இலங்கை தொழிலாளர்கள் வேலை இழந்த நெக்ஸ்ட் ஆடைத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் (GWAC) சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள நெக்ஸ்ட் ஆடைத் தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு நாடு முழுவதும் உள்ள இலங்கை ஆடைத் தொழிலாளர்களுக்கும், தனியார், அரச துறைகளில் உள்ள ஏனைய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் ஆலையின் (Next Manufacturing plant) நிர்வாகம், மே 20 அன்று திடீரென தொழிற்சாலையை மூடி, கிட்டத்தட்ட 1,500 தொழில்களை அழித்தது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் 21 மே 2025 அன்று WSWS செய்தியாளர்களுடன் பேசுகின்றனர்.

நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் நிறுவனம், கட்டுநாயக்கவிலிருந்து தொலைவில் ஆண்டிகம மற்றும் நவகத்தேகம ஆகிய இடங்களில் மேலும் இரண்டு தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதுடன் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியுள்ளது. இந்த தொழிற்சாலைகள் பிரிட்டனின் கடைகளில் விற்கப்படும் உயர்ரக நவநாகரீக உடைகளின் உற்பத்தியாளர்களில் ஒன்றான நெக்ஸ்ட் யுகே நிறுவனத்துக்குச் சொந்தமானவை ஆகும்.

நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் நிர்வாகமானது 'இயக்குவதற்காக ஏற்படும் அதிக செலவுகள்' காரணமாகவே தொழிற்சாலை மூடப்பட்டதாக கூறியது. நெக்ஸ்டின் மற்றைய இரண்டு தொழிற்சாலைகளில் உள்ள ஊழியர்கள், இதை தங்கள் தொழில்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதற்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலை அழிப்பை அறிவித்த இந்நிறுவனம், இலங்கையின் தொழிலாளர் தொழில் முடிவுறுத்துதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் படி 'உரிய இழப்பீடு' மற்றும் பிற சலுகைகளை வழங்குவதாகக் கூறியது. இது ஒரு தந்திரம் ஆகும்.

நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் தொழிலாளர் தொழில் முடிவுறுத்துதல் சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது. இந்தச் சட்டமானது மூடுவதற்கு முன்னதாக நிறுவனம் தொழில் ஆணையாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களை மேற்பார்வையிடும் முதலீட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறுகிறது.

தங்கள் வாழ்வாதாரம் திடீரெனவும் கொடூரமாகவும் அபகரிக்கப்பட்டதை எதிர்கொண்டுள்ள சில நெக்ஸ்ட் தொழிலாளர்கள், தினசரி குறைந்த விகித ஊதியம் வழங்கும் ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்களின் முகவர்கள், தங்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய நுழைவாயிலுக்கு வருகிறார்கள்.

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில், நெக்ஸ்ட்டின் வேலை நீக்கமானது ஆடைத் துறையில் வளர்ந்து வரும் பேரழிவின் ஒரு பகுதியாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும் சில்லறை விற்பனையாளர்கள் தொடர்ந்து குறைந்த விலை உற்பத்தியைக் கோருவதால், ஆடை உற்பத்தி செய்யும் நாடுகள் செலவுக் குறைப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

இந்த கடுமையான போட்டியின் செயல்முறை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இலங்கை உட்பட ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்ததன் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை 44 சதவீத வரியை எதிர்கொள்கிறது. இந்த வரி விதிப்பு ஏப்ரல் முதல் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், நிச்சயமற்ற தன்மை இன்னும் நீடிக்கிறது.

ஏப்ரல் தொடக்கத்தில், தென் மாகாணத்தின் வெலிகம மற்றும் ஹிக்கடுவவில் அமைந்துள்ள வோக் டெக்ஸ் தொழிற்சாலை (Vogue Tex factory), அமெரிக்க சுங்கவரி உயர்வின் தாக்கத்தைக் காரணம் காட்டி, 2,000 தொழிலாளர்களுக்கான புத்தாண்டு கொடுப்பனவை பாதியாகக் குறைத்தது. ஏனைய ஆடைத் தொழிற்சாலைகள் எதிர்கொள்வதைப் போலவே, ஏற்றுமதி ஆணைகள் போதாத நிலைமையை எதிர்கொள்வதாக வோக் நிர்வாகம் இப்போது கூறுகிறது. இந்தத் துறையில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்களுக்கு தொழிற்சாலை மூடல்கள், வேலை நீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், வேலைச்சுமை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.

கோபமடைந்த நெக்ஸ்ட் தொழிலாளர்கள், தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள தங்கள் தொழிற்சாலைக்கு அருகில் வைத்து ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் பேசுகையில், தொழிற்சாலை மூடலைக் கண்டித்ததுடன், தங்கள் தொழில்களைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால், நியாயமான இழப்பீடு வேண்டும் என்று கோரினர்.

ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், நிறுவனத்தின் பக்கமே நிற்கின்றது. மே 22 அன்று நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் நிறுவன முதலாளிகளைச் சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு முன் பேசிய பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, தொழிற்சாலையை மூடுவதற்கான நிறுவனத்தின் காரணங்களை எதிரொலித்தார்: “2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில் தொழிற்சாலை 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது,” என அவர் அறிவித்தார்.

இருப்பினும், ஊடக அறிக்கைகள், இங்கிலாந்தில் உள்ள நெக்ஸ்டின் தாய் நிறுவனம் அதன் ஆண்டு இலாபத்தை 10.1 சதவீதம் அதிகரித்துக்கொண்டு, 25 ஜனவரி 2025 வரையிலான ஆண்டில், “1.011 பில்லியன் பவுண்டுகள் (1.31 பில்லியன் டாலர்) வரிக்கு முந்தைய” இலாபத்தை ஈட்டியதாகக் காட்டுகின்றன. இது இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இந்த இராட்சத நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஏனைய தொழிலாளர்களிடமிருந்து சுரண்டப்பட்ட இலாபமாகும்.

நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் நிறுவனத்தின் வக்கீலைப் போலப் பேசிய ஜெயசிங்க, நிறுவனம் தொழிலாளர் தொழில் முடிவுறுத்துதல் சட்டத்தை மீறியுள்ளது என்ற உண்மையை மறைத்து, அது வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆட்குறைப்பு இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளதாகக் கூறினார். 1,500 தொழில்களை அழித்த நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் நிறுவனம், வேறு தொழில்துறைகளில் தொழிலாளர்களுக்கு வேலை பெற்றுக்கொடுக்க உதவும்! என்று அவர் வஞ்சத்தனமாக அறிவித்தார்.

கடந்த செப்டம்பரில், ஒரு வணிக மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, “முதல் முறையாக, உங்கள் நலன்களே எங்கள் நலன்களாக இருக்கின்றன. எங்கள் நலன்களே உங்களுடையதாக இருக்கின்றன,” எனத் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையிலான ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளருமான ஜெயசிங்க, திசாநாயக்கவின் பெருவணிக-சார்பு நிலைப்பாட்டை மீண்டும் கூறினார்.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) தலைவரான அன்டன் மார்கசும் அரசாங்கத்துடனும் நிறுவனத்துடனும் அணிசேர்ந்துள்ளார். பல நெக்ஸ்ட் தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கத்திலேயே உறுப்பினர்களாக உள்ளனர்.

மே 23 அன்று மார்கஸ் பிரதி அமைச்சர் ஜெயசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நெக்ஸ்ட் நிர்வாகம், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் பிரதி அமைச்சருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் ஊடகங்களுக்கு பேசிய மார்கஸ், இழப்பீடு பெறுவதற்கு அன்றி, வேலைகளைத் திரும்பப் பெறுவதிலேயே தான் ஆக்கறை காட்டுவதாக கூறினார்.

FTZGSEU தலைவரின் கூற்றுகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. மறுநாள், தொழிற்சங்கம் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று நெக்ஸ்ட் ஊழியர்கள் குழுவிடம் அவர் பரிந்துரைத்தார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களுடன் பேசிய வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளி, தானும் தனது சகாக்களும் நீதிமன்றங்களுக்குச் செல்வதை நிராகரித்ததாக கூறியதோடு இது தங்கள் வேலைகளை மீண்டும் பெற உதவாது என்று சரியாக சுட்டிக்காட்டினார்.

இறுதியில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள தொழிலாளர்களை வழிநடத்தும், நீண்ட நீதிமன்ற வழக்குகளில் தொழிலாளர்களை சிக்க வைக்கவே மார்கஸ் விரும்புகிறார். அதே நேரத்தில், மார்கஸ் போன்ற தொழிற்சங்க அதிகாரிகள், தொழிலாளர்களின் தொழில் கோரிக்கையை மிகக் குறைந்த இழப்பீட்டு-கொடுப்பனவுக்கு விற்றுத்தள்ளத் தயங்க மாட்டார்கள். நிறுவன முகாமையாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளைக் கைவிட்டு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது, இழப்பீட்டு கொடுப்பனவுகளை அலட்சியம் செய்யத் தயாராக இருப்பர்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அதன் கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்து, அரசு நிறுவனங்களை சுமார் அரை மில்லியன் தொழில்களை அழிக்கக் கூடியவாறு 'மறுசீரமைக்க' தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்த தனியார் துறை வேலை அழிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

தொழிலாள வர்க்கம் நெக்ஸ்டில் தங்கள் சக ஊழியர்களுக்காக தாமதமின்றி உதவ முன்வர வேண்டுமென ஆடைத் தொழிலாளர் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது. தொழில்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டம் உங்களின் போராட்டத்துடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மீதான தாக்குதல் என்பது அனைவரின் மீதான தாக்குதலாகும்! அதுவே தொழிலாளர்களிடையே ஐக்கியத்துக்கான கொள்கை வாசகமாக இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டு போராடத் தயாராக வேண்டும்.

வேலை வெட்டுக்கள், ஊதியக் குறைப்பு மற்றும் வேலை நிலைமை சீரழிப்பு வேண்டாம்!

அனைத்து தொழிற்சாலை மூடல்களையும் எதிர்த்து, தொழிற்சாலை உள்ளமர்வு உட்பட தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகுங்கள்.

முதலாளிகளாலும் தொழிற்சங்க அதிகாரிகளாலும் தீர்மானிக்கப்படும் அற்ப இழப்பீட்டை நிராகரிக்கவும். புதிய தொழில்கள் வழங்கப்படும் வரை முழு ஊதியத்துடன் கூடிய இழப்பீடு கோருங்கள்.

முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுமுறை. ஏற்புடைய வீட்டுவசதிகளும், சுகாதார வசதிகளும் வேண்டும்.

FTZGSEU அல்லது ஏனைய தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவார்கள் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்க முடியாது. ஜே.வி.பி. தலைமையிலான அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் இந்த வேலை அழிப்பு குறித்து முற்றிலும் மௌனமாக உள்ளதுடன் கம்பனிகளை ஆதரிக்கின்றது. பல ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள், அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடும் அமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு நெக்ஸ்ட் தொழிலாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இலங்கையில் உள்ள ஆடைத் தொழிலாளர்கள், தனியார் மற்றும் அரசுத் துறையில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து, ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் வேலைத் தளத்திலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். நிறுவனங்களதும் அரசாங்கத்தினதும் முகவர்களாக மாறியுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களை இந்தக் குழுக்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட நெக்ஸ்ட் தொழிலாளர்களைப் பாதுகாக்க, ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற வர்க்க நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியாக முடிவு செய்து ஒழுங்கமைக்குமாறு தொழிலாளர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இராட்சத சில்லறை வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உட்பட பெருவணிக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் எதிரான போராட்டமானது ஒரு சர்வதேசப் போராட்டமாக இருப்பதோடு, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதன் மூலம் மூலம் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பிற்கும், தேசிய ஆளும் உயரடுக்கிற்கும் எதிரான ஒரு நனவான அரசியல் போராட்டத்தில் மட்டுமே, தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இது, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது ஆகும்.

Loading