மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியாழனன்று, அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலர் (HHS) சேவியர் பெசெரா, குரங்கம்மை நோயை ஒரு பொது சுகாதார அவசரநிலை என்று முறையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, மே 18 அன்று அமெரிக்காவில் முதல் குரங்கம்மை நோய்தொற்று கண்டறியப்பட்டு இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் மிகத் தாமதமாகவும் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஜூலை 23 அன்று இதை சர்வதேச அக்கறைக்கான பொது சுகாதார அவசரநிலை (Public Health Emergency of International Concern - PHEIC) என்று அறிவித்து 12 நாட்களுக்குப் பின்னரும் வெளிவருகிறது.
குழப்பமான வகையில், இந்த அறிவிப்பையும், குரங்கம்மை நோயின் கடுமையான ஆபத்துக்களையும் குறைத்துக் காட்டுவதற்கு தெளிவாக முயற்சி செய்யப்பட்டது, அதாவது வெள்ளை மாளிகை யூடியூப் சேனல் மற்றும் ஒவ்வொரு ஒளிபரப்பு செய்தி நிலையமும் இது தொடர்புபட்ட நேரலை செய்தியாளர் சந்திப்பைக் காட்டாமலிருக்கத் தீர்மானித்தன. கோவிட்-19 நோய்தொற்று குறித்து டொனால்ட் ட்ரம்ப் பிரயோகித்த அதே அணுகுமுறையை, கடந்த மூன்று மாதங்களாக, பைடென் நிர்வாகமும் பெருநிறுவன ஊடகங்களும் குரங்கம்மை நோய்க்கும் பின்பற்றினர், மார்ச் 19, 2020 அன்று இது குறித்து பத்திரிகையாளர் பாப் வூட்வார்டுக்கு ட்ரம்ப் இவ்வாறு விளக்கினார்: “நான் எப்போதும் இதைக் குறைத்துக் காட்டவே விரும்பினேன். நான் இன்னும் இதை குறைத்துக் காட்டவே விரும்புகிறேன். ஏனென்றால் பீதியை உருவாக்க நான் விரும்பவில்லை.”
ட்ரம்ப், நிச்சயமாக, அவரது வோல் ஸ்ட்ரீட் கூட்டாளிகளின் நிதி நலன்களைப் பாதிக்கும் சந்தை பீதியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். குடியரசுக் கட்சியினரைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் நிதிய தன்னலக்குழுவிற்கு முடிந்த அளவு சேவை செய்வதால், பைடெனுக்கும் இதேபோன்ற கவலைகள் உள்ளன. ஆனால் இந்த வார்த்தையை சாதாரண அர்த்தத்தில் பார்த்தால், இரண்டாவது தொற்றுநோயைத் தடுப்பதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்கப்படாத நிலையில், மக்களிடையே பரவலான பீதி ஏற்படுவதற்கு ஆழமான காரணங்கள் உள்ளன. அவசர நடவடிக்கை தேவை, ஆனால் அதற்கான உத்வேகம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எழ வேண்டும். ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவினரும் இது குறித்து விரலை உயர்த்த மாட்டார்கள்.
ஓமிக்ரோனின் BA.5 துணைமாறுபாடு சமீபத்தில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களின் உலகளாவிய எழுச்சியை தூண்டியதைப் போலவே, குரங்கம்மை நோயும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகளவில் 22 மில்லியன் மக்களை கொன்று குவித்ததும், பல மில்லியன் மக்களை ஊனப்படுத்தியதுமான கோவிட்-19 தொற்றுநோய் பேரழிவுகரமாக தவறாக கையாளப்பட்ட நிலையில், குரங்கம்மை நோயைப் பொறுத்தவரை ‘அவசரகால நிலை’ பற்றிய முறையான அறிவிப்புக்கள் இருந்தபோதிலும், வரவிருக்கும் மாதங்களில் குரங்கம்மை நோயும் பேரழிவை ஏற்படுத்த அனுமதிக்கப்படும் என நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.
வியாழன் நிலவரப்படி, உலகளவில் குரங்கம்மை நோய் உள்ளூர் நோயாக இல்லாத குறைந்தது 80 நாடுகளில் இப்போது 26,250 உறுதிப்படுத்தப்பட்ட குரங்கம்மை நோய்தொற்றுக்கள் உள்ளன, மேலும் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 1,268 ஆக உள்ளது. உலகளவில் பரிசோதனைகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், இந்த ஆபத்தான புள்ளிவிபரங்கள் கூட குறிப்பிடத்தக்க அளவு குறைவானவை என்றே கருதப்பட வேண்டும்.
குரங்கம்மை நோய், 1980 இல் அழிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஒத்த அறிகுறிகளைக் கொண்ட ஆபத்தான நோய் என்றாலும் அதை விட குறைந்த கடுமையானது. இந்த வைரஸ் உடலின் எந்தப் பகுதியிலும் புண்களை ஏற்படுத்துகிறது, இதனால் குருட்டுத்தன்மை, மூச்சுத் திணறல் மற்றும் சிலருக்கு முகம் அல்லது உடலின் பிற பாகங்களில் வடுக்கள் ஏற்படலாம். நோயாளிகள் பெரும்பாலும் குரங்கம்மை நோயின் புண்களின் வளர்ச்சியை தங்கள் வாழ்வின் மிக வேதனையான அனுபவமாக விவரிக்கிறார்கள், இதனால் அவர்கள் தூங்கும் திறனை அல்லது ஆழ்ந்த வேதனையுடன் கூட அடிப்படை உடல் செயல்பாடுகளைச் செய்யும் திறனை இழக்கிறார்கள். இந்த கடுமையான துன்பத்தை முதன்மையாக நிர்வகிக்க, மொத்த நிகழ்வுகளில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிப்பது தேவையாகிறது.
வரலாற்று ரீதியாக, இப்போது உலகம் முழுவதும் பரவி வரும் குரங்கம்மை நோய்தொற்றின் காரணமான இறப்பு விகிதம், கோவிட்-19 நோய்தொற்றைப் போல தோராயமாக ஒரு சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வு, இதன் தற்போதைய உலகளாவிய இனப்பெருக்க விகிதம் (R-value) தோராயமாக 1.29 என மதிப்பிட்டுள்ளது, அமெரிக்காவில் இந்த விகிதம் 1.55 ஆக உள்ளது. குரங்கம்மை உள்ளூர் நோய் அல்லாத அனைத்து நாடுகளில் இது மிக உயர்ந்த மதிப்பாகும்.
புண்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் உட்பட ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கலாம், மற்றும் உறுதியான வெளிப்பாட்டிற்கு பின்னர் இந்த காலம் முழுவதும் நோயாளி தனிமையில் இருக்க வேண்டும். இந்த வைரஸ், தூசுப்படலம், உமிழ்நீர்த் துளிகள் மற்றும் வைரஸ் தாங்கிகள் (fomites) மூலம் பரவுகின்றது, அதிலும் தோலிலிருந்து தோலுக்கான தொடர்பு மற்றும் சுவாசத் துளிகள் மூலம் பரவுவது அதன் ஆதிக்க முறைகளாக உள்ளன. குரங்கம்மை நோய் அசுத்தமான துணிகள் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுவது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு முக்கிய கவலை நிலவுகிறது, அதேவேளை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஜூலை 12 அறிக்கை, இந்த வைரஸ் ‘நீர், மண் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகளில் நாட்கள் முதல் வாரங்கள் வரை நிலையாக இருக்கலாம்’ எனக் குறிப்பிட்டது.
பெருநிறுவன ஊடகங்கள், குரங்கம்மை நோய் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு மட்டுமே தொற்றும், அதாவது இது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (sexually transmitted infection-STI) என்ற உட்குறிப்புடன் பொய்யாக சித்தரித்தாலும், உண்மையில் இது ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சுறுத்துகின்ற ஒரு தொற்றுநோயாகும். குரங்கம்மை நோய் பற்றிய 2016 ஆம் ஆண்டு ஆய்வு, ஒட்டுமொத்த நோய்தொற்றுக்களில் ஆண்களுக்கு 57 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக கண்டறிந்தது. இந்த நோய் ஆரம்பத்தில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மத்தியில் பரவியது முற்றிலும் தற்செயலானது, மேலும் இது இப்போது பாலியல் அல்லாத பரவும் வழிகள் மூலம் சமூகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த விஞ்ஞான உண்மைகளைப் புறக்கணித்து, தீவிர வலதுசாரிகள் உடனடியாக ஓரினச்சேர்க்கையாளர்களையும் இருபாலின உறவாளர்களையும் பலிகடா ஆக்க பாசிச செல்லாட்சியைப் பயன்படுத்துகின்றனர்.
குரங்கம்மை நோயின் பல வழிகளில் பரவும் தன்மையாலும், இந்நோய்தொற்றின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு மிக மோசமாக குறைவாக எடுக்கப்படும் முயற்சிகளாலும், இந்த தொற்றுநோய் வேகமாகப் பரவும் திறனைக் கொண்டுள்ளது, அதிலும் குறிப்பாக கோடை அல்லது குளிர்கால இடைவேளைக்கு பின்னர் சர்வதேச அளவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அது மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, அமெரிக்காவில் ஐந்து பேர் உட்பட உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே 96 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் உள்ளன, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் குழந்தைகள் வரும் வாரங்களில் உலகம் முழுவதும் உள்ளக பள்ளி அமைப்புக்களில் ஒன்றுகூட உள்ளனர். குழந்தைகள் வைரஸூக்கு எதிரான எந்த தடுப்பூசிக்கும் தகுதியற்றவர்கள் என்பதுடன், வரலாற்று ரீதியாக பெரியவர்களை விட குழந்தைகள் தான் கடுமையாக நோய்வாய்ப்படக்கூடிய மற்றும் இறக்கக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டுள்ளனர்.
இந்த வைரஸ், தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்கள் மூலமாக ஏற்கனவே பரவி வருகிறது, மிச்சிகனின் டெட்ராய்ட் நகருக்கு வெளியே உள்ள ஸ்டெர்லிங் ஹைட்ஸ் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பணிபுரியும் ஒரு வாகனத் தொழிலாளி, இந்த வாரம் சக ஊழியர் ஒருவருக்கு குரங்கம்மை நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) தெரிவித்தார். ஆனால், ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் (UAW) சங்கமும், நிறுவன நிர்வாகமும் தொற்றுநோயை மூடிமறைக்க முயற்சிக்கின்றன.
வைரஸ் மேற்பரப்பில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழும் திறன் கொண்டது என்பதை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு வாகன ஆலை, பண்டகசாலை, மளிகைக் கடை மற்றும் எரிவாயு நிலையம் ஆகியவையும், அத்துடன் பிற பணியிடங்களும் இந்த நோய் விரைவில் பரவுவதற்கான முக்கிய மையங்களாக மாறக்கூடும். தொழிலாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவைப்படும் நீண்ட தனிமைப்படுத்தல் காலத்தை பெருவணிகத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது, அது தொழிலாளர்களுக்கு நோய் தொற்று இருக்கும்போது அல்லது பொருளாதார அழிவை எதிர்கொள்ளும்போது தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தும்.
கோவிட்-19 நோய்தொற்று அலட்சியத்துடனும், பொறுப்பற்ற வகையிலும் மற்றும் திவாலான தடுப்பூசி-மட்டும் அணுகுமுறையுடனும் கையாளப்பட்ட அதே விதத்தில்தான், குரங்கம்மை நோயும் கையாளப்படும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனமான நோர்டிக் பவேரியன் (Nordic Bavarian), உலகளவிலான பாரிய விநியோகத்திற்கு அனுமதிக்க அறிவுசார் சொத்துரிமைகளை கைவிட மறுத்துவிட்டது, எனவே, மே மாதம் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அவர்களின் பங்கு மதிப்பை கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்த்தியுள்ளது. பரிசோதனைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வேண்டுமேன்றே தடை உண்டாக்கப்பட்டுள்ள நிலையில், தரவு அறிக்கை மிகவும் மோசமாக உள்ளது, இது நோய்தொற்றின் உண்மையான பரவும் விகிதத்தை பெரும்பாலும் அறிய முடியாத நிலையை உருவாக்குகிறது.
வியாழக்கிழமை பொது சுகாதார அவசரநிலை பிரகடனத்திற்கு முன்னர், பைடென் நிர்வாகம் ரோபெர்ட் ஃபென்டனை (Robert Fenton) தேசிய குரங்கம்மை நோய் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது, அத்துடன் டாக்டர் டிமெட்ரே டஸ்கலாகிஸ்ஸை (Dr. Demetre Daskalakis) துணை ஒருங்கிணைப்பாளராக நியமித்தது. ஃபென்டனுக்கு மருத்துவம் அல்லது பொது சுகாதாரத்தில் எந்தப் பின்னணியும் இல்லை, மேலும் இந்த நியமனத்திற்கு முன்பு மத்திய அவசரநிலை மேலாண்மை முகமையின் (Federal Emergency Management Agency-FEMA) பிராந்திய இயக்குநராக அவர் இருந்தார். அதேவேளை, டாக்டர். டஸ்கலாகிஸ் எச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்புப் பணிகளில் பொது சுகாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், கோவிட்-19 மற்றும் குரங்கம்மை நோய்தொற்றுக்களால் ஏற்படும் அபாயங்களை அவர் ஏற்கனவே குறைத்து மதிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் பரிசோதனைகள் முற்றிலும் மேற்கொள்ளப்படாத நிலையில் SARS-CoV-2 நோய்தொற்றுக்கள் ஏற்கனவே கண்டறியப்படாமல் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், ஜனவரி 29, 2020 அன்று, நியூயோர்க்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் டஸ்கலாகிஸ் பேசுகையில், “ஒரு நியூயோர்க்கராக இருங்கள் என்று விஞ்ஞானம் வேடிக்கையாக கூறுகிறது. நகரத்தின் எந்தப் பகுதியையும் தவிர்க்க எந்த காரணமும் இல்லை” என்று கூறினார். சில வாரங்களுக்குள், இந்த நகரம் தொற்றுநோயின் உலகளாவிய மையமாக மாறியது மற்றும் உலகில் உச்சபட்ச கோவிட்-19 இறப்பு விகிதங்களை எதிர்கொண்ட பகுதிகளில் இது ஒன்றாக நீடித்தது. மிக சமீபத்தில் ஜூன் 2022 இல், குரங்கம்மை நோய்தொற்றுக்கள் அமெரிக்காவில் அதிரடியாக அதிகரிக்கத் தொடங்கியபோது, ‘அமெரிக்க மக்களுக்கு மொத்தத்தில் ஆபத்து குறைவாக உள்ளது’ என்று டஸ்கலாகிஸ் பொய்யாகக் கூறினார்.
பெருநிறுவன ஊடகங்களில், குரங்கம்மை நோயை உள்ளூர் நோயாக அல்லது விரைவில் நிரந்தர நோயாக அது பரவக்கூடியது என சித்தரிக்கும் முயற்சி உள்ளது. அவசரநிலை குறித்த வியாழக்கிழமை பிரகடனம் பற்றிய கட்டுரையின் விளக்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ் ‘பல வல்லுநர்கள் தொற்றுநோயை கட்டுப்படுத்துவது இனி சாத்தியமில்லை என்று அஞ்சுகின்றனர்’ என்று எழுதியது. ஆகஸ்ட் 1 அன்று, டெய்லி பீஸ்ட் இணைய தளம், ‘அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குரங்கம்மை நிரந்தர நோய்தொற்றாக மாறுவதைத் தடுக்க மிகவும் தாமதமாகலாம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
ஜூலை 17 அன்று, ‘Face the Nation’ CBS நிகழ்ச்சியில் ஒரு ஞாயிறு காலை முக்கிய நேர்காணலில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) முன்னாள் தலைவர் ஸ்காட் கோட்லீப், ‘நாம் இப்போது இது ஒரு நிரந்தர நோயாக மாறுவதற்கான உச்சத்தில் இருக்கிறோம்” என்று அறிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், STAT News, ‘உலகளவில் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில், அந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாதவை என்பதால், தொழிலாள வர்க்கம் அவற்றை அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோய் குற்றகரமாக கையாளப்பட்ட முறை மீண்டும் நிகழ்வதை தொழிலாளர்கள் அனுமதிக்க முடியாது. அமெரிக்கா முழுவதும் குரங்கம்மையை அகற்றுவது மற்றும் பல தசாப்தங்களாக உண்மையில் இந்த வைரஸ் தொற்று நிரந்தர உள்ளூர் நோயாக உள்ள மற்றும் இந்த ஆண்டு இதனால் 70 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போன ஆபிரிக்க நாடுகள் உட்பட, உலகம் முழுவதிலும் இருந்து இதை ஒழிப்பது இன்னும் கூட சாத்தியமாகும். இப்போது கோவிட்-19 உடன் குரங்கம்மை நோயும் பரவி வருவதால், ஒவ்வொரு தொழில்துறையிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் இரண்டு நோய்தொற்றுக்களையும் முற்றிலும் நீக்குவதற்கு ஒரு உலகளாவிய ஒழிப்பு உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குரங்கம்மை மற்றும் கோவிட்-19 இரண்டு நோய்தொற்றுக்களையும் கட்டுப்படுத்த உலகளவில் ஒரேமாதிரியான பொது சுகாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும், அதாவது, பாரிய பரிசோதனை நடவடிக்கைகள், தீவிர தொடர்புத் தடமறிதல், உலக அளவிலான முகக்கவச கட்டுப்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்தொற்றுக்கு வெளிப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், அனைத்துப் பள்ளிகளும் தொலைநிலை கல்வி கற்பிப்புக்கு மாற வேண்டும் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்கள் தற்காலிகமாக மூடப்பட வேண்டும், மேலும் தொழிலாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் முழு வருமானப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குரங்கம்மை நோயை சில வாரங்களுக்குள்ளும், கோவிட்-19 தொற்றுநோயை இந்த ஆண்டின் இறுதிக்குள்ளும் உலகளவில் ஒழித்துவிட முடியும்.
கோவிட்-19 தொற்றுநோயின் இன்றியமையாத பாடம் என்னவென்றால், பொது சுகாதாரத்தின் அடிப்படை கொள்கைகள், அழிந்து வரும் முதலாளித்துவ அமைப்புடன் ஒத்துபோகவில்லை, ஏனென்றால் இது அனைத்து சமூகத் தேவைகளையும் பெருநிறுவன–நிதிய தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்கு கீழ்ப்படுத்துகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் ஆண்டில் உலகளவில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்து போயினர், அதேவேளை உலகின் பில்லியனர்கள் 5 டிரில்லியன் டாலர்களுக்கு அதிகமாக இலாபங்களைக் குவித்தனர்.
இந்நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே, கிட்டத்தட்ட ஒவ்வொரு உலக அரசாங்கத்தினாலும் செயல்படுத்தப்படும் கொலைவெறிக் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ள மற்றும் உலகளவில் தொற்றுநோயை நிறுத்த ஒரு சோசலிச பதிலுக்காக போராடி வந்துள்ள ஒரே அரசியல் போக்காக உள்ளது. பெருநிறுவனங்கள் சார்பாக தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்பச் செய்வதற்கான மிருகத்தனமான பிரச்சாரத்தை செயல்படுத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, தொற்றுநோய்க்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒழுங்கமைக்க ICFI, மே 2021 இல், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-FRC) தொடங்கியது.
இன்று IWA-RFC குரங்கம்மை மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டு நோய்தொற்றுக்களை நிறுத்தவும், அத்துடன் காலநிலை மாற்றம், விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவினங்கள், மற்றும் அணுசக்தி போர் அச்சுறுத்தல் ஆகியவற்றை நிறுத்தவும் போராடி வருகிறது. தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் இந்த உலகளாவிய நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பானது, கட்டுப்படுத்தக்கூடிய தொற்று நோய்கள் இல்லாத வாழ்க்கை உட்பட, தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு பயனுள்ள போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு தொழில்துறையிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.