மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
“ஓமிக்ரோன் வகையின் துணை-பிரிவு BA.5, நாம் பார்த்த வைரஸிலேயே மிகவும் மோசமான வகையாகும். இது எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பித்து, ஏற்கனவே பரவலாக, அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுள்ளது.”—ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு பயிலகத்தின் ஸ்தாபகர் மற்றும் இயக்குனர் டாக்டர். எரிக் டோபொல்.
அதிகளவில் தொற்ற கூடிய மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை மீறும் உருமாறிய ஓமிக்ரோன் BA.5 துணைப் பிரிவு இப்போது உலகின் பெரும் பகுதிகளில் அதிகமாக மேலோங்கி உள்ளது, இது நீண்ட கால கோவிட் மற்றும் மரணங்களுடன் சேர்ந்து நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள், உடல் பலவீனங்களின் மற்றொரு அலைக்கு எரியூட்டி வருகிறது. மே 30 இல் ஒரு வரம்பைத் தொட்டதற்குப் பின்னர், உலகளவில் தினசரி புதிய நோயாளிகளின் உத்தியோகப்பூர்வ ஏழு நாள் சராசரி 926,123 ஆக அண்மித்து இரட்டிப்பாகி உள்ளது.
ஐரோப்பா இப்போது BA.5 வகை அதிகரிப்புக்கு மையமாக இருந்தாலும், சமீபத்திய வாரங்களில் பொலிவியா, குவாத்தமாலா, மெக்சிகோ, துனிசியா, ஈராக், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இன்னும் பல நாடுகள் உட்பட உலகெங்கிலுமான நாடுகளில் நோயாளிகள் வேகமாக அதிகரித்துள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் உத்தியோகபூர்வ நோய்த்தொற்று எண்ணிக்கைக் கணிசமாகக் குறைத்துக் காட்டப்படுகின்றன. கடந்த ஏழு மாதங்களில், சீனாவுக்கு அப்பாற்பட்டு ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டின் அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் ஓமிக்ரோன் 'மிதமானது' என்று பொய்யாகக் கூறி, பரிசோதனை மற்றும் விபரங்களின் தடம் அறியும் முறைகளைக் கைவிட்டு விட்டன. பாதுகாப்புக்கு முகக்கவசங்கள் தேவையில்லை என்று ஒவ்வொருவருக்கும் கூறிய அவை, அதேவேளையில் இந்தப் புதிய யதார்த்தத்தில் உண்மையான பாதிப்புகளை ஒருபோதும் விளக்காமல், சமூகம் 'இந்த வைரஸூடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்ற மந்திரத்தை உலகளவில் ஏற்றிருந்தன.
பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸுடன் வாழவில்லை. அவர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்து வருகிறார்கள் அல்லது பலவீனமடைந்து வருகிறார்கள். முன்பினும் அதிகமாகக் கோவிட்-19 அலைகள் குறைந்த இடைவெளியில் மீண்டும் மீண்டும் உண்டாகும் என்பதை மக்கள் எதிர்பார்க்கலாம் என்பதையே, இடைவிடாத பிரச்சாரம் மற்றும் பொருளாதாரக் கட்டாயங்களால் நிர்பந்திக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நடப்பு நிலைமை அர்த்தப்படுத்துகிறது. பல வல்லுனர்கள் முன்கணித்ததைப் போல மற்றும் உலக சோசலிச வலைத் தளம் கடந்தாண்டில் இருந்து எச்சரித்து வந்துள்ளதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் நோய்தொற்றுக்களின் இரண்டு அல்லது மூன்று அலைகள் அல்லது மறுபடியும் நோய்தொற்றுக்கள் ஏற்படுவது என்பது வழமையாக மாறி வருகிறது.
தடுப்பூசி செலுத்திய விகிதங்களில் உலகிலேயே அதிக விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்று என்ற உண்மைக்கு மத்தியிலும், இந்த ஒட்டுமொத்த கண்டமும் பாரியளவில் நோய்தொற்றுக்களின் அதிகரிப்புக்குள் சென்று கொண்டிருக்கிறது, மருத்துவமனை அனுமதிப்புகளும் மரணங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்து வருகின்றன. தனிநபர் அடிப்படையில் பார்த்தால், பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீஸ் இப்போது ஐரோப்பாவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன.
பிரான்சில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 127,212 பேர் அதிகாரப்பூர்வமாக நோய்தொற்றுக்கு உள்ளாகிறார்கள், இது ஜூன் 13 இல் ஏற்பட்ட வரம்பை விட எட்டு மடங்கு அதிகமாகும். கடந்த வாரம் மட்டும், பிரான்சில் கோவிட்-19 ஆல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது, அதேவேளையில் இந்த எண்ணிக்கை ஏனைய பல ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உத்தியோகப்பூர்வ கோவிட்-19 இறப்புகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன, அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இறப்புகள் 60 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன.
கிரீஸில், நாளாந்த புதிய நோயாளிகளின் ஏழு நாள் சராசரி கடந்த மாதம் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து, இப்போது ஒரு நாளைக்கு 17,750 நோயாளிகளாக உள்ளது. அந்நாடு முழுவதும் தற்போது 2,000 க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 ஆல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கோவிட்-19 இன் உத்தியோகபூர்வ இறப்புகள் ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் மோசமான சூழ்நிலையை மறைக்கும் ஒரு முயற்சியில், இந்த வாரம் தேசிய பொது சுகாதார அமைப்பு (EODY) நாள்தோறும் எண்ணிக்கையை அறிவிப்பதில் இருந்து வாரத்திற்கு ஒருமுறை அறிவிக்கும் முறைக்கு மாறியது.
இத்தாலியில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 104,078 பேர் இப்போது உத்தியோகபூர்வமாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், இது ஜூன் 3 இல் இருந்து ஆறு மடங்குக்கும் அதிகமாகும். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மொத்த புதிய நோயாளிகளில் இப்போது 11 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முன்னர் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள், இவர்களுக்கு மறுதொற்று ஏற்பட்டுள்ளது, இது இன்று வரையிலான இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாகும். கோவிட்-19 ஆல் ஏற்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இறப்புகளும் கடந்த மாதம் இரட்டிப்பாகி உள்ளன.
அமெரிக்காவில், BA.5 வகை ஜூன் மாத இறுதியில் மேலோங்கியது. உத்தியோகபூர்வ நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கைக் கடந்த இரண்டு மாதங்களாக நாளொன்றுக்கு 100,000 க்கும் அதிகம் என்றாலும், உண்மையான எண்ணிக்கை ஆறு மடங்குக்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது. மார்ச் மாதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கைத் தேசியளவில் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உத்தியோகப்பூர்வ கோவிட்-19 இறப்புகள் மீண்டுமொருமுறை அதிகரிக்கத் தொடங்கி உள்ளன, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளாட்சி கடந்த வாரம் சராசரி நாளாந்த இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாக அறிவித்தது, மற்ற நகரங்களிலும் இதே போன்ற அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த BA.5 வகை அதிகளவில் நோயெதிர்ப்பு சக்திக்கு அடங்காத பண்புகளைக் கொண்டிருப்பதால், நுண்கிருமியியல் மற்றும் நோய்தொற்று நிபுணர்கள் குறிப்பாக இந்த வகைக் குறித்து கவலைக் கொண்டுள்ளனர். இந்த BA.5 வகையின் திசு வடிவம், அல்லது செல்களைத் தொற்றக் கூடிய அதன் ஆற்றல் மேல்புற சுவாசப் பாதைகளுக்கு பதிலாக நுரையீரல்களில் அதிகமாக தொற்றுவதற்கு ஏற்ப இருப்பதாகத் தெரிகிறது என்றும், விலங்கு மாதிரிகளில் அதிக நோய் தீவிரத்தை ஏற்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவின் கிர்பி பயிலகத்தின் அச்சு பிரசுரிப்புக்கு முந்தைய ஓர் ஆய்வுக் கண்டறிந்தது. ஏனைய எல்லா ஓமிக்ரோன் துணை வகைகளை விடவும் BA.5 வகை அதிக வைரஸ் சுமையை உருவாக்குவதாகவும் அவர்களின் ஆய்வுக் கண்டறிந்தது.
ஆண்டுக்குக் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது உலகளாவிய சமூகத்தில் வெகுஜன நோய்தொற்று அலைகளையும் மற்றும் மறுதொற்றுக்களையும் உண்டாக்கும் 'கோவிட் உடன் வாழ்வதில்' இருந்து மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?
முன்னர் ஒரேயொரு முறை நோய்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் ஒப்பிடுகையில் மீண்டும் மீண்டும் நோய்தொற்றுக்களுக்கு உள்ளானவர்களுக்கு அவர்களின் மரணத்திற்கான எல்லா காரணங்களும் இரட்டிப்பாகி இருப்பதாகவும், அத்துடன் இதயம் மற்றும் சுவாச நோய்களும் உண்டாகி இருப்பதாகவும் செயிண்ட் லூயிஸின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் ஜியாத் அல்-அலி மற்றும் இன்னும் பலரும் வெளியிட்ட அச்சுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது. அவர்களின் நோய்தொற்றின் கடுமையான காலக்கட்டம் முடிந்த பின்னரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான மூன்று மடங்கு அபாயத்தை அவர்கள் முகங்கொடுக்கிறார்கள். மூன்று அல்லது அதற்கு அதிகமான நோய்தொற்றுக்கள் ஒட்டுமொத்தமாக படுமோசமாகிவிடும், இது மனித உடலின் ஒவ்வொரு பிரதான உறுப்பையும் மற்றும் வளர்சிதை மாற்றங்களையும் பாதிக்கும்.
மிகப் பெரிய நோய்தொற்று அலைகளில், யதார்த்தத்தில் நூறு மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த குளிர்காலத்தில் நடந்ததைப் போலவே, பத்து மில்லியன் கணக்கான நோயாளிகள் நீண்ட கால கோவிட் என்றழைக்கப்படும் காலங்கடந்தும் நீடிக்கும் அறிகுறிகளை உருவாக்கப் போகிறார்கள், இந்த நீண்ட கால கோவிட் நோய்தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 10 முதல் 30 சதவீத மக்களைப் பாதிக்கலாம். முந்தைய தடுப்பூசிகள் இந்த அபாயங்களை மிகவும் குறைவாகவே குறைக்கிறது என்பதோடு, ஒருவருக்கு ஏற்படும் மறுதொற்றுக்கள் அவருக்கு நீண்ட காலக் கோவிட் ஏற்பட முன்கூட்டியே வழி வகுக்கின்றன. நீண்ட கால கோவிட் ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினரால் அவர்களைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது அவர்களின் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ளவோ முடியாமல் போகும் அளவுக்கு மிகவும் பலவீனமான பாதிப்புகளை முகங்கொடுக்கக் கூடும்.
இந்த BA.5 வகையின் அதிகரிப்பிலிருந்து கிடைக்கும் சமீபத்திய நிஜமான உலகப் புள்ளவிபரங்களும் சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகளும், கொரோனா வைரஸ் மிதமான பாதிப்பு ஏற்படுத்தாததாக மாறிவிடும் என்ற பொய்யை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்துகின்றன. உலகளவில் நோய்தொற்றுகளின் தற்போதைய இந்த அதிகரிப்பானது, முந்தைய நோய்தொற்றுக்கள் அல்லது தடுப்பூசிகளில் இருந்து மக்கள் அதிகபட்ச நோயெதிர்ப்புச் சக்தி பெற்றிருப்பதற்கு மத்தியில் நடந்து வருவதால், தற்போதிருக்கும் தடுப்பூசிகள் மூலமோ அல்லது கட்டுப்பாடின்றி இந்த வைரஸைப் பரவ அனுமதிப்பதன் மூலமாகவோ 'சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்தை' எப்போதையும் ஏற்படுத்தலாம் என்ற எந்தவொரு கருத்துக்கும் குழிப்பறிக்கிறது.
இந்த வைரஸின் புதிய வகைகள் பரவக் காத்திருக்கின்றன. ஓமிக்ரோன் BA.2.75 வகைப் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, பல நோயாளிகள் விஷயத்தில் இதுவரை இது இந்தியாவில் காணப்படுகிறது. BA.5 வழி வரும் வகைகள் ஜேர்மனி (BA.5.3.1), பிரிட்டன் (BA.5.1) மற்றும் ஏனைய இடங்களில் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. “இந்த வகைகளும் துணை வகைகளும் வேகமாகத் தூண்டப்பட்டு வருகின்றன. ஏதோ ஒன்றோ இரண்டோ அல்ல, மாறாக நூற்றுக் கணக்கான வகைகளும் துணை வகைகளும் உள்ளன,” என்று CDC இன் ஒரு செய்தித் தொடர்பாளர் யாரென அடையாளப்படுத்த கூடாது என்ற நிபந்தனைகளின் பேரில் கூறினார்.
அமெரிக்காவிலும் பல நாடுகளிலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் கவலையான தொனியை ஏற்கத் தொடங்கி உள்ளனர். பல வாரங்களுக்குப் பின்னர் முதல்முறையாக, செவ்வாய்கிழமை, வெள்ளை மாளிகைக் கோவிட் விடையிறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஸ் ஷா முகக்கவசங்கள் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் இதைத் தனிநபர் விருப்பமாக முன்வைத்தார் என்பதோடு, முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
BA.5 மோசமாக அதிகரித்து வருவது குறித்து தெளிவாகப் பதட்டமாக உள்ள டாக்டர் ஷா குறிப்பிடுகையில், “நிறைய அமெரிக்கர்களுக்கு BA.1 தொற்று — ஜனவரி அலையில் BA.1.1 தொற்று ஏற்பட்டிருப்பது தெளிவாக உள்ளது. இந்தத் தருணத்தில், நிச்சயமாக நோய்தொற்றுக்கு எதிராக, BA.5 இல் இருந்து தப்பிக்க, அவர்களின் பாதுகாப்பு அளவு மிகவும் குறைவாக உள்ளது என்பதற்கு நம்மிடம் மிகவும் தெளிவான ஆதாரம் இருப்பதாக நினைக்கிறேன்,” என்றார்.
இதே கருத்தை டாக்டர் அந்தோனி ஃபாசியும் எதிரொலித்தார், அவர்க் கூறுகையில், “உங்களுக்கு BA.1 தொற்று ஏற்பட்டால், உங்களுக்கு BA.4 அல்லது 5 க்கு எதிராக நல்ல நிறைய பாதுகாப்பு இருக்காது … இயற்கையான நோய்தொற்றாக இருந்தாலும் சரி அல்லது தடுப்பூசி மூலமாகக் கிடைத்திருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் கொரோனா வைரஸ்களால் நோயெதிர்ப்புச் சக்தி குறைகிறது என்பதே நமக்குத் தெரிந்த மொத்த கோட்பாடாக உள்ளது,” என்றார்.
இந்த வைரஸை 'பகுதிசார் பருவகால நோயின்' நிலைக்கு மாற்றும் அளவுக்கு இறுதியில் 'சமூக நோயெதிர்ப்புச் சக்தியை' அடைவதற்காக நீண்ட காலமாகக் காத்திருந்த வகை இது என்றும், அதிகளவில் பரவக் கூடிய இந்த ஓமிக்ரோன் வகை 'மிதமானது' என்றும் கூறி, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களுடன் சேர்ந்து, கடந்த குளிர்காலத்தில் இவ்விரு சுகாதாரத் துறை அதிகாரிகளும் அதை வரவேற்றிருந்தார்கள் என்பதை நினைவு கூர வேண்டும்.
ஜனவரி 17 இல் 800,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களுக்குக் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டது, அந்நோயால் 1,397 பேர் உயிரிழந்தார்கள், அன்றைய நாள் டாக்டர் ஃபாசி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் குறிப்பிடுகையில், “ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் உயிருள்ள வைரஸ் தடுப்பூசியாக ஓமிக்ரோன் மாறுமா மாறாதா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாக உள்ளது,” என்றார்.
அதே நாளில், டாக்டர். ஷா CNBC இல் தோன்றிய போது குறிப்பிடுகையில், “இந்த பெருந்தொற்று எவ்வளவு காலம் நீண்டாலும், நாம் இந்த பெருந்தொற்றின் எஞ்சிய காலத்தைக் கையாளவும், இந்த வைரஸை அதிகளவில் பகுதிசார் பருவகால ஒன்றாக கையாளவும் கூடிய ஒரு புதிய வழமைக்கு நகரவும் தேவையான பாடங்களை ஓமிக்ரோன் நமக்கு வழங்கி வருவதாக நினைக்கிறேன். இது நிஜமாகவே உருமாறி எதிர்காலத்தில் புதிய வகைகளாக அடியெடுக்கும் ஒரு வகை, ஆகவே அவற்றை இன்னும் அதிகச் செயல்திறனுடன் நாம் கையாளுவோம்,” என்றார்.
இது உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருந்தது. ஜனவரியிலும், உலகச் சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் டாக்டர். ஹன்ஸ் க்ளூஜ் குறிப்பிடுகையில், “இந்தப் பிராந்தியம் ஒரு வகையான பெருந்தொற்று விளையாட்டின் முடிவுக்கு நகர்ந்து வருகிறது என்பது நம்பக் கூடியதே,” என்றார்.
மார்ச் 1, 2022 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அவரின் கூட்டாட்சி மன்ற உரையில் கூறுகையில், “நாம் பாதுகாப்பாக முன்நோக்கி நகர்ந்து, அதிகளவில் பழைய வழமையான பாதைகளுக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று என்னால் கூற முடியும் … கடந்தாண்டு நாம் ஏற்படுத்திய முன்னேற்றங்களுக்குத் தான் நன்றி கூற வேண்டும், இனி நம் வாழ்வைக் கோவிட்-19 கட்டுப்படுத்த வேண்டியதில்லை,” என்றார்
இந்த பொய்கள் எல்லாம் “கோவிட் உடன் உயிர்வாழ்வை' ஏற்கச் செய்வதற்காக மக்களை நிராயுதபாணியாக்க உத்தேசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020 ஆரம்பத்தில், புதிய வகைகள் பரிணமித்து அழிவை உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதைக் குறித்து உலக சோசலிச வலைத்தளம் எச்சரித்தது, “உலகெங்கிலும் SARS-CoV-2 வைரஸ் பரணமித்து வருவதற்கு மத்தியில், இந்த வைரஸின் புதிய திரிபுகள் உருவாவதற்கும் கூடுதலாக இது உருமாறுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுகின்றன.” இந்த ஆபத்தையும், அதிகமாக பரவக்கூடிய, தடுப்பூசிகளையே எதிர்க்கும் திறன் கொண்ட மற்றும் உயிராபத்தான வகைகள் உருவாவதற்குரிய சாத்தியக்கூறு குறித்தும் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.
The Economist இன் அதிகப்படியான இறப்புகளின் கண்காணிப்பு விபரங்களின்படி, இந்த தொடர்ச்சியான பெருந்தொற்று காரணமாகவும் மற்றும் சமூகத்தை 'கோவிட் உடன் வாழ' கட்டாயப்படுத்தும் முயற்சிகளின் விளைவாகவும் ஜனவரி 3 இல் இருந்து 3.8 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆழமடைந்து வரும் பேரழிவு நிறுத்தப்பட வேண்டும், இதற்குப் பொறுப்பானவர்கள் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்த பெருந்தொற்றை நிறுத்த சர்வதேச தொழிலாள வர்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட, கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.