முன்னோக்கு

300 வணிகக் குழுக்களின் கடிதம் இரயில்வே தொழிலாளர்களின் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு எதிராக தலையிடுமாறு வெள்ளை மாளிகையை வலியுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரயில்வே தொழிலாளர் நடவடிக்கை குழு அதன் நான்காவது பொதுக் கூட்டத்தை அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை கிழக்கு நேரப்படி மாலை 7:00 மணிக்கு நடத்துகிறது. அந்த முடிவு தொழிலாளர்களிடம் உள்ளது, அதிகாரத்துவத்திடம் அல்ல! நிகழ்விற்கு இங்கே பதிவு செய்யவும்.

அக்டோபர் 27, 2021 புதன்கிழமை, பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் உயரமான இரயில்தடங்களில் ஒரு நோர்போக் தெற்கு சரக்கு இரயில் நகர்கிறது [AP Photo/Matt Rourke]

புதனன்று, பைடென் நிர்வாகத்தினாலும் தொழிற்சங்க பேச்சுவார்த்தையாளர்களால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் தேசிய வேலைநிறுத்தத்தைத் தடுக்க முயன்று, உருவாக்கப்பட்ட தேசிய ஒப்பந்தத்தை நிராகரித்த அமெரிக்க இரயில் பாதைத் தொழிலில் உள்ள 12 தொழிற்சங்கங்களில் இரயில் சமிக்ஞை தொழிலாளர்கள் மூன்றாவதாவர்.

இந்த ஒப்பந்தம் இப்போது ஒரு அவமானகரமான சரிவின் விளிம்பில் உள்ளது. வெள்ளை மாளிகை அதிகாரிகள், கடந்த மாதம் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு சில டஜன் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி, எல்லாம் தீர்க்கப்பட்டதாகக் கருதினர். ஆனால் அவர்கள் 120,000 இரயில்வே தொழிலாளர்கள், அவர்கள் தங்களுக்குத் தகுதியானவற்றுக்காகப் போராடுவதில் உறுதியாக உள்ளனர் என்ற ஒரு விஷயத்தை கருத்திலெடுக்கவில்லை. திங்கள்கிழமை, 60,000 பொறியாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. சமிக்ஞை தொழிலாளர்களின் வாக்கு இந்த ஒப்பந்தங்களும் நிராகரிக்கப்படுவதற்கான வேகத்தை உருவாக்குகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க கிட்டத்தட்ட ஒருமனதாக வாக்களித்த இரயில்வே ஊழியர்கள், தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்காவில் பல தசாப்தங்களில் இது மிகவும் சக்திவாய்ந்த வேலைநிறுத்த இயக்கமாக இருக்கும். இது நாட்டின் சரக்கு போக்குவரத்து திறனில் 40 சதவீதத்தை உடனடியாக நிறுத்தும். மிக முக்கியமாக, இது மேற்கு கடற்கரை கப்பல்துறைகள் உட்பட, தொழிற்சங்கத்தாலும் வெள்ளை மாளிகையாலும் ஒப்பந்தம் ஏதுமின்றி பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் மற்ற தொழில்களில் உள்ள தொழிலாளர்களை தங்கள் சொந்த கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஊக்கமளிக்கும். இது அனைத்து இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் பெருநிறுவனங்கள், ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நிற்க முடியும் என்பதை நிரூபிக்கும்.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தயாராகுமாறு உத்தரவுகளை வழங்குவதற்கு பெருநிறுவன அமெரிக்கா இப்போது களத்தில் குதித்துள்ளது. வியாழன் அன்று, 300க்கும் மேற்பட்ட வணிகக் குழுக்கள் வேலைநிறுத்தத்தைத் தடுக்க பைடென் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டன. 'இந்த ஒப்பந்தங்கள் இப்போது அங்கீகரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது' என்றும், 'இரயில் நிறுத்தம் அமெரிக்க பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மேலும் பணவீக்க அழுத்தத்திற்கு வழிவகுக்கும்' எனக் கடிதம் கூறுகிறது.

கடிதம் தொடர்கிறது: “[ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த] செயல்பாட்டில் வெள்ளை மாளிகை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததால், செயல்முறையை சாதகமான திசையில் தொடர்ந்து நகர்த்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லையெனில், காங்கிரஸிடம் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கப்படும்”.

இது அமெரிக்க வர்த்தக சபை முதல் ஓஹியோ சோயாவிதை அசோசியேஷன் வரை அனைத்து பெருநிறுவன அமெரிக்காவும் ஒரே குரலில் பேசும் கடிதமாகும். வாஷிங்டனில் முன்னோடியில்லாத அரசியல் நெருக்கடி மற்றும் இரு கட்சிகளுக்கிடையேயான வன்முறை சூழல் இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கத்திடமிருந்து கீழிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக ஆளும் வர்க்கம் ஒன்றுபடுகிறது.

சமூகத்தில் அடிப்படையான பிளவுக் கோடு வர்க்கமே தவிர இனம், பாலினம் அல்லது தனிப்பட்ட அடையாளத்தின் வேறு எந்த வகைகளும் அல்ல என்பது தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் இயக்கத்தால் மேற்பரப்பிற்கு வெளிவரத் தள்ளப்படுகிறது.

'பொருளாதாரத்தின்' மீது வேலைநிறுத்தத்தின் தாக்கம் பற்றிய எச்சரிக்கை பாசாங்குத்தனத்துடன் துளிர்க்கிறது. வாஷிங்டனின் பணவியல் கொள்கைகள் மூலம், ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளுக்கு எதிராக வேலைவாய்ப்பின்மையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக, வேண்டுமென்றே பொருளாதார மந்தநிலையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு வர்க்க பொருளாதார தீவைப்பவர்களிடமிருந்து இது வருகிறது. உக்ரேனில் செல்வாக்கற்ற நேட்டோ போரினால் எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் பேரழிவுகரமான சமூகச் செலவு 'பொருளாதாரத்தின்' மீது ஏற்படுத்தும் கவலைகள் எதுவும் எழுப்பப்படவில்லை.

இந்த பிரச்சனைக்கான தீர்வு, எவ்வாறானாலும் எளிமையானது. அதற்கு நோய்வாய்ப்பட்ட நாட்களுக்கு ஊதியம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடுசெய்தல் மற்றும் பல்லாயிரக்கணக்கானோரை தொழில்துறையிலிருந்து வெளியேற்றிய மிருகத்தனமான வருகைக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். ஆனால், இரயில் பாதைகள் அமெரிக்காவில் அதிக இலாபம் தரும் தொழிலாக இருந்தாலும் கூட, அவர்கள் அதைக் கருத்தில் கொள்ள மறுக்கிறார்கள்.

தொழிலாளர்களின் ஒப்புதலுடனோ அல்லது இல்லாமலோ ஒப்பந்தம் 'நடைமுறைப்படுத்தப்படுவதை' உறுதிப்படுத்த பைடென் தலையிட வேண்டும் என்று கடிதத்தின் கோரிக்கை, ஒரு பெருநிறுவன சர்வாதிகாரத்தின் அணுகுமுறையாகும். ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களை பொறுத்தவரையில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களது சொந்த ஒப்பந்தங்களை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. தொழிலாளர்கள் சரியான முறையில் வாக்களிக்கவில்லை என்றால், வெள்ளை மாளிகை அல்லது காங்கிரஸ் 'சரியான' முடிவை திணிக்க தலையிடும். 'தொழிலாளர்களின் இந்த தலையீடு போதும்,' என்று கடிதம் நடைமுறையில் கூறுகிறது. 'எங்கள் இலாபம் ஆபத்தில் உள்ளது!'என்கின்றது.

பைடென் நிர்வாகம், தொழிலாளர்களின் பலத்தை நாசமாக்குவதற்கும் அவர்களின் முயற்சியைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியாக உழைத்த பெருநிறுவன சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலம் ஒப்பந்தங்களைச் சுமத்த முயல்கிறது. முடிவில்லா வேலைநிறுத்த காலக்கெடு நீட்டிப்புகள், இடைத்தேர்தலுக்குப் பின்னர் தாமதங்கள், தலையிட காங்கிரஸின் கையை வலுப்படுத்துவது மற்றும் வெளிப்படையான வாக்குச்சீட்டு மோசடியின் மூலம் கூட, பைடென் நிர்வாகம் வேலைநிறுத்தங்களுக்கு நடைமுறைரீதியான தடையை அமுல்படுத்த தொழிற்சங்க அமைப்பின் மூலம் முயற்சிக்கிறது.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் பெருகிய முறையில் இதனால் வெறுப்படைந்து, மேலும் இந்த தொழிற்சங்க அமைப்பு மதிப்பிழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் BMWED தலைவர் டோனி கார்டுவெல் புதனன்று எழுதிய கடிதத்திற்குப் பின்னணியில் இருந்தது. இது 'அனுமதியற்ற சட்டவிரோத வேலைநிறுத்தங்களை' ஆதரிக்கும் 'சிறு குழுக்களை' தாக்கியது. உண்மையில், இந்த கட்டத்தில் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது அல்ல. கார்டுவெல் மற்றும் பிற தொழிற்சங்க அதிகாரிகள் அதை அனுமதிக்க மறுப்பதால் மட்டுமே இது 'அனுமதிக்கப்படாததாக' இருக்கும்.

அந்தக் கடிதத்தின் உடனடி இலக்கு இரயில்வே தொழிலாளர் சாமானிய தொழிலாளர் குழு (RWRFC) ஆகும். இது துரோகங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் தொழிலாளர்களை பொறுப்பில் அமர்த்துவதற்கும் ஏற்பாடு செய்யும் இரயில்வே தொழிலாளர்களின் குழுவாகும். ஆனால், உண்மையில் கார்டுவெல் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் 'அனுமதி' அளித்துள்ள வேலைநிறுத்த நடவடிக்கைக்கான பெரும் உணர்வுக்கு எதிராக வசைபாடினார்.

இதற்கிடையில், BMWED ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரித்தால் (இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் செய்தார்கள்) தற்போதைய நிலையை நீட்டிக்க நிறுவனங்களுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை கார்ட்வெல் கடிதத்தில் ஒப்புக்கொண்டார். கார்டுவெல்லின் கூற்றுப்படி, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருவது 'சிறு குழுக்கள்' எனவும், அதே சமயம் தொழிலாளர்களின் விருப்பத்தை மீறி செயல்படும் தொழிற்சங்க அதிகாரிகள் 'சிறு குழுக்கள்' இல்லை என்கின்றார். ஒப்பந்தங்கள் 'அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நேரடியான அரசு தலையீடு வேண்டும் என்று பெருநிறுவன அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு எதிராக கார்ட்வெல்லிடமிருந்து இதேபோன்ற கோபமான கடிதத்தை எதிர்பார்க்க எந்த காரணமும் இல்லை.

வியாழன் இரவு கார்டுவெல்லுக்கு RWRFC ஒரு பதிலை வெளியிட்டது. 'வேலைநிறுத்தத்திற்கு 'அனுமதி' வழங்குவதற்கான ஒரே அதிகாரத்தைக் கோர உங்களுக்கு எது உரிமை அளிக்கிறது?' குழு கேட்டது. 'எங்களை மீறுவதும், என்ன செய்வது என்று எங்களுக்கு கூறுவதும் நீங்களும் உங்கள் சக அதிகாரிகளும் அல்ல.' “எங்கள் 120,000 சக பணியாளர்கள் சார்பாக, பின்வரும் வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்: உறுப்பினர்களின் விருப்பத்திற்கு நீங்கள் இணங்க விரும்பவில்லை என்றால், வழியை விட்டு வெளியேறுங்கள்.” என அக்கடிதம் முடிந்தது.

1937 இல், லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு தொழிற்சங்கத்தின் தன்மை 'தேசிய வருமானத்தின் பங்கீட்டில் அதன் உறவால் தீர்மானிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டார். தொழிற்சங்க அமைப்பு 'தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களில் இருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் வருமானத்தைப் பாதுகாக்க வேண்டுமா; அவர்கள் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக, ஊதிய உயர்வுக்கு எதிராக, வேலையில்லாதவர்களுக்கு உதவுவதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினால், 'அப்போது நாங்கள் ஒரு தொழிற்சங்கத்தை அல்ல ஒரு துர்நாற்றம் கொண்ட ஒரு அமைப்பைக் கொண்டிருப்போம்' என்று அவர் கூறினார்.

ட்ரொட்ஸ்கியின் நாட்களில் இருந்த மிகவும் பழமைவாத தொழிற்சங்கங்கள் கூட பொதுவாக இல்லாத இந்த வரையறை, இன்று அதிகாரத்துவக் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை முழுமையாக விவரிக்கிறது. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களுக்கு எதிராக பெருநிறுவன உயரடுக்கின் சார்பாக வேண்டுமென்றே வேலை செய்கிறார்கள்.

ஆனால் தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு உந்தித் தள்ளுவதால், இவ்அமைப்பின் அதிகாரம் சிதைந்து வருகிறது. இரயில்வேத்துறையினர் ஒப்பந்தங்களை குப்பைக்கு அனுப்பினாலும், அதிகாரத்துவத்தை ஒழித்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்ற ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வில் லெஹ்மனுக்கு கார்த் தொழிலில் சக்திவாய்ந்த ஆதரவு வளர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும், ஒரு வேலைநிறுத்த இயக்கம் உருவாகி வருகிறது. இது முதலாளித்துவ அரசாங்கங்களுடனான ஒரு வெளிப்படையான அரசியல் மோதலாக வளர்ச்சியடைந்து வருகிறது. பிரதம மந்திரி லிஸ் ட்ரஸின் வீழ்ச்சிக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு பிரித்தானியாவில் இரயில்வே தொழிலாளர்களும் கப்பல்துறை தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்கள் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தன. பிரான்சில், ஒரு தேசிய சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தம் மற்றும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வெகுஜன அனுதாப நடவடிக்கைகள் மில்லியனர் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனால் காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் அடக்குமுறையை எதிர்கொண்டன. முன்னதாக, தீவு நாடான இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களால் அதன் ஜனாதிபதி இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொழிலாளர்கள் வியாழன் கடிதத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தரவரிசை மற்றும் கோப்பு எதிர்ப்பை சமாளிக்க தொழிற்சங்கங்களை நம்ப முடியாது என்றால், பெருநிறுவன தன்னலக்குழு அதை மேலும் வெளிப்படையான, அப்பட்டமான அரசு அடக்குமுறைகளுடன் வலுப்படுத்த தயாராக உள்ளது. உண்மையில், வேலைநிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார 'இழப்புசகளுக்கு' நிறுவனங்கள் வழக்குத் தொடரும் திறனை பெரிதும் விரிவுபடுத்தும் ஒரு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

முழு அனுபவமும் இரயில் தொழிலாளர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் பல அடிப்படை படிப்பினைகளைக் உள்ளடக்கியுள்ளது.

முதலாவதாக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து, ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிற்சங்க அமைப்பிற்கு எதிராகவும், சுயாதீனமாகவும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு, தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்கள் உட்பட, சாமானிய தொழிலாளர் அமைப்புகளை நிறுவாமல் தொழிலாளர்களின் எதிர்ப்பானது ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாட்டைக் காண முடியாது.

இரண்டாவதாக, இது அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழு பெருநிறுவன பிரிவிற்க்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்களை நிறுத்துகிறது. இரயில் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, காங்கிரஸின் (ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சரி) தலையிடும் அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் ஒப்பந்தத்தில் வெள்ளை மாளிகையின் பங்கினால் வர்க்க ஆட்சியின் கருவியாக அரசின் பங்கு நேரடியாக வெளிப்படுகிறது. ஆனால் இதுவே அரசின் அடிப்படை இயல்பு. அது நடுநிலையான அமைப்பு அல்ல, மாறாக ஒரு பெருநிறுவன சர்வாதிகாரத்தின் கையாகும்.

மூன்றாவதாக, இரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராக பெருநிறுவன அமெரிக்காவின் அனைத்து ஐக்கிய தலையீடும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கைகளில் இருக்கும் வரை, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க முடியாது என்ற அடிப்படை பிரச்சினையை அம்பலப்படுத்துகிறது.

வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளாதார வாழ்க்கையை தனியார் இலாபத்திற்காக அல்லாது சமூகத் தேவையின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை எழுப்புகிறது. இதுதான் சோசலிச வேலைத்திட்டமாகும்.