நீங்கள் நிறுத்தப் போகிறீர்களா? என்னால் அப்படி யோசிக்க முடியவில்லை,” என்றவர் முடிக்கிறார்.

டாக்டர் டோபோல் மற்றும் பிரபல யேல் பல்கலைக்கழக நோயெதிர்ப்பாற்றல் துறை நிபுணர் டாக்டர் அகிகோ இவாசாகி ஆகியோர் ஒட்டுமொத்தமாக நோய்தொற்றுக்களைக் நிறுத்த கூடிய அடுத்த தலைமுறைத் தடுப்பூசிகளுக்குப் பாரியளவில் நிதி வழங்குவதற்காக 'மின்னல் வேகத்தில் கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடும் ஆபரேஷன் நாசல் தடுப்பூசி' க்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போதைய தடுப்பூசிகள் பரவலைத் தடுக்காது என்றும், புதிய மாறுபாடுகள் தொடர்ந்து உருவாகும் என்றும் 2020 இல் இருந்தே முன்னணி விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர் என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், மிகவும் திறன்மிக்க உள்நாசிசார் (intranasal) தடுப்பூசிகள் அல்லது சளிசார் (mucosal) தடுப்பூசிகளை அபிவிருத்தி செய்து உற்பத்தி செய்வதில் அமெரிக்கா ஏறக்குறைய நிதி முதலீடே செய்யவில்லை.

பைடென் நிர்வாகத்தின் சமீபத்திய தோரணைகள் இருந்தாலும், அத்தகைய தடுப்பூசிகளை இந்தாண்டோ, அனேகமாக இன்னும் நீண்ட காலத்திற்கும் கூட பாரியளவில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. முகோசல் (mucosal) தடுப்பூசிகள் மீது நடந்து வரும் மருத்துவப் பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தாலும் கூட, “பெரியளவில் உற்பத்தி செய்வதிலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதிலும், வினியோகிப்பதிலும் கணிசமான தாமதங்கள் இருக்கும்,” என்று டாக்டர் டோபோல் மற்றும் டாக்டர் இவாசாகி எச்சரிக்கின்றனர்.

இந்தப் பின்னடைவால் இன்னும் அபாயகரமான மாறுபாடு பரிணமிக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாவதால், இது மற்றொரு பாரியளவிலான நோய்தொற்று அதிகரிப்புகள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புகளை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. நோய்தொற்றுக்கள் மற்றும் மறுதொற்றுக்களின் ஒவ்வொரு புதிய அலை ஏற்படும் போதும், மக்களின் பெரும் பிரிவினரிடையே நீண்ட கால கோவிட் என்றறியப்படுவதன் நீடித்த அறிகுறிகளை அபிவிருத்தி செய்யும், இது உடலில் கிட்டத்தட்ட ஒவ்வொரு உறுப்பையும் பாதித்து, மொத்த நோயாளிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு ஆழ்ந்த பலவீனத்தை ஏற்படுத்த கூடும்.

ஏற்கனவே அமெரிக்காவில் மட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் நீண்ட கால கோவிட் ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கானவர்கள் உள்ளனர். நீண்ட கால கோவிட் குறித்து ஆய்வு செய்யத் தேசிய சுகாதார அமைப்புகளுக்கு (NIH) 1.3 பில்லியன் டாலர் வழங்கி இருந்தாலும், இன்னும் ஒரேயொரு சிகிச்சைப் பரிசோதனைக் கூட அமெரிக்காவில் தொடங்கவில்லை.

'என்றென்றும் கோவிட்' என்ற கொடூரக் கொள்கையை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் முன்னோடி இல்லாமல் குரங்கம்மை (monkeypox) நோய் பரவி வருவதுடன் பொருந்தி உள்ளது. பைடென் உரை வழங்கிய அதே நாளில், உலகளவிலான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கைகளைத் தகர்த்து, அதிகபட்சமாக 1,048 குரங்கம்மை நோயாளிகளை CDC அறிவித்தது. கடந்த சனிக்கிழமை உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மை நோயைச் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என்று அறிவித்திருந்த போதினும், அமெரிக்கச் சுகாதாரம் மற்றும் மனிதச் சேவைகள் துறை (HHS) அந்த வெடிப்பின் உலகளாவிய குவிமையமாக உள்ள இடத்தில் அதுபோன்றவொரு அவசர நிலையை அறிவிக்க மறுத்துள்ளது.

இதே போல அடிப்படைப் பொது சுகாதாரக் கொள்கைகளைக் கைவிடுவது சர்வதேச அளவிலும் நடந்து வருகிறது. இது, அணு ஆயுத உலகப் போர், பொருளாதாரப் பொறிவு, சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் இப்போது பல பெருந்தொற்றுக்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பரந்த கட்டமைப்பு ரீதியான சிதைவின் மையக் கூறுபாடாகும்.

முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு நேர் விகிதத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கம் அதிகரித்தளவில் தாங்கொணா வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் நுழைந்து வருகிறது. SARS-CoV-2 ஐ உலகளவில் இல்லாதொழிப்பதற்கான போராட்டம், வைரஸ் பரவலை ஒரேமுறை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கான அனைத்து பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துவதை உள்ளடக்கிய இது, தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி அடைந்து வரும் உலகளாவிய இயக்கத்தின் மையத்தில் இருக்கும். உலக சோசலிச புரட்சியின் மூலமாக மட்டுமே, உலகெங்கிலும் பொது சுகாதாரத்தைப் பரந்தளவில் விரிவாக்கி, எண்ணற்ற தொற்று நோய்களில் இருந்து உலக சமூகத்தை விடுவித்து, மனிதகுலத்தின் கலாச்சாரத்தைப் புதிய உயரங்களுக்கு உயர்த்துவது சாத்தியமாகும்.