ஜனாதிபதி பைடென் கோவிட்-19 இல் இருந்து ‘சுதந்திரம்’ அடைந்ததாக அறிவித்து ஒரு வருடம் ஆகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு வருடத்திற்கு முன்பு, ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளி பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட முகக்கவசம் அணியாத நபர்களுடனான கூட்டத்தில் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் கொரோனா வைரஸில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவித்தார்.

அந்த நேரத்தில் அவர், “இன்று, ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கையுடன் கூறலாம்: அமெரிக்கா ஒன்றாக பழைய நிலைமைக்கு திரும்புகிறது… இருநூற்று நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், தொலைதூர அரசனிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை அறிவித்தோம். இன்று, ஒரு கொடிய வைரஸிலிருந்து நமது சுதந்திரத்தை அறிவிப்பதற்கு முன்பை விட நெருக்கமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கையில் பைடென் இதை ஒப்புக்கொண்டார், “கோவிட்-19 க்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக கூற முடியாது. எங்களுக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன.”

பின்னர் அவர் தனது தடுப்பூசி-மட்டும் மூலோபாயத்தை போற்றி, “நமது தீவிரமான தடுப்பூசி முயற்சிக்கு நன்றி, இந்த வைரஸூக்கு எதிராக நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் நம் வாழ்க்கையை வாழலாம், நமது குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம், நமது பொருளாதாரம் மீண்டும் முன்னேறுகிறது” என்று கூறினார்.

அவரது பேச்சின் சாராம்சம், சீனா சமீபத்தில் ஷாங்காயில் சாதித்ததைப் போல, வைரஸை முழுமையாக நீக்கி சாதனை செய்துள்ளதாக கூறுவதற்கு ஏற்றதல்ல. நேரடி கற்பித்தலுக்கு பள்ளிகளை முழுமையாக மீளத்திறப்பது உட்பட அமெரிக்கப் பொருளாதாரத்தை முழுமையாக திறப்பதற்குத் தடையாக இருக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க தணிப்பு நடவடிக்கைகளையும் அமெரிக்கா கைவிட்டு வருவதை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டுவர அவர் விரும்பினார்.

ஒரு வருடத்திற்குப் பின்னர், பைடென் நிர்வாகம் அவரது முன்னோடி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி வைத்ததை நிறைவேற்றியுள்ளது, அதாவது, வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் மற்றும் அதன் தாக்கத்தை தீர்மானிக்க தேவையான எந்தவித அறிக்கை மற்றும் அளவீடுகளையும் அகற்றி, அதை சமூகத்தில் ஒரு நிரந்தர அங்கமாக திறம்பட அறிவிக்கிறது.

ஏப்ரல் 19, 2022, செவ்வாய்க்கிழமை, பிலடெல்பியாவில் உள்ள பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிந்த பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள். (AP Photo/Matt Rourke)

பைடென் கடந்த ஆண்டு இவ்வாறு குறிப்பிட்டார், “வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு ஆட்கள் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர். நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும், சாதனை அளவிலான பொருளாதார வளர்ச்சியையும் நாம் காண்கிறோம், மேலும் உலகிலேயே சிறந்த நாடாக நாம் இருக்கிறோம் என்றும் நான் சேர்த்து கூறலாம். இன்று, ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கையுடன் கூறலாம், அமெரிக்கா ஒன்றாக பழைய நிலைமைக்கு திரும்புகிறது… இன்று, வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றாலும், இது நமக்குத் தெரியும், இது இனி நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தாது, மேலும் இனி நம் நாட்டையும் முடக்காது.”

வேண்டுமென்றே பொய் கூறியது தான் பைடெனின் தவறு என்பது தெரிகிறது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மார்ச் 13, 2021 அன்று அது கூறியதை நினைவுபடுத்தியது, அதாவது கோவிட்-19 ஐ தோற்கடித்து, ஜூலை 4 ஆம் தேதிக்குள் ‘இந்த வைரஸிலிருந்து நாம் சுதந்திரம் அடைவோம் என்பதை குறிக்கும்’ போக்கில் நாடு இருந்ததாக அமெரிக்கர்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் தவறாக வழிநடத்தக்கூடிய, திரித்துக்கூறப்பட்ட முழுமையான பொய்களாகும்.

தடுப்பூசி மட்டுமே மூலோபாயம், வைரஸை தடையின்றி சமூகங்கள் முழுவதும் பரவ அனுமதிப்பதானது, புதிய மற்றும் அதிக தொற்றும் தன்மையுள்ள மற்றும் ஆபத்தான விகாரங்கள் உருவெடுக்கும் அபாயத்தை உருவாக்கியது என சர்வதேச பொது சுகாதார நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்.

பைடெனின் குறிப்புக்களை, முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மே 1, 2003 அன்று USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வழங்கிய ‘பணி செய்து முடிக்கப்பட்டது’ (‘Mission Accomplished’) என்ற உரையுடன் ஒப்பிடுவது வெளிப்படையானது மற்றும் தகவல் நிறைந்தது. டிசம்பர் 15, 2011 வரை போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்படவில்லை, இது பிராந்தியத்தின் மக்களுக்கு ஏற்படும் பயங்கரமான மாற்றங்களை பல தலைமுறையினருக்கு நீடிக்கும் எட்டு ஆண்டு கால மோதலாக இருந்தது.

அமெரிக்கா, ஈராக் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் 2013 ஆம் ஆண்டு பகுப்பாய்வு, மார்ச் 1, 2003 முதல் ஜூன் 30, 2011 வரையிலான காலகட்டத்தில் இந்த மோதலின் நேரடி விளைவாக 405,000 இறப்புக்கள் ஏற்பட்டிருந்ததாக மதிப்பிட்டுள்ளது. லான்செட் ஆய்வு, இறந்த பொதுமக்கள் மற்றும் போராளிகளின் எண்ணிக்கை 650,000 எனக் கூறியது. இறப்பு கணக்கெடுப்பும் பொது சுகாதார அளவீடுகளும் இறப்பு எண்ணிக்கை உச்சபட்சமாக 2.4 மில்லியனுக்கு அதிகம் என்று கூறின.

கோவிட்-19 இன் விளைவுகளை பொறுத்தவரை அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் இன்னும் மோசமாக இருக்கலாம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸில் இருந்து சுதந்திரம் அடைந்துவிட்டதாக பைடென் இழிவாக பிரகடனம் செய்தபோது, அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புக்களின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 625,000 ஐ எட்டியிருந்தது. ஓராண்டு கழித்து, மேலும் 418,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். எக்னாமிஸ்ட் பத்திரிகையின் ‘அதிகப்படியான இறப்பு’ மாதிரியின் படி, கடந்த 365 நாட்களில் அரை மில்லியனுக்கு அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர்.

2021 இலையுதிர் காலத்தில் நேரடி கற்பித்தலுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்கான பைடென் நிர்வாகத்தின் பிரச்சாரம் நாட்டின் இளம் பருவத்தினரிடையே மிகப்பரந்த பாரிய நோய்தொற்றுக்களுக்கு வழிவகுத்தது. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு முறையாவது பாதிக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்கா முழுவதும் டெல்டா மாறுபாடும் மற்றும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பல மறுவிகாரங்களும் உருவெடுப்பதற்கு தூண்டுதலளித்தது.

வைரஸிலிருந்து ‘சுதந்திரம்’ அடைந்ததாக பைடென் உரை வழங்கியபோது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தற்காலிக தரவு, குழந்தைகளிடையே ஏற்பட்ட கோவிட் தொடர்பான இறப்புக்கள் 500 க்கு குறைவாக இருப்பதாக கூறியது. இருப்பினும், ஆகஸ்ட் 2021 க்குப் பின்னர், குழந்தைகளிடையேயான இறப்புக்கள் வேகமாக அதிகரித்து, 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் 1,250 ஐ எட்டியது. தொற்றுநோய்களின் போது 90,000 க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க கல்விச்சாலையின் கூற்றுப்படி, அதன் பின்னர் மேலும் 200 குழந்தைகள் இறந்துள்ளனர். ஆயினும்கூட, CNN ஜனாதிபதி டவுன் ஹால் பேச்சில் 8 வயது சிறுமிக்கு கோவிட்-19 நோய்தொற்று பரவுவதற்கான ஆபத்து குறைவு என பைடென் மீளுறுதி செய்ததான அவரது தீர்க்கமான பொய் குறித்து இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் ஒரு முறை கூட அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

மேலும், பொதுமக்களின் நல்வாழ்வை விட வணிக இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிக்கும் இந்த குற்றவியல் கொள்கைகளினால் 200,000 அமெரிக்க குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். 18 முதல் 64 வயதுக்குட்பட்ட பிரிவினரிடையே கால் மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட 68,000 பேர் 50 வயதிற்குட்பட்டவர்கள். டெல்டா மாறுபாடு இந்த வயதினரிடையே குறிப்பாக ஆபத்தானது. பைடெனின் உரையில் இருந்து பெப்ரவரி 2022 வரை, அமெரிக்காவில் மரணத்திற்கான இரண்டாவது அல்லது மூன்றாவது பிரதான காரணியாக கோவிட் இருந்தது.

இதற்கிடையில், முன்னர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக கருதப்படுபவர்களிடையே கோவிட் தொடர்பான இறப்புக்கள் அதிகரித்து வருகின்றன. 2022 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், 50,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள, நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் திறன் கொண்ட விகாரமாக உருவெடுத்துள்ள ஓமிக்ரோனால் உருவான கோவிட்-19 நோயால் இறந்தனர். தடுப்பூசிகள் ஒப்பீட்டளவில் குறுகிய கால நோயெதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது கடுமையான நோயிலிருந்து நியாயமான பாதுகாப்பைப் பெற பலமுறை பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதை அவசியமாக்குகிறது.

SARS-CoV-2 ஆல் மறுதொற்று ஏற்படுவது மிகவும் பொதுவானது என்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன, மேலும் எந்தவொரு தணிப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், மக்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்திய மக்கள்தொகை ஆய்வுகள், முந்தைய தொற்றுடன் ஒப்பிடும்போது, மறுதொற்று இறப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை குறிக்கிறது. இந்த அபாயங்கள் முன்னர் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பொருந்தும்.

இந்த நிலை நெடுங்கோவிட் பாதிப்பு என நன்கு அறியப்படுகிறது, அதாவது நுரையீரல், இதயம், இரத்தக்குழாய் மற்றும் பிற உறுப்பு அமைப்புக்களை பொதுவாக பாதிக்கும் பல அமைப்பு சீர்குலைவை குறிக்கும். சோர்வு, மூட்டு வலி மற்றும் மூளைச் செயலிழப்பு போன்ற பொதுவான அறிகுறிகளைத் தவிர, முக்கியமான அமைப்புகளுக்கு ஏற்படும் சேதம் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கோவிட் நோய்க்கு பிந்தைய நோயறிகுறிகள் தோராயமாக ஐந்தில் ஒருவர் முதல் நான்கில் ஒருவரை பாதிக்கலாம், மேலும் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரிடையே மிகவும் பலவீனப்படுத்தும் நெடுங்கோவிட் நோய் இருப்பதைக் காணலாம்.

செயின்ட் லூயிஸில் உள்ள மருத்துவத்திற்கான வாஷிங்டன் பல்கலைக்கழக பள்ளியைச் சேர்ந்தவரும், SARS-CoV-2 இன் மறுதொற்று குறித்த VA ஆய்வின் இணை ஆசிரியருமான டாக்டர். ஜியாத் அல்-அலி இவ்வாறு குறிப்பிட்டார், “முதல் தொற்று உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், மறுதொற்று ஏற்பட்டுள்ளவர்கள் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் பல குறிப்பிட்ட விளைவுகளின் அதிக ஆபத்துக்களை வெளிப்படுத்தியதை நாங்கள் எடுத்துக் காட்டினோம். தடுப்பூசி போடாதவர்கள், முதல் அளவு தடுப்பூசி மட்டும் பெற்றவர்கள் அல்லது இரண்டாவது நோய்தொற்றுக்கு முன்னர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி அளவுகளைப் பெற்றவர்கள் உட்பட துணைக் குழுக்களில் ஒட்டுமொத்தமாக ஏற்படும் ஆபத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. மறுதொற்றின் தீவிரமான மற்றும் பிந்தைய கடுமையான கட்டத்தில் அனைத்து காரணங்களிலான இறப்பு மற்றும் பாதகமான உடல்நல விளைவுகளின் தீவிர அபாயங்களை மறுதொற்று அதிகரிக்கிறது என்பதை கண்டுபிடிப்புக்கள் காட்டுகின்றன.”

பணவீக்கம் உயர்ந்து எரிவாயு மற்றும் உணவு விலைகள் ஏறும் போது அமெரிக்கர்கள் ஒரு பேரழிவு பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்,
COVID-19 இலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தேவையற்ற மரணத்தை நாடு குறித்திருக்கையில் 727 அமெரிக்க பில்லியனர்கள் மேலும் 1.7 டிரில்லியன் டாலர் செல்வத்தை குவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், 22.5 பில்லியன் டாலர் கோவிட் நிதி கோரிக்கைக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்காத வரை (பில்லியனர்களின் சொத்து அதிகரிப்பில் 60-இல் ஒரு பங்கிற்கு குறைவாக), அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் ஆன்டிவைரல்கள் போன்ற சிகிச்சைகளுக்கு பணம் இருக்காது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில் தொற்றுநோய்கள் மற்றும் இறப்புக்களின் பாரிய அலைகளுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடென் நிர்வாக அதிகாரிகள் முன்கணித்திருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் வசந்த காலத்தில் கூறியது. காப்பீடு செய்யப்படாதவர்களும், குறைந்த காப்பீடுள்ளவர்களும் ஆதரவற்றவர்களாக விடப்படுவார்கள்.

மே 9, 2022 அன்று, கோவிட்டுக்கும், மற்றும் மில்லியன் கணக்கான உக்ரேனியர்களை உள்நாட்டிற்குள்ளும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்வதற்கு நிர்பந்தித்தது உட்பட, கணிசமான எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு வழிவகுத்ததான ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய பைடென் வேண்டுகோள் விடுத்தார். உலகெங்கிலும் பாரிய சமூகப் பேரழிவுகளை உருவாக்கும் தற்போதை எரிவாயு மற்றும் உணவு நெருக்கடியிலும் இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

போர் நிதி குறித்து பைடென் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “உக்ரேன் போராளிகளுக்கு உதவ காங்கிரஸில் பெரும்பான்மையினரால் எனக்கு வழங்கப்பட்ட வளங்களை நான் கிட்டத்தட்ட தீர்த்துவிட்டேன். போர்க்களத்தில் உக்ரேனின் வெற்றிக்கு இந்த உதவி முக்கியமானது… காங்கிரஸ் தலைவர்களுடனான எனது உரையாடல்களில், நான் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு வலுவான ஆதரவு இருக்கும் மற்றும் காங்கிரஸ் எனது முன்மொழிவை கணிசமாக நிறைவேற்றும் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” எந்த எதிர்ப்பும் இல்லாமல், காங்கிரஸ் 54 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீட்டிற்கு உறுதியளித்துள்ளது.

கோவிட் நிதிக்காக காங்கிரஸூக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், பைடென், “சரியான நேரத்தில் கோவிட் நிதி வழங்கப்படவில்லையானால், அதிகமான அமெரிக்கர்கள் தேவையில்லாமல் இறந்துவிடுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கும், ஒரு வருடத்திற்கு முன்னர் கோவிட்-19 இல் இருந்து ‘சுதந்திரம் அடைந்ததாக அறிவித்த அவரது பிரகடனத்திற்கும்’ உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட ஊடகங்களோ அல்லது காங்கிரஸில் உள்ள எவருமோ அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

சீனாவைத் தவிர அனைத்து பெரிய நாடுகளிலும் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்படாமல் உலகளவில் கடும் சீற்றத்துடன் பரவி வரும் நிலையில், காங்கிரஸில் நடந்த சமீபத்திய விசாரணைகளின்படி, தொற்றுநோய்க்கு எதிர்கால நிதியுதவி எதுவும் இருக்காது, இது பல ஆண்டுகளுக்கு மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும், இது அமெரிக்காவில் மேலும் உயிர் மற்றும் ஆரோக்கிய இழப்புக்கு வழிவகுக்கும்.